Friday, October 10, 2025

 


உலகக் கவிகளின் உயிர்தேன் உன் உள்ளங்கையில்.

 உலக இலக்கியம் என்பதை எந்த அளவுகோல் மூலம் உணர்வது ?தமிழ் இலக்கியம் இந்திய இலக்கியம் உலக இலக்கியம் என்பனவற்றின் வேற்றுமை நிறங்கள் தான் என்ன?. தமிழிலக்கியம் இந்திய இலக்கியத் தரவரிசையில் எத்தனையாவது இடத்தில் இருக்கிறது? உலக இலக்கியத்தர வரிசையில் இந்திய இலக்கியம் ஏன் இடமின்றித் தவிக்கிறது?

 உலகத்தின் ஆயிரமாயிர மொழிகளில் தனது தாய்மொழியை மட்டும் முன் நிறுத்தி ஏனைய மொழிகளை உதைத்து வெளித்தள்ளும் நிகழ் தமிய இலக்கியக் களத்தில் எப்படி களமாடுதல் சாத்தியம். ஆதி தமிழின் திருமூலரும் ஒளவையும் வள்ளுவனும் பாரதியும் பதியவைத்த இலக்கிய பாரிஜாத மரம் தனது பூக்களை மேலைத் தேய இலக்கியக் களத்திற்கல்லவா சாய்ந்து கொட்டிக்கொண்டிருக்கிறது..

 இன்றைய இலக்கியத்திற்கான நோபல் பெற்ற லோஸ்லா கார்ஸ்ன ஹோர்ஹாய் 1985 ல் தான் எழுதத்துவங்கியிருக்கிறார். உலகத்தின் அழிவுப் பாதையில் தான் நடந்து கொண்டிருப்பதாக அறைகூவல் விடுக்கிறார். நமது தமிழ் இலக்கிய சொற் சிக்கனத்தை உடைத்துச் சுக்கு நூறாக்கி ஆயிரமாயிர வார்த்தைகள் கோர்த்த ஒற்றை வாக்கியத்தை உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார். நாற்பதாண்டுகளாய் ஒரு வாக்கியத்தை சொல்லிக்கொண்டிருப்பவரின் வார்த்தைகள் நோபல் கமிட்டியாரின் காதில் விழுகிறது.

சொற்சிக்கனம் படைப்பறம் தனித்துவம் எனும் போலி தமிழ் வார்த்தைகளில் இருந்து முற்றாக ஒதுங்கிய ஹங்கேரியின் பின் நவீனத்துவ எழுத்து யதார்த்தத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கி ஒங்கி ஒற்றை வாக்கியமாய் ஒலித்திருக்கிறது. அப்படி ஒலிக்கச் செய்த லோஸ்லா கார்ஸ்னஹோர்ஹாயின் ஒரு ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட ஹங்கேரி மொழிக் கவிதையின் ஆணிவேர் திருமூலரின் ஒரு பாட்டில் இருக்கிறதென்பது அதிரச் செய்யும் நிஜம். உருவத்திற்கும் அருவத்திற்கும்  நடுவில் சுற்றும் உலகத்தை இயங்கியல் தத்துவமாய் தந்து சென்றவர் திருமூலர்.. எப்படியெங்கிறீர்களா…அவரின் ஒரு சோற்றைப் பதம் பார்க்கப் படியுங்கள்..இலக்கிய விருந்தின்  தரம் புரியும்..

காயப்பை ஒன்று சரக்கு பலவுள

மாயப்பை ஒன்றுண்டு மற்றோர் பையுண்டு

காயப்பைக்கு உள் நிறை கள்வன் புறப்பட்டால்

மாயப்பை மன்னா மயங்கிய வாறே…

[திருமூலர்]

லோஸ்லா கார்ஸ்னஹோர்ஹாயின் ஒரு கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன். இது மொழியாக்கமோ மொழி மாற்றமோ மொழி பெயர்ப்போ இல்லை…

 எனதனைத்தும் ஏன் என் உருவம் உட்பட

என்னைவிட்டு உருவப்படப்போகிறது…

 புயலில் சிக்குண்ட ஒற்றை மர இலைகளென…

 என் கண்முன்னான மலைகள்

என் கண் காணாத காடுகள்

நான் நடந்த நடந்திராத பாதைகள்

என் காதுகளில் வந்தமர்ந்து

சதா கத்திக்கொண்டிருக்கும்

வெளி நாட்டின் பெளிமிங்கோ பறவைகள்…

உள் நாட்டின் வானம்பாடிகள்..

அனைத்தும்

ஒரு நாள் கொலைசெய்யப்பட்டு

பதப்படுத்தப்பட்டிருக்கக்கூடும்

 எனது உடைகள் எனது நிழல்

நீங்களளித்த விருதுகள்  நான் வளர்த்த தாடி

என் பெற்றோர்கள் என் அரங்கன்

நான் படித்த பகவத் கீதை திருமூலர் தேசிகர் ராமானுஜர்

திஜரா தஸ்தாவஸ்கி தஸ்தாவேஜ்கள் 

பாடப் புத்தகங்கள் கோணார் உரைகள்

கல்கி விகடன் குமுதம் காலச்சுவடு கணையாழி

நான் சுற்றிவந்த ப்ராகரங்கள் வாழ்ந்த அக்ரஹாரங்கள்

 நான் அமர்ந்த தேனீர்கடை  நீள் மரப்பலகைகள்

வகுப்பறைத் தரைகள் டூரிங்க கொட்டகை மணல்கள்

வாழ்ந்த வாடகை வீடுகள் சொந்த அரண்மனை

உத்யோக இடங்கள் உறவினர் வாசல்கள் 

ஊர்சுற்றிய பொழுதுகள்

இன்னும் இன்னும் அனைத்தும்

அதனதன் அர்த்தங்களை இப்போது இழந்து நிற்பதால்

 அவைகளை எப்போதோ எடைக்கு விற்றுவிட்டேன்…

 அதை வாங்கியோன் தந்த பேரீச்சம் பழங்களை

இதோ என் கால எறும்புக்கூட்டம்

சூழ்ந்து அரித்து துகளாக்கி 

தூக்கிச் செல்லத் தொடங்கிவிட்டது..

 இதோ இப்போது எஞ்சியிருக்கும்

உடைகளற்ற அழுக்காகிப் போன ஆணுடலும்

எதிர்காலத்தைப் பார்க்கும் சக்தியற்ற

பஞ்சடைந்த கண்களும் எப்போது வேண்டுமானாலும்

நின்றுவிடப்போகும் இருதயமும்

கையிலிருந்து எந்நேரமும் நழுவி விழப்போகும் கைபேசியும் 

ஒட்டியிருக்கும் ஒருசில கவரி உரோமங்களையும் கூட

உதிர்த்துவிடப்போகிறேன்..

 எப்போதென்று கேட்கிறீர்களா…?

 எப்போதெனக்கு நோபல் தருவார்களோ அப்போதிலிருந்துதான்…

 ராகவபிரியன்

 


No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...