உன் ஆணவச் சிரிப்பை
என் தொடர்வண்டியின்
ஜன்னலோரம் நின்று
நிகழ்த்திக் காட்டுகிறாய்...
உன் சிரிப்பிலிருந்து உதிர்கிறது
பின்பக்கம் பாதரசம் பூசப்பட்ட கண்ணாடி..
மெல்ல நகரத்தொடங்கிய
காலத்தின் மெளன தொடர்வண்டியை
துரத்தியபடி ஓடி வருகிறாய்..
நான் அமர்ந்திருப்பது வரலாற்றின் வண்டி..
அதில் நீ பயணிக்க வேண்டுமெனில்
முன்பதிவு செய்திருக்க வேண்டும்..
இதோ வண்டி நகரத்தொடங்கிவிட்டது..
ஓடும்வண்டியில் தொற்றி ஏற
உனக்கு அனுமதியில்லை...
தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பதால்
வண்டி மட்டுமல்ல
வரலாற்று மாடு கூட மண்டியிடாது..
திடீரென தும்பறுத்து
கையில் கண்ணாடியுடன்
நடைமேடையில்
என் வண்டியை ஏன் துரத்துகிறாய்..
உன் தொடர் எதிர்ஓட்டத்தின்
மூச்சு முட்டும் அச்சிறும் அப்போதில்
ஒரு முறை உன் முகத்தைப் பார்த்துக்கொள்..
உன் சிரிப்பிற்கான
என் வழுக்கை வரலாற்றின் எச்சம்..
என் மூதாதையரின் பரம்பரைச் சொத்து அது..
நீ ஏன் பொறாமைப் படுகிறாய்..?
உன் எழுத்துக்களில்
உன் தலைமுடியின் அடர்த்திகூட இல்லையே..
என்ன செய்வது..?
போகட்டும்..
இதோ வரலாற்றின் அடுத்த வண்டிக்காக
காத்திருப்போரை
பயணச் சீட்டு பரிசோதகர்
ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்...
நடைமேடை அனுமதிச் சீட்டாவது
வாங்கியிருக்கிறாயா..?
நீ வாங்கிய விருதுகள் அங்கே ஏற்கப்படாது..
தெரியுமா உனக்கு...
காலத்தின் இக்கொடிய துயரப் பொழுதில் தானா
நடைமேடை பலகையில்
தூங்கிக்கொண்டிருக்கும் பிச்சைக்காரன்
விழித்தெழ வேண்டும்..
தயை கூர்ந்து
அவன் முன் உடைந்த கண்ணாடியை
உயர்த்திவிடாதே..
அதன் கூர்முனையைப் பார்த்து
உன் வார்த்தைகளென நினைத்து
அவன் சிரித்துவைக்கப் போகிறான்..
நீ அட்டகாசமாய் சிரித்தது
உன் சுயவிளம்பரத்திற்காகத்தான்
என்பதை நடைமேடைச் சித்தர்கள்
நன்கு அறிவார்கள்..
தொடர் வண்டி நிலையங்களில்
தொடர்ந்து ஒலிக்கும்
வண்டி வருவதற்கான மணியோசையை
உச்சியில் தொங்கும்
தேவாலய மணியோசையால்
தடுப்பது கடினம்...
புரிந்து கொள்..
கால வண்டியில் எவர் வேண்டுமானாலும்
பயணிக்கலாம்..
ஆனால் வரலாற்று வண்டியில்
ஜன்னல் இருக்கை கிடைக்க
முன் பதிவு அவசியம்..
ராகவபிரியன்
No comments:
Post a Comment