Tuesday, April 14, 2026

 






கால யதார்த்தம்...தத்துவ சிறுகதை

-----------------------------------------------

பஞ்சப்பராரியாய் கோவில் வளாகங்களில் சுற்றித்திரிந்தவரை இன்று பராரி வளாகமுனி என எல்லோரும் அழைக்கிறார்கள்..

தங்களின் குழப்பங்களுக்கு மனப்பிறழ்வுகளுக்கு தீர்வு வேண்டி மக்கள் அவரைத் தேடி வரத் தொடங்கினார்கள்..

வாழ்வின் அலைச்சல் எப்போது முடியுமென்பதுதான் அனைவரின் கேள்வியாகவும் இருந்தது..

அப்படித்தான் பாணபாண்டியும்  அலைந்து திரிந்து அன்று தேடிக் கண்டுபிடித்து அவர் முன் விழுந்து வணங்கினான்.. கைகட்டி வாய்பொத்தி பவ்யமாய் அவர் முன் நின்று கொண்டிருந்தான்..

ஐந்து தலை நாக பிரதிமையை குளிப்பாட்டி இல்லை இல்லை அபிஷேகங்கள் செய்து கொண்டிருந்தார் பராரிமுனி... தாமிர கிண்டியிலிருந்து ஒரு உத்தரணி தண்ணீரை நாகத்தின் மேல் ஊற்றுவார். பிறகு எழுந்து சென்றுவிடுவார். கோவிலை ஒருதரம் சுற்றி வருவார்.. மீண்டும் அபிஷேகத்தைத் தொடர்வார் பராரி வளாக முனி...

அன்று முனி இவன் பக்கம் திரும்பவே இல்லை.. 

பாணபாண்டி மனதளவில் குழம்பிப் போய் இருக்கிறான். வாழ்வின் யதார்த்தங்கள் பதார்த்தங்களுடன் ஒத்து வராத ஒருவித ப்ராஹ்மெண்டேஷன் மன நிலையில் இருக்கிறான். அதனால் பராரிமுனியின் சீடராக தன்னை மாற்றிக்கொள்ள இப்போது அவர் முன் நின்று கொண்டிருக்கிறான்.

வளாக முனி ஒவ்வொரு முறை வளாகத்தைச் சுற்றும் போதும் பாணபாண்டியும் அவர் பின்னால் சுற்றுவான்..

சட் டென அபிஷேகத்தை நிறுத்தினார் முனி..

தம்பி இங்கே சீடர்களுக்கான வேலை எதுவும் காலி இல்லை.. நீ முதலில் உன் சந்தேகத்தை உன்னிடமே கேட்டுக்கொள். பதில் இல்லை எனில் என்னிடம் கேள் என்றார்..

சுவாமி..வேலையற்ற பட்டதாரியான எனக்கு என் வீட்டில் சோறு போடுகிறார்கள்.. வெறும் அரிசிச் சோறும் காய்களற்ற குழம்பும் தான். அது ஏன் என்பதுதான் எனக்குள் உறுத்தும் கேள்வி...ஆனால் சம்பாதிக்கும் என் தந்தைக்கு குழம்புடன் உருளைக்கிழங்கு கார வதக்கல் வைக்கிறார்கள்.. இது நிலை நிறுத்தப்பட்ட உண்மை.. அதுமட்டுமல்ல.. இது என் தகப்பனின் அதிகாரதின் மேலான கேள்விகளற்ற குவிப்பு நிலை... எனக்குள் விடையற்றிருப்பதால் அதற்கான தீர்வு தேடி குருவே தங்களிடம் வந்திருக்கிறேன்..

பராரி வளாக முனி பாணபாண்டியின் கேள்வியில் மட்டுமல்ல பாண்டித்யத்திலும் பதறித்தான் போனார்..

மெளனமாக மீண்டும் நாகப் பிரதிமையின் மேல் உத்தரணியால் தண்ணீர் ஊற்றத் தொடங்கினார்...

எழுந்து கோவில் வளாகம் சுற்றி ஓடிவரத்தொடங்கினார்..

பாணபாண்டியும் அவர் பின்னால் ஓடத் துவங்கினான்..

சட் டென நின்றவர்...

தம்பி இப்போது நீ உன் வீட்டிற்குப் போ..நாளை மதிய உணவிற்கு நான் வருகிறேன். உன் தந்தையுடன் நாம் உணவருந்துவோம்.. அப்போது பரிமாறப்படும் பதார்த்தங்களுடனான யதார்த்தங்களின் உண்மை நிலையைப் பார்க்கிறேன்.. பிறகு உன் தகப்பனின் அதிகார குவியலை கலைத்துவிடுகிறேன்.. அங்கிருக்கும் காலங்காலமாக உலவும் ஐரணியை என் நாகத்திற்கு படைத்துவிடுகிறேன்.. இனி வாழ் நாள் முழுவதும் உனக்கு உருளை கார வத்தல் வண்டி வண்டியாய் கிடைக்கும் போய் வா.. என்றார்..

பாணபாண்டிக்கு பேரமைதி சித்தித்தது போன்ற மன நிலை..உருவானது... அவனின் மனக்குளத்தில் ஐந்து தலை நாகம் நீந்திக்கொண்டிருந்தது... ஆனால் அதன் மேல் கல்லெறியும் உந்துதல் கட்டுபட்டிருந்ததை உணர்ந்தான்..

முனிவரின் தவ ஆற்றல் இப்போது அவனுக்கு மாய யதார்த்தத்தை உணர்தியது...

அடுத்த நாள் பராரிவளாகமுனிக்கு பாண்டியின் வீட்டில் ஆன்மீக அற்புத வரவேற்பு கிட்டியது...

எல்லோரும் மெளனமாக அமர்ந்திருக்க உரையாடலற்ற தெய்வீக நிலை அங்கே நிலவத் தொடங்கியது.. 

முனி மெள்ள ஒரு தாம்பாளத்தில் நாக பிரதிமையை வைத்தார்... பாண்டி வேகமாக ஒடி கிண்டியில் நீர் நிரப்பி வந்தான்..

வளாக முனி அபிஷேகங்களைத் தொடங்கினார்.. அபிஷேகத்திற்குப் பின்னான நைவேத்யங்களை பிரதிமையின் முன் வைக்கக் கட்டளையிட்டார்..

அன்னம் காய்களற்ற சாம்பார் மற்றும் உருளைக்கிழங்கு கார வத்தல் ஒரு சட்டி நிறைய வைக்கப்பட்டன..

ஒரு உத்தரணி பிரதிமையின் மேல் ஊற்றுவார் முனி..பின் சாதம் ஒரு உண்டை சாம்பார் கலந்து உருட்டுவார். அப்படியே வாயில் போட்டுக்கொள்வார்.. பிறகு ஒரு தேக்கரண்டி உருளைக் கார வதக்கல் அவரின் வாயிற்குள் செல்லும்..

தம்பி நாகம் நீந்தும் குளத்திற்குள் மீன்கள் வாழ்வதில்லை.. அதனால் நாகப்பிரதிமை இருக்கும் என் நெஞ்சக் குளத்திற்குள் நைவேத்தியங்களை வீசிக்கொண்டிருக்கிறேன்.. எனச் சொல்ல எல்லோருமே சிலிர்த்துப் போனார்கள்..

இப்படியே மாலைவரை தொடர்ந்து கொண்டிருந்தார்..

இந்த தெய்வீக செயல் மூலம் பராரி வளாக முனி நைவேத்யம் அத்தனையையும் காலி செய்துவிட்டிருந்தார்.. நாகமும் குளத்தின் ஒரு மூலையில் உடல் சுருட்டி உறங்கச் சென்று விட்டிருந்தது..

பாணபாண்டியும் அவரின் தகப்பனாருக்கும் இப்போது நிலை நிறுத்தப்பட்ட ஒரு நிஜ உண்மை புரிந்தது... பராரியின் முன் வைக்கும் நைவேத்யங்கள் அதிகாரக் குவிப்பை ஒரு ஒட்டுப் பருக்கையின்றி காலிசெய்துவிடுமென புரிந்து கொண்டார்கள்..

இருவருமே இப்போது பராரி வளாக முனியின் சீடர்களாக அவரின் கோவில் வளாக மடத்தில் இணைந்து கொண்டு நைவேத்யங்களை தயார் செய்யத் தொடங்கினார்கள்.. 

வளாக முனியும் நாக நைவேத்யம் செய்து கொண்டே இருந்தார்..பாணபாண்டிக்கும் அவரின் தகப்பனாருக்கும் பதார்த்தங்கள் கிட்டாத பாஸ்டிச் கால யதார்த்தம் மெல்ல உருவம் காட்டத் தொடங்கியது..

பாணபாண்டியின் அன்னை நிம்மதியாய் ஏற்கனவே சமைத்தவற்றில் ஒரு சிறு பங்கை தனியாக அவளுக்கென்று எடுத்து வைத்திருந்ததால் நிம்மதியாக பசியாறி உறங்கச் சென்றாள்..

ராகவபிரியன்

Friday, April 10, 2026

 






தமிழ் மண்ணின் பேசும் மொழி பல உட்பிரிவுகளைக் கொண்டது. சென்னைத் தமிழ் நெல்லைத் தமிழ் கொங்கு தமிழ் தஞ்சைத் தமிழ் என இன்னமும் பிராந்திய பிரிவுப் பெயருடன் மரனமற்ற வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறது.. பிரிவு எனும் சொல் இங்கே பேசும் மொழியைச் சொல்கிறதே தவிர மானுட வாழ்வியலையோ இல்லை அது சார்ந்த வேறெந்த பிரிவுகளையோ செப்பவில்லை.. இந்த மண்ணின் மானுட வாழ்வியலோடு இலக்கியத்தையும் எவ்வித பிரிவுகளுமற்று தன்னோடு இணைத்த தனித்த வாழ்வுமுறைமையைக் கொண்டிருந்தவர்கள் தான் பண்டைய மதராஸ் ராஜதானியெனும் தக்கான பீடபூமி மாந்தர்கள்..
அப்படியான தென்னிந்திய தமிழ் மக்களின் கலாச்சார மொழிபற்றுடன் கூடிய ஒற்றுமை வாழ்வியலை சிதைக்க வந்தவன் தான் ஆங்கிலேயன். 1856 வரை இந்தத் தமிழ் மண்ணில் ஆங்கில வழி பயிற்றுப் பள்ளிகள் பரவலாக காணப்படவே இல்லை. தொழில் சார்ந்த பிரிவுகளுக்கு சாதீய பிரிவுகளென பெயரிட்டு ஊதிப் பெரிதாக்கி மக்களைப் பிளவு படுத்தி ஆட்சியதிகாரத்தை அன்று தக்க வைத்து கொண்டான் ஆங்கிலேயன். அதே உத்தியைப் பயன்படுத்தி இன்று தமிழ் மொழியின் பேச்சு வழக்கின் பிரிவுகளை உள் வாங்கி மக்களையும் பிளவுபடுத்தி இன்னமும் ஒன்றுபட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளும் ஆங்கில வழி பயிற்றுப் பள்ளிகளையும் விதைத்துவிட்டே சென்றிருக்கிறான் கல் நெஞ்ச மேலைத் தேய மொழிவெறியன்.. அவ்வாறான ஆங்கில வழி பயிற்றுப்பள்ளிகள் இந்த மண்ணின் ஒவ்வொரு அங்குலத்திலும் கால் ஊன்று கர்ஜிக்கச் செய்பவர்கள் இன்றைய அரசியல் வாதிகள் மட்டுமல்ல ஆட்சியாளர்களும் தான்..அப்படியான உத்தியால் உருவாக்கப்பட்ட பிரிவினை வார்த்தைகள் தான் திராவிடன் ஆரியன் என்பது மட்டுமல்ல.. வடமொழி தென்னாட்டு மொழி என்பதும்..
இது போன்ற மொழியின் பேச்சுவழி உட்பிரிவுகளை பயன்படுத்தி மதமாற்றம் மட்டுமல்ல மொழிமாற்றமும் செய்தவன் தான் கொடுமைக்காரன் கால்டுவெல் போப். அந்த வித்தையை அதிகாரத்திற்கு பயன்படுத்தி இத்தமிழ்மண்ணை இன்னமும் நிரந்தரமாக பிளவுபடுத்தினால் நிரந்தரமாக ஆட்சிசெய்யவியலும் என உணர்ந்த கட்சிதான் இப்போது மொழியரசியலை தேவைப்படும் போதெல்லாம் கையிலெடுக்கும் கட்சி.. அந்தக் கட்சியின் முன்னாள் முதல்வர் ஒருவர்
கண்ணகிக்கு ஓர் சிலை..கால்டுவெல் போப்புக்கும் சிலை..
என முரசொலியில் அன்று எழுதியது இன்னமும் நெருடலைத் தந்துகொண்டிருக்கிறது.
கண்ணகிக்கு சிலை என்பது இம்மண்ணின் கலாச்சார நீட்சியை அதன் புனிதத் தன்மையை தலைமுறைகள் உணர்ந்து கொள்ள என்பதைப் புரிந்துகொள்ளலாம் ஆனால் அதனோடு சேர்த்து கால்டுவெல் போப்பிற்கும் சிலை எனும் உள் நோக்க பிளவுபடுத்தும் அரசியல் உத்தியை இன்னமும் தமிழ் மக்கள் புரிந்துணர்வு கொள்ளவே இல்லை என்பதுதான் கவலைக்குரிய நிஜம்..
1856 முதல் 1900 வரையிலான காலகட்டம் தமிழ் இலக்கியம் ஓலைச்சுவடியிலிருந்து அச்சிற்கு இடம்பெயர்வதற்கான பாய்ச்சல் நிகழ்த்திய காலம்.. ஆனால் அப்பாய்ச்சலால் குறுகிய பிரிவுகளற்று அடர்வு நிறைந்திருந்த தமிழ்மொழி பிராமண பேசும் மொழி பிராந்திய பேசும் மொழி என பிளவுபட்டு பரிதாபகரமான இடத்தில் இன்று நின்று கொண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறது. அதுமட்டுமல்ல அது அனாதையாய் அரசியல் வாதியின் அல்லது ஆளும் கட்சியின் ஆதரவை அண்டி நிற்பதுதான் கொடுமை..அதைவிடக் கொடுமை தமிழிலக்கியம் பிழைப்பு வாத பிரிவினை மொழியை இன்று உள்வாங்கியதால் அதன் நிலைத்து நிற்கும் கால்கள் மெலிந்து சூம்பி தள்ளாடுவதைக் காண சகிக்கவில்லை..
என்ன செய்வது? பிரித்தாளும் உத்தியை ஆட்சி செய்ய பயன்படுத்தக் கற்றுத் தந்தவன்ஆங்கிலேயன். அதே உத்தியால் இன்று இந்த மண்ணின் கலாச்சாரத்தை மொழியை மக்களை ஏன் அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக்கூட பிரித்தாளும் தந்திரத்தை அதிகாரத்திற்காக கையிலெடுப்பதுதான் டாஸ்மாக் மற்றும் இலவசங்கள்..
இந்தக் கேவலமான அரசியலைப் புரிந்து கொண்டால் மக்கள் மதப் பிரிவுகளை முன்னிருத்தி செய்யும் அரசியலையும் புரிந்து கொள்ளுதல் சுலபம்.. தமிழ் அல்லாத தாய்மொழி கொண்டவர்கள் இந்த மண்ணில் அரபு மற்றும் ஆங்கில கலாச்சாரத்தை புகுத்தியது மட்டுமல்ல நம் மொழியின் வளமையையும் சிதைத்து நம்மிடையே நிரந்தர பிரிவை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்..
மேலைத்தேயத்திலிருந்து வந்த மொழிகளை நாம் வெறுப்பதில்லை. மாறாக இந்த மண்ணில் முகிழ்த்த மொழிகளை அதாவது இந்தி பார்ஸி குஜராத்தி கொங்கணி சம்ஸ்கிருதம் எனும் இந்திய மொழிகளை வெறுக்கச் சொல்லும் கீழ்த்தரமான அரசியலை தமிழ் மக்கள் புரிந்து கொண்டாக வேண்டும்.. இப்போது கூட தமிழ் மண்ணில் ஜெர்மன் ப்ரெஞ்சு மற்றும் ஏனைய மேலைத்தேய மொழிகள் கற்பிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன..
ஆதலால் இந்த மண்ணின் மொழியை தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் ஒற்றுமையாய் மொழிப்பிரிவினை பேசுவோரை எதிர்த்து ஒன்றுபடவேண்டிய அவசியம் இப்போது கட்டாயமாகிறது..
சிந்திப்போம் செயல்படுவோம்.. இம்மண்ணை மொழியால் பிளவுபடுத்தும் உத்தியை பொடிப்பொடியாய் தகர்த்தெறிவோம்..
ராகவபிரியன்




Wednesday, April 8, 2026


 


                                     Soon on Print.. For copies contact whatsup...9442536901...

Tuesday, April 7, 2026

 





ராகவபிரியனின் நகைச்சுவைக் கதைகள் விரைவில் புஸ்தகா மூலம் அச்சில்..

முன் பதிவு செய்வோர் இப்போதே ரூ 500/  9442536901 எனும் எண்ணிற்கு அனுப்பி விவரங்களை முகவரியுடன் இதே எண் வாட்ஸப்பில் அனுப்பினால் விரைவில் ஏற்கனவே அச்சில் வெளிவந்த ராகவபிரியனின்  மேலும் சில புத்தகங்களுடன் உங்களுக்கு வந்து சேரும்..

நன்றியும் அன்பும்...உங்கள் ராகவபிரியன்


 




வெப்ப நாட்களின் கொடுமை சொற்களை மீறிச் சுடுகிறது.. 

ஆவிபறக்கும் சாலையில் ஒருவன் உடலை வதைத்து கைவண்டியையும் வாழ்வையும் இன்னமும் இழுத்துக்கொண்டிருக்கிறான்..

புங்க மரத்தடி திப்பி நிழலில் சில ஆவினங்கள் அசைபோட்டபடி இளைப்பாறுகின்றன..

அவற்றின் மேல் உதிர்கின்றன வெம்பி வதங்கிய நூற்றாண்டு கால சந்தைச் சருகுகளும் பூக்களும்..

ஆவின வெளிமூச்சு வெப்பப் புகையில் கோடை மானுட மேதைமையின் வடிவம் காட்டுவதை நுண்ணிய பார்வையில் காணவியலும் அப்போதில்

காய்ந்து வெடித்த மருத வயல்களில் முண்டாசு சுற்றியபடி                      வாழ்வாதார மந்தைகளை ஒழுங்குபடுத்தும் மேய்ப்பர் சிறுவர்கள்     கைக்கம்புடன் கோடைவெப்பத்தை ஒழுங்கு செய்ய ஓடத்துவக்கம் நடந்தேறுகிறது...

ஆங்கே வெடித்துச் சிதறும் மூங்கில் அரிசிகளை உருவியெறிந்த                எழுத்தின் காலவெப்பத்தின் முதுகில் பச்சை மூங்கிலால்  பளாரென                        விளாச நினைக்கிறான் தானணிந்த மகுடத்தை சரிசெய்யும் மானுடன்..

வன்னி மரத்திலிருந்து தொங்கும் ஈர தாவணி போர்த்திய இளநீர் குலைகள் ஒன்றிரண்டு இருசக்கர வாகனவோட்டிகளை நிறுத்தத்தான் செய்கிறது..

எனினும்

நெடுஞ்சாலை கிராம ஓர பொருளாதாரத்தின் அடித்தளத்தின் பொக்கைகளை நீர் மோரும் சர்பத் தள்ளுவண்டிகளும் கரணையால் நிரப்பிக் கொண்டிருக்கையில்..

தற்காலிகமாக மெல்ல கவிகிறது மேற்கு வான பகலவனின் கோடை....

ஒரு வெப்ப நாளின் சுடு சொல் மாலையிலோ இரவிலோ சூடிழக்காமல் கணன்றுகொண்டிருக்கிறது..

ஒற்றை விரலால் பூத்திருந்த நீறெடுத்து நெற்றியில் தடவியபடி தலைசாய்க்கிறான் மானுடம்..

இனி கோடைத் தூக்கம் ஆழ்ந்த உறக்கத்தின் அளவீடுகளை கேலிசெய்யத்தான் போகிறது..

ராகவபிரியன்



Sunday, April 5, 2026

 




கோடையிடி
அதைப் பதிவு செய்யத்தான்
அவன் கைபேசியுடன் நடக்கத் தொடங்கினான்..
நிஜம்மான ஒன்றை
இயற்கையின் சப்தமிடும் சக்தியை
தூரத்துச் சப்தத்தின் துல்லியத்தை
பதிவு செய்தே ஆகவேண்டும் அவனுக்கு..
அவனால் எட்டவியலா உயரத்தில்
மேகங்கள் மோதிக்கொள்ளத் துவங்கின..
கைபேசியைத் திறந்தான்..
மின்சக்தி குறைவாய் இருப்பதைச் சொல்லியதது..
ஓடினான்..
போதை உந்தித் தள்ளிய வேகமுடன்..
ஆங்கொரு
அரசாங்க மதுபாணக்கடையொன்றின்
மின்னூட்ட அமைப்பானில்
மின்னூட்டியை பாங்கெனச்செருகினான்..
அங்கே மின்சார வினியோகம் தடைபட்டிருந்தது..
இடியோசை கடகடவென ஒலிகூட்டி
தன் உறுமலைத் தொடங்கியது..
விருட்டென கைபேசியை உருவியவன்
ஒலிப்பதிவு பொத்தானை அழுத்தினான்..
கைபேசி இறந்து நெடுநேரம் கடந்திருந்தது..
இறந்த காலத்தின் கைபேசியுடன்
அவனுக்கு முன்னான உலத்தின்
இடியோசையுடன் கைகுலுக்க
இல்லை இல்லை
கோடையிடியைப் பதிவு செய்ய....
காத்திருக்கிறான்..
இன்னமும் மதுபானக் கடையில்
யுகங்களைக் கடந்தும்..
ராகவபிரியன்

Wednesday, April 1, 2026

 









மனிதரோ மிருகங்களோ 

உலவவியலாத

வனாந்தரங்களை

விழைகிறதென் மனம்..


பறவையோ விமானமோ 

செயற்கை இயற்கை கோள்களோ

வேறெந்த வானுறுப்புகளோ அற்ற

வெளியில் நடக்கச் சொல்கிறது

என் பாதங்கள்..


நதியும் கடலும் குளியலறைகளும்

நீரூற்றுகளும் மழையும் 

பொழிபனித்துளியும் அற்ற

இன்னபிற நீரெனும் எதுவுமற்ற 

இடங்களில் தான் 

குளிக்கத் துணிகிறது 

இப்பாழும் வேர்க்குமுடல்..


விடுதிகளோ வீடோ

விருந்தோம்பலோ 

வீதி உணவகங்களோ

விழாக்கால அன்ன தானங்களோ அற்ற

ஊரொன்றில் தான்

அதீதமாக பசிக்கிறதெனக்கு..


ஆனாலும் 

சுடுகாடுகளோ இடுகாடுகளோ 

அற்ற இடங்களில்

மரணிக்கவேண்டாமெனச் சொல்லும்

மனச்சொல்லின்

பொருள் மட்டும் புரியவில்லையெனக்கு..


ராகவபிரியன்







  கால யதார்த்தம்...தத்துவ சிறுகதை ----------------------------------------------- பஞ்சப்பராரியாய் கோவில் வளாகங்களில் சுற்றித்திரிந்தவரை இன்ற...