அது 1982 ம் வருடம். பிகாம் முடித்துவிட்டு வேலையில்லா பட்டதாரியாய் கோவில் காளையென வீதிகளில் திரிந்துகொண்டிருந்த காலம். உதயம் கையெழுத்துப் பிரதி மாத இதழ் ஆசிரியர் என்ற தகுதியும் ஒன்றிரண்டு கவிதைகள் நாளிதழ்களில் வெளிவந்திருந்த இறுமாப்பும் திமிள்களாய் இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டிருந்த பொழுதுகள்..கூர்த்த கொம்புகளில் எவராவது புல் சுற்றிவிடுவார்கள் பசியாறலாம் என்றலைந்த அலட்சியமான நாட்கள்..
இவனின் திறமைமீது நம்பிக்கை கொண்ட திருவாரூர் கலைக்கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் ஹூசைன் இவனிடம் சிபாரிசு கடிதம் கொடுத்து சென்னைக்கு அனுப்புகிறார். யாரிடம் தெரியுமா.. ?ஒருதலை ராகம் தயாரிப்பாளர் இப்ராஹிம் அவர்களிடம் தான். அதுபோது நம்பிக்கை இமயமலை போன்சாய் வடிவில் இருந்தாலும் இவன் கையில் வாங்கியவுடன் தன் உயரத்தைத் தானே மீறத் தொடங்கியது.
கடிதத்தில் அடுத்த படத்திற்கு பாடல் எழுத இச்சிறுவனை பயன்படுத்திக்கொள்ளுமாறு எழுதியிருக்கிறார்...அது கண்ணதாசன் எனும் பாட்டுப்பகலவன் மறைந்த சினிமா வானின் சாயங்காலப் பொழுதின் சிவப்பு நாட்கள்..
இப்ராஹிம் அவர்களின் முகவரியில் கால் வைக்கிறான்.. இவனின் கிழிந்த சட்டைப் பையில் நாளிதழில் வெளியான கவிதை நகல்களும் உதயம் கையெழுத்துப் பிரதி ஒன்றும் மூலதனமாய் மடித்து வைக்கப்பட்டிருந்ததை ஒரு முறை தொட்டுப்பார்த்துக் கொள்கிறான்..
எக்மோர் ரயில் நிலையத்தின் பழைய கரி எஞ்சினுக்கு தண்ணீர் நிரப்பும் குழாயில் ஒழுகிக் கொண்டிருந்த சொட்டருவியில் குளித்த ஈரம் தலையில் மட்டுமல்ல இமைமுடிகளிலும் தங்கி காயாமல் இருந்தது. ஆனால் வயிறு காயத்தொடங்கியிருந்தது..
வெள்ளை லுங்கியும் முண்டா பணியனுமாக இப்ராஹிம் வெளியில் வருகிறார்.
இவன் கடிதத்தை அவரிடம் கொடுக்கிறான்..
அடுத்த படத்திற்கான பாடல் கதைவசனம் இசையமைப்பு ஒளிப்பதிவு என அனைத்தையும் இவன் தலையில் கட்டப்போவதாக அந்த ஒரு நொடியில் கனவு காண்கிறான்.
கதாநாயகி ரூபா தன் தோழிகளுடன் திருவாரூர் கல்லூரியின் மாடியிலிருந்து இறங்குவது போல் காட்சி அமைப்பதாக கற்பனை செய்கிறான். இறங்குவது போல் இருக்கக்கூடாது. ஏறுவது போல் இருக்கட்டும் என்று யாரோ உரத்துக் கத்துகிறார்கள்...
தம்பி ஒங்க பேரு என்னங்க...
இல்லைங்க...இன்னும் டீ கூட குடிக்கல..
சரி திருவாரூர்லேர்ந்து எப்புடி வந்தீங்க தம்பி..
அதற்குள் இப்ராஹிம் அவர்களுக்கும் இவனுக்குமான தேனீர் கொடுக்கப்படுகிறது..
சட் டென கோவில் காளைக்கு நந்தியென தகுதி உயர்வு கிடைத்துவிட்டதான பெருமித பார்வையுடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தவன் சொன்னான்..
No comments:
Post a Comment