Thursday, January 15, 2026

 




முந்திரிப் பொங்கல்...சிறுகதை..

பொங்கல் அன்று உத்தியோகம் அவனுக்கு. அதுவும் மனித வாடையற்ற அத்துவானக் காட்டின் நடுவில் இருக்கும் ஒரு தொடர்வண்டி நிலையத்தில். சக ஊழியர்கள் அவன் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவனென்பதால் அவனை டூட்டியில் விட்டுவிட்டு திருனெல்வேலி நாகர் கோவில் எனும் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள்.. அது கைபேசி உடலுடன் ஒட்டப்படாத காலம். தொலைக்காட்சிப் பெட்டி என்ற சொல்கூட வழக்கில் இல்லாத நகர்த்த கடினமான காலமது..காட்டிற்குள் தனித்து விடப்பட்ட ஒரு மானின் மருண்ட பார்வையுடன் நிலையத்தைச் சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தான்.
நேற்றிரவிலிருந்து அவன் பணியில் இருக்கிறான். விடியல் பனிச்சூழலும் பசியும் நகர்த்தவியலா நேரமும் அவன் தோளில் தேனீர் அருந்தியாக வேண்டிய சுமையை ஏற்றத் தொடங்கியது. சுமைகள் நாவிலிருந்து தோளில் ஏறுகையில் ஒருபோதும் சறுக்குவதில்லை..
நிலையத்தின் அருகில் இருப்பது ஒரே ஒரு தேனீர் கடை.. அது காலை ஐந்து மணியிலிருந்து ஆறு மணிவரைதான் இயங்கும். மாலையிலும் அப்படித்தான். வேறு வழியில்லாமல் அங்கே அவன் தேனீர் அருந்தும் போது அதில் கலந்திருக்கும் எருக்கஞ்செடியின் காய்ந்த குச்சிகள் வெளியிடும் புகையின் நெடி தேனீரில் கலந்திருக்கும். அது தேனீரின் சுவையை முந்திக்கொண்டு மூக்கின் வழி முதலில் வயிற்றிற்குள் சென்றுவிடும். பிறகான அவனின் அடுத்த பசியின் காலம் நிர்ணய எல்லைக்களைத் தாண்டி உணவு கிடைக்கும் வரைநீண்டுகொண்டேயிருக்கும்....
இன்று பொங்கல் என்பதால் அந்தக் கடையின் வாசலில் கோணிக் கதவு தொங்கியபடி இருந்தது. கோணிக்கதவுகளை உடைத்துக்கொண்டு உட்செல்ல எந்தத் திருடனும் முயற்சி செய்வதில்லை. அடுத்த வண்டி வருவதற்கு இன்னும் அரை மணி இருக்கிறது. அதற்குள் கடைக்குள் யாராவது இருந்தால் தேனீர் கிடைக்குமா என வினவும் திருட்டுத் தனத்துடன் கோணியை சற்று விலக்கி உள்ளே பார்த்தான். அங்கே சுள்ளிப் புகையின் நெடி மட்டும் தான் மீதமிருந்தது. சுள்ளிப் புகையின் நெடியை மீறி அடிக்கும் மனித வாசம் தூக்கி வர காற்று ஒரு சில கிலோ மீட்டர்கள் பயணித்தாக வேண்டும்.
மீண்டும் திரும்பி நிலையத்திற்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினான்.. தூரத்தில் பொங்கலோ பொங்கல் என்று கோரஸாக கத்தும் சப்தம் கேட்டது. அது இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நான்கைந்து குடிசைகளே உள்ள மாவூர் கிராமத்திலிருந்துதான் கிளம்பி வந்திருக்க வேண்டுமென நினைத்தான்.
அவன் அம்மா பொங்கல் வைத்தால் வெல்லம் கலந்த பொங்கல் வைக்க மாட்டாள். சீனிச் சர்க்கரை கலந்த இனிப்புத் தூக்கலான பொங்கல் தான் வைப்பாள். பால் பொங்கி வழியும் போது பொங்கலோ பொங்கல் என அவனும் உடன்பிறந்த பத்து சோதரங்களும் சப்தமிடுவார்கள்..எல்லோருடனும் சேர்ந்து கத்தும் போது அந்தச் சப்தத்தை காற்று பத்து கிலோமீட்டர் வரை கூட தூக்கிச் செல்லும்.
பொங்கல் பானையைச் சுற்றி விபூதியால் அம்மா பட்டை போட்டிருப்பாள். பானையைச் சுற்றி ஒற்றை மஞ்சள் மற்றும் இஞ்சிக் கொத்து கட்டியிருப்பாள். அவன் உத்தியோகத்திற்குப் போனபின்புதான் எல்லோருக்கும் வயிறு நிறைய சர்க்கரைப் பொங்கலும் வெண்பொங்கலும் கிடைக்கத்தொடங்கின. மண்பானை வெங்கலப்பானையாக உருமாற்றம் கொண்டு புதுப்பிறப்பெடுத்தும் நடந்தது.... புது பொங்கல் பானைக்கு இஞ்சிக்கொத்தும் மஞ்சள் கொத்தும் கூட அப்போதிலிருந்துதான் கிடைத்தன.
அவனுக்கு முன் அவன் அண்ணன் சம்பாதிக்கத் தொடங்கியிருந்தான். அப்போது இந்த தொடர் வண்டிநிலைய ஊழியன் வேலையில்லாமலிருந்த பாலைநில வாழ்வின் காலம். வேலையற்ற பண்டிகை காலங்களில் சுற்றுகையில் கடைகளும் மனிதமும் இதயமும் மூடியே கிடப்பதைப் பார்த்திருக்கிறான்.
இவன் எங்கெங்கோ சுற்றிவிட்டு மாலை தொடங்கும் போது வீட்டிற்கு வருவான். ஒரு சின்ன டபராவில் கொஞ்சம் பொங்கல் மீதம் வைத்திருப்பாள் அம்மா. எவ்வளவு குறைவான அளவெனினும் அதில் முந்திரிப் பருப்பின் ஒரு சின்னத் துண்டாவது துழாவினால் கிடைக்கும். கண்ணீர் பொங்க அம்மா இவன் அதை சாப்பிடும் போது பார்த்துக்கொண்டிருப்பாள்.. இவனுக்கும் கண்ணீர் குபுக்கென பொங்கும்..
இன்றும் அந்த நினைவில் இவன் கண்ணீர் துளி ஒன்று பொங்கி கன்னத்தில் வழிந்தது..
கண்ணைத் துடைத்துக்கொண்டான். நிலையத்தை அடைந்தான். சோர்வாய் தனது இருக்கையில் அமர்ந்தான்.
ஐயா... எனும் குரல்..
யாரு... கேட்டபடியே வெளியில் வந்தான்.
அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் தேனீர் கடையின் உரிமையாளாரான முதிய பெண்மணி அமர்ந்திருந்தாள். அவர் அருகிருக்கும் மாவூரைச் சேர்ந்தவர்.
என்னங்க... அவன் குரலின் சப்தம் அவனுக்கே கேட்கவில்லை..
ஐயா.. கொஞ்சம் பொங்கல் சாப்டறீங்களா... எனக் கேட்டுக்கொண்டே கொண்டு வந்திருந்த அலுமினிய தூக்கிலிருந்து ஒரு கரண்டி வெல்லச் சர்க்கரைப் பொங்கலை இலையில் வைத்துக் கொடுத்தாள்..
கண்ணீர்த் துளி சிந்த கை விரலால் பொங்கலைத் துழாவினான் அவன்..
உள்ளே முந்திரிப் பருப்பு எதுவும் கிடைக்கவில்லை..
அத்துவான மனித வாடையற்ற இவ்விடத்தில் அதுவும் இந்த தமிழர் திரு நாளில் ஒரு கரண்டி பொங்கல் கொடுப்பது அன்னை ஆதிபராசக்தியாகத் தான் இருக்க வேண்டுமென நினைத்தான்...
ரொம்ப நன்றிங்க. ஒரு ரயில் வந்திட்டிருக்கு. போனப்பறம் சாப்டறேன்.. சொல்லிவிட்டு கையில் பச்சைகொடி சிகப்புக்கொடிகளை எடுத்துக்கொண்டு நடைமேடையில் நடக்கத் தொடங்கினான்..
அம்மா அவனுக்காக மீதம் வைத்திருக்கும் ஒரு சிறு துண்டு முந்திரிப்பருப்பின் சுவை அவனைச் சுற்றிவரத் தொடங்கியது..
ரயில் போனதும் அந்த ஆதிபராசக்தி கொடுத்த வெல்லச்சர்க்கரைப் பொங்கலையே பார்த்துக்கொண்டிருந்தான்..
இப்போது எங்கிருந்தோ எறும்புகள் மெல்ல ஒவ்வொன்றாய் பொங்கலைச் சுற்றிவரத் தொடங்கின...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...