Monday, February 23, 2026

 








முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இங்கே முதலில் பதிவிட்டுவிடுகிறேன்.. பல் துலக்குகிறோமோ இல்லையோ எக்ஸ்ட்ரா லார்ஜ் என அச்சிடப்பட்ட பற்பசையைத்தானே தேர்ந்தெடுக்கிறோம்.. ஆனால் இப்பதிவு எக்ஸ்ட்ராவாக எதையும் கொண்டிருக்கவில்லை.. மரணமற்ற நிலை என்பதைத் தவிர. மரணமற்ற வாழ்வு எக்ஸ்ட்ரா தானே.. எட்செட்ரா இல்லையே.. போகட்டும்..
கீழே உள்ள பத்தி.. வேதங்களுக்கான ஆச்சாரியர் ஸ்ரீ ராமானுஜரின் பாஷ்யத்திலிருக்கும் ஒரு சில வரிகளைக் கொண்டது.அதில் ஆச்சாரியர் இப்படிச் சொல்கிறார்..
"இது போலவே மானுட வாழ்வும் அதன் தொடக்கத்தை உணராதது. வேதங்களைப் போல தொடக்கங்கள் அற்றதெனவும் அதைக் கூறலாம்.. மானுடம் மரணமற்ற வாழ்வையும் கொண்டுள்ளதெனின் அதுதான் நிஜம். ஆனால் எல்லா மானுடங்களும் மரணத்தை வெல்லவியலுமா எனில் இல்லையென்றே கூறுதல் தகும். அப்படியான மரணத்தை வென்று மரணமற்று வாழும் புகழ் வாழ்வு இன்னொரு பிறப்பற்றிருக்கிறது. எனினும் மீள்பிறப்புள்ள வேறொரு மானுடம் இந்த மரணமற்ற நிலையுடைய மானுடத்தை அனுபவித்துணர்தல் கடினம்..
இதைத் தான் வள்ளுவம் தோன்றிற் புகழொடு தோன்றுக எனப் பேசியிருக்க வேண்டும்..
அழியாப்புகழ் மானுடத்தின் மறுபிறப்பின்மையை காட்டுகிறதென ஆச்சாரியார் சொல்வதில் உள்ள உண்மைத் தன்மை பொட்டில் அறைகிறது.. அட்டகாசமான அந்த அழியாப் புகழ் ஆச்சாரியரின் மரணம் வென்று இன்றும் பேசும் சம்ஸ்கிருத ஸ்லோகத்தை அப்படியே தருகிறேன்..
"ததா ப்ரக்ருதோப்யனாதிதா ஸ்ருதிபி:ப்ரதிபாதிதா
அஜாமேகாம் லோஹிதஸூக்லக்ருஷ்ணாம் வஹ்நீம்
ப்ராஜாம் ஜனயந்தீம் ஸரூபாம் அஜோ ஜ்யேகோ
ஜூஷமாணே நுஸேதே ஜஹாத்யேனாம் புக்தபோகாம்
ஜோந்ய:"
இந்தப் பதிவின் அவசியம் என்ன என நீங்கள் முணுமுணுப்பது காஞ்சிவரை கேட்கிறது.. சொல்கிறேன்..
காஞ்சி மாநகரம் இவனுக்கு புதிது.. இம்மாநகர திசைகள் கூட இன்னமும் இவனுக்குப் புரிபடவில்லை. இம்மா நகர பாதைகளில் இவனின் பாத அணியின் சப்தம் இவனுக்கே புதிதாகக் கேட்கும். காஞ்சித் தெருக்களின் பள்ளங்கள் அனைத்தையும் இவன் இன்னமும் தாண்டியிருக்கவில்லை. இங்கே இவனின் தற்காலிக தங்குமிடத்தின் ஒரு சிலரைத் தவிர மற்றனைவரின் முகமும் இவனுக்குப் பரிச்சயமற்ற புத்தம் புதிது..
இப்படியான சூழலில் ஒரு சிறிய தேவை வேண்டி இணையத்திலிருந்து ஒரு கைபேசி எண்ணைத் தேடி எடுக்கிறான். அவரின் பெயர் கிஷோர் என திரையில் ஓடுகிறது.. மீனற்ற குளத்தில் தூண்டில் வீசுபவனின் முகபாவத்தோடு எதிர்முனை கிஷோரின் குரலுக்காக இவன் காத்திருக்கிறான்.
இவனின் தேவைக்கான சேவையைத் தரும் அறிமுகமற்ற கிஷோர் கருணையுடன் இவனின் தேவையைக் கேட்டறிகிறார். ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அவிவிடத்திற்கான வழியையும் அவரே விளக்கி உடனே வந்து சந்திக்குமாறு சொல்கிறார். பாலைப் புயலில் தடம் தொலைத்த நாடோடியைப் போல இவன் அவரைத் தேடி இருசக்கர வாகனத்தில் அவர் சுட்டிய இடம் அடைகிறான்.
முன்பின் பார்த்திராத அவர் இவனை தூரத்திலிருந்தே கையசைத்து அருகில் வரச் சொல்கிறார். எதிர்பாராமல் சட் டென கடந்து செல்லும் தொடர்வண்டியை நோக்கிய குழந்தையின் கையசைப்பைக் கண்ட தொடர்வண்டியின் மகிழ்வு இவனிடம் தாவிக்கொள்கிறது. குழந்தையின் கையசைப்பு வண்டியறியாது. ஆனால் அவரின் கையசைப்பு இவனுக்குத் தான் என்பது புரியவே இவனுக்கு நெடு நேரம் பிடித்தது..
அவரின் அருகில் சென்று..
"தம்பி [அவர் ஒரு சென் இசட் இளைஞர். ] என்னை உங்களுக்கு எப்படி அடையாளம் காண முடிந்தது.."
"சார் நீங்கள் ஒரு வ்ரைட்டர். உங்கள் எழுத்துக்களை படித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் திருச்சியைச் சேர்ந்தவர்...சரிதானே"
அது மட்டுமல்ல இவனின் பிரமிப்பு அடங்குவதற்குள் இவனது ராசி நட்சத்திரம் நடப்பு திசை பிறப்பில் செல்லு போக மீந்த தசா வருடங்கள் [ இவைகளை மட்டும் தான் சொல்லவில்லை] சொல்லி வியப்பின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். இனி எவரும் இவனை உச்சியிலிருந்து தள்ளிவிட வேண்டியதில்லை. புகழின் உச்சியை இவனின் கண்களுக்குக் காட்டிவிட்டார்அத முகமறியா வாசகர். இனி தலை கனத்து இவன் தன்னைத் தானே தள்ளிக்கொண்டு கீழே விழுந்து மரணமுற்றாலும் ஆச்சரியப்படத் தேவையே இல்லை..
மரணமற்ற வாழ்வின் தொடக்கத்தை இவன் கண்களுக்கு அரங்கன் காட்டிவிட்டான். ஆச்சாரியன் சொல்லிச் சென்ற இன்னொரு பிறப்பற்ற நிலையைப் இவன் புரிந்து கொண்ட தருணம் அது.. சரி தானே நட்புகளே..
அதனால் தான் ஆச்சாரியன் மற்றொரு மானுடம் மரணமற்ற இன்னொரு மானுட நிலையைப் புரிந்துகொள்வதில்லை என்று சொல்கிறார் போலும்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ராகவபிரியன்..

Saturday, February 21, 2026

 


A Sixty-Seventh Orbit: Notes from the Existential Ledger
-------------------------------------------------------------
Birthday wishes—
are not balloons,
not sugar-script on melting cream—
But they are entries
in the damp ledger of existence.
Sixty-seven revolutions around this cosmic
not merely survival—
but the faint graphite mark
of having nudged society
a millimeter to the left of silence.
Thus, the tribe applauds.
Thus, the species signs its receipt.
Wishes are an existential fact.
This is true.
And yet—
in the basement of metaphysics
they are contraband,
smuggled across the doctrine
of negated meaning.
Friedrich Nietzsche left us a hammer
to test these idols—
to ask whether gratitude
is only a polished echo
inside an empty cathedral.
Once, in the culture of blue-lit walls,
a single word—
Thanks—
was flung like a coin
into the algorithmic fountain.
That was a strategy.
That was etiquette.
That was my former self.
But the law of metaphysical refusal
whispers:
even that lone syllable
confesses insufficiency.
Jean-Paul Sartre trembles in the margins—
Existentialism does not narrate utility.
It does not invoice purpose.
A wish
is an acknowledgment of being.
Gratitude
is the use-value of that acknowledgment.
So this year
I refused the shortcut.
I resolved
to answer each wish separately—
as if diving
through the heart’s salt ocean,
descending past coral barricades
that guard the market-value of meaning,
to gather pearl-shells
of white gratitude
from the seabed of refusal.
And here,
in this sixty-seventh sunrise,
through timelines, doorways, inboxes,
through the electric veins of distance
and the warm nearness of breath—
you have thickened
the gravity of my being.
To each luminous mind
that pressed a word upon my name,
I offer a pearl—
white, untheorized,
gleaming from the soft tissue of thanks.
From the artesian spring
that erupts beneath the ribcage,
I draw a copper cup
of living water—
let your eyes drink.
Yes—
I confess a quiet pride
in being able to return
even a fraction
of the weight you placed upon my existence.
And listen—
From now on
Your Ragavapriyan will not die.
Nor will his script.
Ink has outlived flesh before;
letters are stubborn fossils
that refuse burial.
May Ranganatha’s grace
fall upon every generous heart
that uttered a wish into my orbit.
Forever—
gratitude.
Forever—
love.
yours affectionately...
Ragavapriyan Tejaswi

Friday, February 20, 2026






 பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்பது இருத்தலிய நிஜத்தின் பதிவேடுகள்..அறுபத்தேழு ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்ததற்காக மட்டுமல்ல.. சமூக வாழ்வியலில் ஏதோ ஒரு சிறு பங்களிப்பையாவது பதிவு செய்ய இயன்றததற்காகவும் தான் சக மானுடத்தின் வாழ்த்துக்கள் கிடைக்கின்றன. வாழ்த்துக்கள் இருத்தலிய நிஜம். இது மெய்.. ஆனால் மெய்யியலில் வாழ்த்துக்கள் என்பது இடு பொருள் மறுப்பின் தத்துவமாக பார்க்கப்படுகிறது. நீட்ஷே அதனால் தான் இருத்தலிய நிஜத்தின் அவசியம் பற்றிய தத்துவங்களை விட்டுச் சென்றிருக்கிறார்..

வாழ்த்துக்களுக்கு கடந்த ஆண்டுகளில் ஒரே பதிவின் மூலம் நன்றி எனும் ஒற்றை வார்த்தையை பதிவு செய்துவிடுவது முக நூல் பண்பாட்டுத் தளத்தின் உத்தியாக பார்க்கப்பட்டது. அதனால் உங்கள் ராகவபிரியனும் அதையே பின்பற்றினான். ஆனால் மெய்யியல் தத்துவத்தின் பொருள் மறுப்பின் விதி, இந்த ஒற்றை நன்றி எனும் வார்த்தையைக்கூட இருத்தலிய போதாமையை உணர்த்துவதாகக் கூறுகிறது..
ஜீன்பால் சாத்ரே இருத்தலியல் என்பது இருத்தலின் பயனைச் சொல்வதல்ல என்று சொல்லிச் சென்றது அதிர்வைத் தருகிறது.. வாழ்த்து என்பது இருத்தலிய நிஜத்தின் ஒப்புகை பதிவு. நன்றி என்பதே இருத்தலிய நிஜத்திற்கான ஒப்புகைப் பயன்.
ஆதலால் இவ்வாண்டு ஒவ்வொரு வாழ்த்துக்கும் தனித்தனியாக நன்றியைப் பதிவு செய்ய முடிவானது. இருத்தலிய நிஜத்தின் ஒப்புகைப் பதிவை பதிவு செய்தாக வேண்டுமெனும் தீர்மாணம் இதயக் கடலின் நீர்மூழ்கியென மிதந்து அடியாழப் படுகை வரை சென்றது. அங்கே மெய்யியலின் பொருள் மதிப்பு விதியை புறந்தள்ளும் பவளப் பாறைகளை புறம் தள்ளி நன்றி எனும் முத்துச் சிப்பிகளை அள்ளிவர இயன்றது..
இந்த அறுபத்தேழாவது பிறந்த நாளில் முக நூல் மூலமும் நேரிலும் உள்பெட்டியிலும் மின்னஞ்சல் மூலமும் உங்கள் வாழ்த்துக்களால் இந்த எளிய உங்கள் ராகவபிரியனின் இருத்தலிய நிஜத்தை கனக்கச் செய்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி எனும் வெண்மை பளீரிடும் உள்ளத்து முத்துவை பரிசளிக்கிறேன்..
இந்த எளியவனின் கண்ணில் பட்ட வாழ்த்துக்களுக்கான நன்றியினை உளமார்ந்து நெஞ்சின் ஆழத்திலிருந்து பீறிட்டடிக்கும் நன்றி ஊற்றிலிருந்து நன்றி எனும் ஒரு செம்பு உயிர் நீரை உங்களின் கண்கள் பருகத் தர இயன்றிருப்பதில் நிஜம்மாகவே பெருமிதம் கொள்கிறேன்..
இனி உங்கள் ராகவபிரியன் ஒருபோதும் மரிக்கப்போவதில்லை.. அவனின் எழுத்தும் தான்..
வாழ்த்துக்கள் தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அரங்கன் அருள் கிட்ட பிரார்த்திக்கிறேன்..
என்றென்றும் நன்றியும் அன்பும்..
ராகவபிரியன் தேஜஸ்வி..

Thursday, February 19, 2026

 






அன்பு நண்பர்களுக்கு அட்வான்ஸ் அறுபத்து ஏழாவது பிறந்த நாள் வணக்கங்கள். எதிர் வரும் உங்கள் ராகவபிரியன் தேஜஸ்வியின் அறுபத்து ஏழாவது பிறந்த நாளை முன்னிட்டு அனாமிகா ஆல்பபெட்ஸ் மூலம் வெளியிடப்பட்ட கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு புத்தகங்களின் பிடிஎப் [PDF] வேண்டுவோர்.. உங்கள் ராகவபிரியனின் கைபேசி எண் 9442536901 க்கு பிறந்த நாள் அன்பளிப்பாக ரூ 100 அனுப்பி உங்களின் இமெயில் முகவரியையும் அனுப்பித் தந்தால் உடன் பிடிஎப் [PDF] புத்தக வடிவம் என்றென்றும் நன்றியுடன் அனுப்பி வைக்கப்படும். தங்களின் மேலான ஆதரவை நாடும் அன்பன் ராகவபிரியன்
அச்சுப் புத்தகங்கள் வேண்டுவோர் அனாமிகா ஆல்பபெட்ஸ் பதிப்பக நிறுவனர் எனது இலக்கிய அன்னை திருமதி லதா ராமகிருஷ்ணன் அவர்களை lathaa.r2010@gmail.com எனும் இமெயில் முகவரியில் தொடர்பு கொண்டு ரூ 270/ மற்றும் தபால் செலவு சேர்த்து ரூ 300/ அனுப்பித் தந்தால் புத்தகங்கள் உங்கள் முகவரி தேடி வாசற் கதவைத் தட்டும்.
எந்தப் புத்தகச் சந்தையிலும் உங்கள் ராகவபிரியன் தேஜஸ்வியின் புத்தகங்கள் கிடைக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகளாவிய வாசகர்களுக்கு உங்கள் ராகவபிரியனின் எழுத்துக்களை இலவசமாக கொண்டு சேர்ப்பது தான் இலக்கு. ஆனால் சூழலிய வாழ்வியல் பொருளாதார போதாமையால் ஆகக் குறைந்த தொகையை எழுத்துக்களின் மேல் சுமத்த வேண்டியிருக்கிறது..
நன்றியும் அன்பும்...உங்கள் ராகவபிரியன் தேஜஸ்வி..






 காலையிலிருந்தே சுணக்கமெனும் ஆக்டோபஸ் இவனைச் சுற்றி நீந்திக்கொண்டிருந்தது.. அது தன் அத்துனை கரங்களையும் வளைத்து இவனை சாய்வு நாற்காலியில் சாய்த்துவிட்டு சுற்றிக்கொண்டிருந்தது..

இன்று சிவராத்திரி மற்றுமல்ல இந்தியா பாக்கிஸ்த்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியும் கூட.. காக்கையின் கூட்டில் தந்திரமாய் வளர்ந்து கூட்டையே கூகையின் கூடாக மாற்ற நினைத்து அதனால் துரத்தப்பட்ட கூகையையுடனான போட்டி நாள் இது.. இனி சாய்ந்திருத்தல் என்பது சவத்தின் இயல்பென உள் மனம் சொல்லத் தொடங்கியது..
சாய்ந்திருத்தல் அரங்கனின் வரம்.. ஓயாது இரவெல்லாம் விபூதி பூசி அலைவது சிவனின் விதி..இன்றோ சிவனின் எழுச்சி இரவான சிவராத்திரி.. காஞ்சியின் அத்துனை கோவில்களிலும் பக்தியின் எழுச்சி தூண்டப்பட்ட நாத்திக இருளகற்றும் புனிதப் பணியின் புண்ணியத் திருவிழா.. அதனால் பல்லாயிரக்கணக்கான மானுடக் கூட்டம் வீதிகளிலும் கோவில்களிலும் பக்தி மேலிட நெற்றியெல்லாம் விபூதி பூசிக்கொண்டு கூடிக்கொண்டே இருக்கிறது..
சில நாட்களாக வெஸ்ட் இண்டீஸின் இந்த உலகக் கோப்பையின் எழுச்சிப் போட்டிகள் இவனை சாய்வு நாற்காலியிலிருந்து மீளெழவியலாமல் செய்துகொண்டிருந்தது.. இன்றும் வெஸ்ட் இண்டீஸ் போட்டி இருப்பதால் கையைக்கூட தலையின் பின்புறம் வைக்காமல் முற்றுமாய் சாய்ந்து கொண்டான் இவன்.. சாய்தல் இனிது.. சாய்ந்து காணும் வெஸ்ட் இண்டீஸின் வெற்றி சுகம்..
கண்கள் தானாக மூடிக்கொள்ள சட் டென மஹாலெக்ஷ்மியின் அன்னையும் பிருகு முனிவனின் மனைவியுமான கியாதியின் தலையைத் துண்டிக்க விருட்டென எழுந்த அரங்கனின் எழுச்சி நினைவில் வந்தது..அன்றுபிருகுமுனி அடாத சாபமிட்டான். அச்சாபம் பீடிக்க அரங்கன் காஞ்சியின் வீதிகளில் அலைந்தான். அரங்கனின் திருவடி பட்ட.... அரங்கன் பூசித்த அரிசாப பயம் தீர்த்த ஈஸ்வரனின் கோவில் சட் டென இதய ஆழியின் அத்துனை நீரையும் உறிஞ்சி எடுத்தது.. அங்கே சுற்றிக் கொண்டிருந்த சுணக்க ஆக்டோபஸ்ஸின் கரங்கள் வலுவிழந்து ஒரு நொடி இவனை விடுவித்தது..
துள்ளி எழுந்து தொலைக்காட்சிப் பெட்டியின் ஒளிர் திரையை இருளாக்கினான். ஒளியைத் தடுத்தல் இயலும்..இருளைத் தடுத்தல் கடினம்..காக்கைகள் கூட்டமாய்ச் சுற்றும்...கூகைகள் இருளில் தனித்தே அலையும்.. இது சிவனின் இருளகற்றும் இரவு.. சிவராத்திரி.. கூகைகள் கூட்டைவிட்டு வெளியே வர யோசிக்கும் ஒரே ஒரு இரவு இது.. பாக்கிஸ்த்தான் மைதானத்திற்கே வர தயங்கப்போகும் இரவும் கூட..
இன்றைய கச்சி ஏகம்பனின் சிவ இரவு முழுவதும் கலை நிகழ்ச்சிகள் பக்தி கலாச்சாரத்தை அதன் மீளெழுச்சியை உயிர்பிக்க அரங்கேறப் போகிறது. பாக்கிஸ்த்தானும் அதன் பயங்கரவாதமும் தோற்றோடப்போகிறது.
இன்று இந்தக் கலாச்சார நிகழ்வுகளில் இவனின் பெயர்த்தியையும் பங்களிக்க அரங்கன் வாய்ப்பளித்திருக்கிறான். பெயர்த்தியோ அதற்கான வேடமிடும் கூடத்தில் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள்..
சற்று முன் அதாவது ஐந்து மணியளவில் பெயர்த்தியை அழைத்துவர பணிக்கப்படுகிறான் இந்த போட்டி சுகம் காண சாய்ந்திருப்பவன்.. சாயங்காலங்களில் எந்தப் போட்டிக்காகவும் சாய்ந்திருத்தல் கூடாதென நம் கலாச்சார மரபுகள் போதிப்பதால் மட்டுமல்ல ஆக்டோபஸ் கரங்கள் வலுவிழந்ததாலும் கூட விருட்டென எழுகிறான் இவன்.. எழுந்துதான் ஆகவேண்டும் இவனுக்கு. வேறெந்த வாய்ப்பும் இல்லை இப்போது.
உடன் கோபமுற்ற இவன் ஆன்மீகமா தேசபக்தியா எனும் இரு கேள்விகளை இவன் முன் வைக்கப்பட்ட சர்க்கரையில்லா பாலில்லா தேனீர் கோப்பையிடம் வைக்கிறான்.. வேடமிடம் கூடம் ஹரிசாப பயம் தீர்த்த ஈஸ்வரனின் கோவிலருகில் இருக்கிறதென அறியத் தருகிறார்கள். பெயர்த்தியை அழைத்து வந்துவிட்டு தேனீர் அருந்தலாம் எனும் கட்டளையையும் வீசுகிறார்கள்.. பிஞ்சில் காக்கையினதும் கூகையினதுமான அடையாள வேற்றுமையை எவர் அறிவார்கள்..
அரங்கன் கியாதியின் தலையைத் துண்டிக்க ஆதிசேடச் சாய்விலிருந்து எழுந்த நிகழ்வு இவனையும் எழ வைக்கிறது... விருட்டென எழுகிறான்..சாய்ந்திருப்பதின் சுகம் அறியாதவர்களின் அறியாமையை அரங்கன் மன்னிக்கட்டும் என மனம் சொன்னது..
இப்போது மணி ஆறறையைத் தாண்டி விட்டது... பெயர்த்தியின் நடன அலங்காரம் நிறைவு பெற அழைத்து வந்தாகிவிட்டது.. வீட்டிலுள்ள அனைவரும் சிவராத்திரியின் சிவபக்தியுடன் இந்த ஆன்மீக மண்ணின் கலாச்சார மீளெழுதலைக் காணச் சென்றாகிவிட்டது..
இச்சவத்திற்காக அப்போது வைக்கப்பட்ட தேனீர்த் தண்ணீரிலிருந்து நீராவி கூட எழுந்தடங்கி காலங்கள் கடந்துவிட்டிருந்தது. இப்போதின் சாய்வு நாற்காலி இவனின் சாய்வை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ள...இதோ தொலைக்காட்சிப் பெட்டியை உசுப்புகிறான்..
இனி இந்திய வீரர்கள் எடுக்கும் ஒவ்வொரு விக்கெட்டிலும் ஒவ்வொரு ரன்னிலும் நம் தேசீயக் கொடி தேசபக்தியை இந்த மண்ணின் ஆன்மீக எழுச்சியை இந்த இரவில் வலுவுடன் உயர்த்தி பறக்கச் செய்யட்டும்..
அரங்கனுக்கு ஹரிசாப பயம் தீர்ந்துவிட்டது..
தேனீர் ஆறி பச்சைத் தண்ணீராகிவிட்டது..
ரவி சாஸ்த்திரி மைக்குடன் மைதானத்தில் வந்தாகிவிட்டது..
நம் கலாச்சார எதிரிகளின் சாய்வின் நேரமும் தொடங்கிவிட்டது..
தேசபக்தி இனி உறங்கப் போவதில்லை..
இவனுக்கான தேனீரும் இனி ஆறப்போவதில்லை..
ஜெய் ஹிந்த்.. ஹர ஹர மஹாதேவா..
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
ராகவபிரியன்

 




இவ்வாழ்வின்

அதீத வெப்பத்தில்
என் சாயங்காலங்கள்
வியர்த்துக்கொண்டே இருக்கின்றன..
சட் டென பொட்டுப் பொட்டாய்
நினைவெச்ச ஆலம் கட்டிகள்
சில் சில் என
வாழ்வின் ஏதோ ஒரு குளிர் நாளின்
கண்மறைந்த மேகத்திலிருந்து
குதித்து
எப்போதாவது
என் முற்றமெங்கும் மகிழ்வென
கறையத் தொடங்கும்..
அன்றாட கஞ்சி
பனிக்கான கிழிந்த கம்பளி
பனைமட்டை விசிறி
அனைத்தும் வெப்பம் கூடி
கொதிக்கும் இப்போதில்....
அரிதான என் ஆலங்கட்டியுடன்
காதல் வானில்
சுற்றித் திரிந்த மேக நாட்களின்
எண்ண மிச்சம் வேறு
மின் கிட்டிலின்
சுடு நீர் தொடக்கத்தின்
பொட்டுப் பொட்டாய்
முகிழ்த்து
இதய மூடியில் மோதத் தொடங்குகிறது..
ஏழைக் குழந்தை
வாங்க நினைத்த கரடி பொம்மையை
கடைக்காரன்
எவ்வளவு நாட்கள் தான்
விற்காமலிருப்பான்..
ஆலங்கட்டி மேகங்கள்
என் முற்றத்தின் மீது
கரையாமல்
நின்று பொழிய
காற்றுக்காரன்
எல்லா நாட்களிலும்
அனுமதிப்பானா என்ன?
ராகவபிரியன்

Saturday, February 14, 2026

 




Across the square road’s

entire body,
the operational blood of vehicles
has leaked and hardened
into maps of wounds.
From those stains,
an incurable rot-smell rises—
and inside that quarantined fragment,
in a tea shop,
Two aberrations meet:
a dense-haired poet
who obeys the shepherd’s invisible whistle,
and a bald professor
who has never learned the grammar of fear.
Inside the teacup’s private cosmos,
in the drifting foam-continents,
The professor’s eyes wander,
begging truth
to surface like a drowning god.
Meanwhile,
the thick-haired lunatic poet
inserts his forefinger into the cup
and releases the tea
drop by deliberate drop
onto the earth—
as though transfusing time
into soil.
Suddenly, he screams:
This road is real.
Death is real.
Signs are real.
But life is false.
Poetry is false.
The original is false—
only the copy survives.
At that exact fracture of a second,
a lorry passes—
dragging centuries under its wheels.
Epics, caught in its turning teeth,
are torn open.
A particle—
from a shredded page
of a grand Marxist epic
that once betrayed the herd
and preached the monarchy of the family—
falls, trembling,
into the spilled tea drops
and becomes sediment.
The professor watches it drown.
He begins to sip again—
his hand slowly caressing
his bald head,
as though remembering
the hair that history already executed.
Then the mad poet speaks:
You teach history.
I… convert accidents into poetry.
Man and woman—
all are chrysanthemums
flowering from the debris
of a love-accident.
You, who never understood this,
have failed
to instruct the Bodhisattva.
But I—
even in these fallen tea-drops—
can force
cactus-thorns to bloom jasmine.
Understand this, fool.
He screams.
Millions of wheels
continue to cross the road.
The sun and the moon,
confused at a sign reading
TAKE DIVERSION,
hesitate—
unable to abandon
their inherited orbits.
And still,
in this universe,
that tea corner
remains exactly where it was.
Only the square road
keeps extending—
without memory,
without mercy.
Somewhere,
an old king’s descendant
runs frantically,
spinning a planet on his finger,
shouting “Baa… Baa…”
trying to herd
the crossing animals
into obedience—
mistaking traffic
for destiny.
Ragavapriyan Thejeswi

Thursday, February 12, 2026


 

நாற்கர சாலையின்


உடலெங்கும் வாகனங்களின்

இயங்கு இரத்தம் வழிந்த
தடயங்கள்
ஆங்காங்கே கிடக்கின்றன..
அதிலிருந்து தீராத முடை நாற்றம்
வீசும் தனித்த பகுதியின்
தேனீர்க் கடையில்
சந்திக்கிறார்கள்
மேய்ப்பனின் கட்டளைக்குக் கீழ்ப்படியும்
அடர்முடி கவியும்
எதற்கும் அஞ்சாத
முடியிழந்த பேராசிரியரும்..
தேனீர்க் கோப்பைக்குள்ளான
பிரபஞ்சத்தில் மிதக்கும் நுரைகளில்
உண்மையைத் தேடியலைந்தன
பேராசிரியரின் கண்கள்..
அக்கொடும் சூழலியப் போதில்
அடர்முடிப் பைத்தியக் கவி
கோப்பைக்குள் ஆள்காட்டி
விரல் நுழைத்து
ஒவ்வொரு சொட்டாய்
நிலத்தில் சொட்டிக்கொண்டிருந்தான்..
திடீரென கத்தத் தொடங்கினான்...
இந்த சாலை உண்மை..
மரணம் உண்மை..
குறிகள் உண்மை...
ஆனால் வாழ்வு பொய்
கவிதை பொய்
அசல் பொய் ஆனால் நகல் உண்மை..
முடை நாற்றத்தை வாரியிறைத்தபடி
அக்காலத்தின் துளியொன்றின் கடலில்
சட் டென ஒரு லாரி கடந்து செல்கிறது...
அதன் சக்கரத்தினடியில்
சிக்குண்ட காவியங்கள்
பிய்த்தெறியப் பட...
மந்தையிலிருந்து பிரிந்த
இனத் தலைமையை எதிர்த்து
குடும்ப மன்னராட்சி
தத்துவத்தைப் போதிக்கும்
மகத்தான மார்க்ஸிய காவியப் பக்கத்தின்
கிழிந்த தாளின் துகளொன்று
சிந்திய தேனீர்ச் சொட்டுக்களில்
சிக்கிக் கொள்கிறது..
அதைப் பார்த்தபடியே
தேனீர் உறிஞ்சத் தொடங்கினார்
பேராசிரியர்...
வெட்டப்படுவதற்கு முன்னான
தன் வழுக்கைத் தலையைத் தடவியபடி..
அப்போதில் அப்பைத்தியக் கவி
நீங்கள் வரலாற்றைப் போதிக்கிறீர்கள்..
நானோ...விபத்துக்களை கவிதையாக்குகிறேன்..
ஆண் பெண் அனைத்தும் காதல் விபத்தின்
எச்சங்களில் மலர்ந்த சாமந்திகள்..
அதுவறியாத நீங்கள்
போதிச் சத்துவனை
போதிக்கத் தவறிவிட்டீர்கள்..
என்னாலோ
இங்கே சொட்டிய
தேனீர் சொட்டுக்களில் கூட
காக்கரட்டான் முல்லைகளை
மலர வைக்கவியலும்...
முட்டாளே புரிந்துகொள்...
எனக் கத்தினான்...
கோடிக்கனக்கான சக்கரங்கள்
சாலையைக் கடந்து கொண்டிருக்கின்றன..
ஆதவனும் நிலவனும்
டேக் டைவர்ஸன் எனுமிடத்தில்
வழிமாறி பயணிக்கத் தெரியாமல்
திகைத்துக்கொண்டிருந்தனர்..
இப்பிரபஞ்சத்தில்
இன்னமும்
அந்தத் தேனீர் கார்னர்..
அங்கேயேதான் இருக்கிறது..
நாற்கர சாலையோ
நீண்டு கொண்டே போகிறது..
யாரோ ஒரு முதிய
மன்னர் பரம்பரையின் மகன்
மந்தைகளை சாலையைக் கடக்கவைக்க
பே..பே...என கத்தியபடி
கோளொன்றைச் சுழற்றிக்கொண்டு
இங்குமங்கும் ஓடிக்கொண்டே
ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறான்...
ராகவபிரியன்

Wednesday, February 11, 2026

 




என் மரணத்தின் நாளில்

தூறிய சாரல் மழையில்
நனைந்த என் புத்தகங்களை
சிதையில் அடுக்குகிறீர்கள்..
செய்யுங்கள்..
அதற்கு முன் சிலவற்றைச்
சொல்லிவிடுகிறேன்..
என் மரணத்தின் பின்னான
பூத உடலின் முன்
எவரும் என் கவிதைகளை
வாசிக்கக் கூடாது..
என் உடல்மீது
காவீர் நீர் ஊற்ற
நீங்கள் லாக்கரில் இருந்து
எடுத்து வந்த
என் தங்கக் குடத்தை
என்னுடன் சேர்த்துக்
கொளுத்திவிடவேண்டும்..
என் அஸ்தியை
கரைக்கப்போகும்
கடற்கரை வரையான
உங்கள் பயணத்திற்கு
என் மகிழுந்துவை
பயன்படுத்தக்கூடாது..
எனக்கு இதுவரை
கொடுக்கப்படாத
ராயல்டியை கேட்டுவாங்கி
அதில் என்
நீத்தார் நினைவு நாளைக்
கொண்டாடக்கூடாது..
என் முக நூல் கணக்கில்
எவரும்
அஞ்சலிக் கவிதைகளை
பதிவிடக்கூடாது..
என் சிதையில் வைக்க
நீங்கள் வாங்கி வரப்போகும்
சந்தனக் கட்டை
ஒரு முறை
அசல் தானா என
உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்..
நகல் சந்தனக் கட்டைகளை
சிதையில் சேர்த்து
எனக்காக கண்ணீர் சிந்தினால்
என் கட்டை வேகாது..
புரிந்து கொள்ளுங்கள்..
ராகவபிரியன்



Saturday, February 7, 2026

இன்றைய தமிழிலக்கிய பிராமணீய அவலங்கள் புதைக்கப்பட்டவை. புதையுண்ட எதன்மீதும் நியாயமான பார்வைகள் செலுத்தப்படுவதில்லை. இறந்த தலைச்சன் பிள்ளைக் குழந்தையின் பிணத்தின் மீதான மாந்த்ரீக பார்வையும் தமிழிலக்கிய இயங்கியல் பார்வையும் புதையுண்ட பிராமணீயத்தை தோண்டியெடுத்து மை தயாரிக்கவியலுமா எனப் பார்த்துக்கொண்டிருக்கிறது..

பிராமணர்கள் மீதான கி,மு ஒன்றாம் நூற்றாண்டின் வரலாற்றுப் பார்வை ஊனக் கண்களின் குருட்டுப் பார்வை. அதை மார்க்ஸீய காலத்து தமிழிலக்கிய எழுத்துக்கள் அகழ்ந்தாராய்ந்து மீண்டும் இலக்கிய பிரிவினை மை பூசிய பொய்மெய்யியலை புகுத்தியது எழுத்திலயக்கிய கயமைத்தனமன்றி வேறென்ன? 

வரலாற்றுப் பார்வையும் பொருளியல் பார்வையும் இருகண்களின் விழித்திரைகளிலும் பதிவாகும் ஒற்றை பிம்பமாகத் தானே இருக்கவியலும்.. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குடும்ப அமைப்பியலில் அடுக்குகளை உருவாக்கியது. அவ்வடுக்குகளின் மரணமற்ற ஜீவிதத் தன்மையின் நீட்சியே இன்றைய சாதீய கட்டமைப்பின் நிஜ உள்ளடக்கம். பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் வேதியல் மாற்றமே சாதீய பிரிவுகளின் சமூகப் படி நிலைகள்...இன்றைய இடஒதுக்கீட்டு பொருளாதர ஏற்றத்தால் சாதீய படி நிலைகள் கலைத்து மீண்டும் மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் அடுக்கப்படத்தானே வேண்டும்.  புதைக்கப்பட்ட எந்தசாதி பிள்ளைகளிலும் உடன்பிறந்த குழந்தைகளின் அத்துனை மண்டையோடுகளையும் மாந்திரீகர்கள் தோண்டியெடுப்பதில்லை. தலைச்சன் பிள்ளையின் தலையிலிருந்துதானே மாயங்கள் செய்யும் மை தயாரிக்கவியலும்..என்பதை மாந்த்ரீகன் மறந்தாவிடுவான்..

தமிழிலக்கிய மார்க்ஸீய பொய்யான அமைப்பியல் பார்வை முதலாளித்துவம் மட்டுமே அவலத்தின் காரணியெனில் அது தலைச்சன் பிள்ளை மைவேலையென உரத்துச் சொல்லவியலும் தானே.. வரலாற்றின் திரிபுக் கத்தியால் மரணித்த பிராமணீய தலைச்சன் பிள்ளை மண்டையோட்டைத்தான தோண்டியெடுத்து  மை தயாரிக்கச் சொல்கிறது இன்றைய தமிழிலக்கிய இயங்கியல் தத்துவம். பண்டைய புரட்டுச் சொல்லான சாதீயத்தை தோண்டி எடுத்த பெளராணிக கூட்டம் பிராமணர்கள் அல்ல..என்பதை தற்கால சமூகம் அறிந்தே இருக்கிறது. .சமூக அறிவியலும் அறிவியல் சமூகமும் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளிகளை உடையதென்பதை எடுத்துச் சொல்லும் அவசியமே இன்றைய தொழில் நுட்ப உச்ச வாழ்வியல் சமூகத்திற்கு இல்லை.


உங்கள் இலக்கியப் பொய்களின் தெருவோரக் கடைகளில் சூழ்ந்திருப்போர் வாசகர்கள் அல்ல. அவர்கள் வாடிக்கையாளர்கள்..எந்தப் புத்தகமெடுத்தாலும் ஒரே விலைதான் என நீங்கள் கூவிக்கொண்டே இருங்கள்.. 

பொருளாதாரத்தின் பின் தங்கிய சமூகத்திற்கான காரணிகளை ஆராய்ந்தால் அது அரசியல் அமைப்பின் இயங்கியல் போதாமை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியென புரியும். எவ்வளவு ஆழமாகத் தோண்டினாலும் தமிழிலக்கியத் தோண்டுவோனின் துழாவும் கைகள் ஆதி பிராமண தலைச்சன் பிள்ளை மண்டையோட்டைத்தான் காலம் காலமாய் தேடுகிறான் என்பது தற்கால தமிழிலக்கிய வரலாற்று நிஜம். இது இன்றைய தமிழிலக்கிய சாதீய அணுகுமுறையின் தரமற்ற அமைப்பியல் சிக்கல்களெனில் அது தீர்வுகளற்றதென்பதே உலக இலக்கியத்தின் பார்வையாக இருக்கிறது..

புரோகித மற்றும் ஜஜ்மான் உறவுகள் மீண்டெழுப்பட்டதன் நிஜ காரணிகள் இன்றைய அரசியலமைப்பின் அதிகாரத்திற்கான பசியின் எச்சங்கள் மட்டுமே.. இன்னமும் பெரியாரிசம் பேசும் எழுத்தாள ஜஜ்மான்களின் குடும்பச் சடங்குகளுக்காக இரு சக்கரவாகனத்தில் அனுதினமும் தமிழக வீதிகளில் அங்கவஸ்திரம் காற்றில் பறக்க  வெற்றுடலுடன் வெய்யிலில் அலையும் புரோகிதர்களின் மேல் எந்த அதிகாரப் பார்வை விழுகிறது..? அவர்களின் பொருளாதாரச் சூழலை ஆட்சியதிகாரப் பார்வை தவிர்த்துவிட்டு பாம்பு கீரி வித்தைகாட்டியின் முச்சந்தி விரிப்பில் பையிலிருக்கும் பணக் கற்றைகளை ரத்தம் கக்கி மரணிக்காமல் இருக்க வீசிவிடுவருவது தான் கேலிக்கூத்தின் உச்சம். ஆனால் அவர்கள் புரோகிதத்திற்கான பாண்டித்யத்தை தொடர்ந்து கேலிக்கு உள்ளாக்குவது மட்டுமல்ல அவர்களுக்கான  நியாயமான வித்தைகான கற்றல் கூலியைக் கூட மனமுவந்து கொடுப்பதில்லை என்பதை தமிழிலக்கியத்தில் பதிவு செய்துதானே ஆகவேண்டும்..

புதைக்கப்பட்ட கலை இலக்கிய தலைச்சன் பிள்ளை பிணத்தைத் தோண்டியெடுக்க முகமூடியுடன்  நள்ளிரவில் அலைந்து கொண்டிருக்கும் எழுத்து மந்திரவாதிகளின் குழிதோண்டும் மண்வெட்டிச் சப்தமும் வரலாற்றின் ஆராய்ச்சி மணி சப்தமும் ஒன்றல்ல... சிபிச்சோழனின் அரண்மனை வாசலின் ஆராய்ச்சி மணி தலைச்சன் பிள்ளை மண்டையோட்டு மையால் ஒருபோதும் ஒலியிழந்து புதைந்து போவதில்லை...

தமிழிலக்கிய இயங்கியல் பார்வை வரலாறு மற்றும் தேச எல்லைகளுக்கு அப்பாலும் பிராமணீயமெனும்  பொய்யை தேடித் துலாவுவதற்கான குவியாடிக் கண்ணாடியை அணிந்திருப்பதை காலத்தின் தவிர்க்கவியலா தீர்க்கம் பதிவு செய்துகொண்டுதான் இருக்கிறது..

தலைச்சன் பிள்ளையின் மண்டையோட்டைத் தோண்டும் பொழுதிலாவது  கண்ணாடியைக் கழற்றிவிட்டுத் தோண்டுங்கள்.. அப்போது தான் பிராமண தலைச்சன் பிள்ளை மண்டையோட்டுடன் வரலாற்றுப் பாதையில் நடக்கும் போது பாதை தவறிவிடாமல் பயணிக்க கொஞ்சமாவது சமதர்ம சமூகப் பார்வை மிச்சமிருக்கும்..

ராகவபிரியன்





  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...