Tuesday, October 29, 2019



மனித வாழ்வின் காய்கறி வாங்கும் செயல் வகைமையென்பது தனித்துவமானது..அதுவும் ஒரு மழை நாளில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாங்கும் செயல் வகைமை சிந்திக்க வைக்கும் வல்லமையுடையது.. ஒரு காய்கறிப் புலத்தினுள் கொம்புடைய மாடுகள் சேற்றில் அனாயாசமாய்ச் சுற்றி வந்து அதற்கான காய்கறித் தீவனங்களுக்கான உத்தியைக் கட்டமைக்கும் நேர்த்தியை நனைந்தபடியே ரசித்தபடி எனது வாடிக்கைக்காய்கறி கடையில் நிரூபிக்கப்பட்ட புரிதல் உள்ள விற்பனை நுட்பமறிந்த பெண்மணியிடம்..
உருளை என்னா வெல...என்று கேட்டேன்..
இன்னா சாமி..தாடி சுருள் சுரூளா அழகாகீது..இன்னா வெசயம்... அவள் விலை இன்னும் சொல்லவில்லை...
அத வுடும்மா..உருளை என்னா வெல அதச் சொல்லு...
ம்...வழக்காமன வெல தான் சாமி..மழ கொட்டு கொட்டுன்னு கொட்டுது..காய வித்து ராங்கா வெல சொல்லி காசு கொட்டப்போவுதாக்கும்..எத்துனை கிலோ..சொல்லியவாறே உருளைக் கிழங்குகளை தராசில் அள்ளிப் போட்டாள்...
ஆமா...கிலோவாங்குறாங்க...ஒரு அரை கிலோ போதும்...
சாமி...நீ எப்பப் பாறு எதோ தலையில கொம்பு மொளச்சா மாதிரி தான் பேசுவ...குடுக்கற காச குடு சாமி...பொறவு..உங்கிட்ட ஒன்னு கேக்கனும்..கோவிச்சுக்காத சாமி..இன்னைக்கி...குருசாமி வேற இடத்துக்குப் போவுதாமே..எந்த எடம் சாமி...அவளின் கண்ணெல்லாம் அதிசயம் பொங்கி கொம்பு போல் வளர்ந்திருந்தது...
யம்மா...ஆள வுடு..அவரு எதனாச்சும் ஒரு எடத்துக்குப் போவட்டும்..எவ்ளொ ஆச்சு...ஏறக்குறைய காய்கறிகளை பேச்சுக் கொடுத்தபடியே வாங்கி பையில் நிறைத்துக் கொண்டேன்..
சாமி ...சாமி..சொல்லு சாமி...சொன்னா இன்னா கொறைஞ்சா போயுடுவே..எப்பப் பாறு கொம்பு வச்சா மாதிரியே திரியற...சொல்லு சாமி...
அதிகம் பேசாத...கொம்ம்ப பத்தி உனக்கு என்னா தெரியும்....
நரிக்கொம்பு வித்தாலும் விப்பேனுங்க...ஆனா நரிபோல வஞ்சன செய்யாமாட்டேன்...சட்டென்று பாடிக் காட்ட அதிர்ந்தேன்..
யம்மா...குரு விருச்சிகத்துலேர்ந்து தனுசுக்குப் போறாரு...ஆள வுடு...அவ்ளோதான் தெரியும்...
ஒரு ஐன்னூறு ரூபாயை கொடுத்து சில்லரைக்காக நிற்கும் நொடிகளில்...
காண்டா மிருகத்தின் கொம்பு பற்றிய சில விடயங்களைப் பற்றிய புனைவுகள் மனமிருகத்தின் தலையின் நடுவில் வளரத் தொடங்கியது...கொம்பின் சில மருத்துவ வியாபார தேவைகளுக்காக காண்டா மிருகங்கள் இன்றளவும் வேட்டையாடப்படுவைதை எண்ணி என் நினைவுக் கொம்பை சட்டென்று உடைத்துப் போட...
சாமி...நீ சோசியத்துல கொம்பனாம்ல..சொல்லிக்கிறாக...குருசாமி மாறினா..காந்தி மார்க்கெட் கள்ளிக்குடிக்குப் போயிடுமா சாமி...அப்பாவியாய் தன் வாழ்வாதாரமே பிடுங்கி எறியப்படப்போகும் நிகழ்வின் கூறுகளை தனக்கே உரிய இன்னொஸன்ஸில் கேட்க...எனக்குள் கோபத்தின் கொம்புகள் அடர்த்தியாய் முளைக்கத் தொடங்கின....
அவரு எங்கிட்டுப்போனா உனக்கென்ன..அரசில்வாதியா ஆன பொறப்ப்பாடு கொம்பு மொளைச்சு சாதா ஜனத்தை மறந்துடறாங்க...எத வேணாலும் எங்க வேணாலும் மாத்துவாங்க....நீ பயப்படாத...அதெல்லாம் மார்க்கெட்டு இங்க தான் இருக்கும்...நீ சொல்ற குரு சாமிக்கு கொம்பு இருக்கு தெரியுமா...எனது வார்தைகளின் கூறுகள் கலைந்திருந்தை அவள் கவனித்தபடியே...
சொல்லு சாமி...மழ வுட்டாதான் சனம் காய் வாங்க வரும்..நீ சொல்லு சாமி..சொல்லு சாமி...
இன்னும் இரண்டு தக்காளிப் பழங்களை எனது பைக்குள் போட்ட படியே அவள் கேட்டது...கொம்பு தீய்க்கப்பட்ட வண்டி மாடு ஒன்று அப்பாவியாய் நுகத்தடியில் கட்டப்பட பின்னங்கால்களை நகர்த்துவது போலிருந்தது...
கண்ணை மூடிக்கொண்டு சொல்லத் தொடங்கினேன்...
சொல்லிய ரவிக்குச் சிரசு மத்தியினில்
துலங்குகூரிலாமல் நோக்கும்
துய்ய கொம்பு உளதாம்...வெண்பிறை தனக்கே
சொற்றனர் கொம்பு இலை என்றே
வல்ல செவ்வாய்க்குச் சிர நடு மேலாய்
வளர்ந்து எழு கூரிய கொம்பு ஆம்
மாலவன் தனக்கே சிரத்து ஒரு புறத்தின்
மருவிய கொம்பு உளது ஆகும்
நல்ல பீதகற்கே சென்னி மத்தியினில்
நாடிரு கொம்பு என நவில்வர்
நலம் உடன் செறிந்திடு கொம்பு ஆம்
அல்லல் சேர் காரி இருவகைப் பாம்பு
ஆகிடும் மூவர்கள் தமக்கு
அறுத்தி மறுப்பட்டு இருந்து கீழ் நோக்கும்
ஆகிய கொம்பு உளது ஆமால்...
[ஞானப் பிரதீபிகை சம்ஸ்கிருத பாடல் தமிழில் தந்தவரின் பெயர் தெரியவில்லை...}
கண்ணைத் திறந்து பார்க்க..காய்கறிக் காரி என் வழுக்கைத் தலையையே பார்த்துக் கொண்டிருந்தாள்..அதில் மழைத்துளி இரண்டு தளும்பிக்கொண்டிருந்ததை அனிச்சையாய்த் துடைக்க தலையிலிருந்த கொம்பு ஒன்று உதிர்ந்து முள்ளங்கிப் பத்தைக்குள் பதுங்கிக்கொண்டதைப் பார்த்தேன்..
ராகவபிரியன்

Monday, October 28, 2019

கொட்டித் தீர்த்த
கோர காலை மழையின்
கொடூரக் கரங்களில் இருந்து
என் மகிழுந்துவை
தண்ணீர் படாமல்
காப்பாற்றமுடியவில்லை..
துருவேறிப் போன
பொருளாதாரக் குறியீடாய்
நாளைய பட்டறையில்
தேயப்போகிறது அது..
சாமான்ய பொதுஜனனாய்
பர்கேப்பிட்டா இன் கம்மிற்கும்
ரெப்போ ரேட்டிற்கும்
வளர்ந்து வரும்
வளர்ந்து கொண்டிருக்கும்
வளர்ந்தே தீரும்
என்ற சொற்றொடர்களின்
இழைகளின் அறுந்துவிழாத
ஆங்கில வார்த்தைகளின்
கம்பி நடனமும்
புரியாமல் மழையையும்
மகிழுந்துவையும்
பார்த்தபடியிருக்கிறேன்..
சுர்ஜித்தை வெளிக்கொணர
நடத்தப்படும் பிரயத்தனங்களும்
பொருளாதாரத்தின் வளர்ச்சிவிகிதத்தை
ஏழு சதமாய் உயர்த்தப்போகும்
விந்தை நாடகத்தையும்
அறியாத வருணன்
மகிழுந்துவின் மேல்
குதித்துக் குதித்து
விளையாடிக்கொண்டிருக்கிறான்..
இறக்குமதிகளுக்கான
சந்தையின் ஏற்றமோ இறக்கமோ
புரியாமல்
வெங்காயத்திற்கு
விலைபேசியபடி
கொச்சைத் தமிழில்
திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறாள்
மனைவி..
ஆறாய் பெருகி ஓடும்
மழையின் சாலை வாய்க்காலில்
நனைந்தபடியே
என் கவிதை நோட்டின்
பக்கங்களைக் கிழித்து
கப்பல் விட்டுக் கொண்டிருக்கிறாள்..
மகள்...
இந்தியப் பொருளாதாரமாய்
மழை ஓய்ந்த
வீட்டின் வாசற்பெரு வெளியில்
மகிழுந்துவின்
சக்கரத்தினடியில்
தடம்புரண்டு
கவிழ்ந்து கிடக்கிறது
காகிதக் கப்பல்..
ராகவபிரியன்

Sunday, October 27, 2019

ஒரு பனவனின் பால்ய நினைவுகளில் தீபாவளி...1
நினைவுகள் என்பது பாதுகாக்கப்படவேண்டியவை...எல்லா நினைவுகளும் அல்ல..சில நமக்குப் பாடம் கற்றுத்தந்திருக்கும்..அப்படியான நினைவுகள் நாம் மறைந்த பின்னும் ஆன்மாவாய் சில காலம் உயிர்த்திருக்கும் என உப நிடதங்கள் கூறுகின்றன..சீனாவில் தொங்கும் சவப்பெட்டி என்ற மரத்தாலான மேலதிக கனமுடைய பெட்டி ஆகப்பெரும் உயரத்தில் 2500 ஆண்டுகளாய்த் தொங்கிக்கொண்டிருப்பதாகப் படித்திருக்கிறேன்..
கோவில்கள் நமது முன்னோர்களின் நினைவுகளை அவ்வப்போது தூண்டியபடியே இருக்கின்றன..நமது பண்பாடும் கலாச்சாரமும் சில நினைவுகளின் மீட்சியென்பதறிவோம்..அது போழ்து எனது வயது எட்டு என நினைக்கிறேன்..என் நினைவிலிருக்கும் முதல் தீபாவளி...கணவனை சிறுவயதிலேயே இழந்த என் அத்தையும்..எங்களின் தாய்தந்தையற்ற பெரியப்பாவின் பெண்..என் அக்காள் தங்கமும் நாங்கள் உடன்பிறந்தோர் அப்போது ஐந்து குழந்தைகளும் இருக்க...மத்திய அரசு ஊழியரான எனது தந்தை உடல் நிலையற்ற நிலையில் ஏறக்குறைய ஓராண்டாய் வேலைக்குச் செல்லாமல் வறுமையை விலைகொடுத்து வாங்கி எங்களிடம் விற்பனை செய்திருந்த நேரம்..
என் அப்பாவின் நிறுவனத்தில் கடன் வழங்கும் சங்கம் ஒன்றிருக்கும்..அதில் கடன்படாத தொழிலாளர்களே அந்நாட்களில் இல்லையெனலாம்..அச்சங்கம்..தீபாவளி நேரங்களில் கடனுக்கு துணிமணிகள் பட்டாசு போன்றவைகளைத் தரும்..என் தந்தை அந்தச் சங்கத்திலிருந்து தீபாவளிக்கு எல்லோருக்கும் சேர்த்து மொத்தமாக மீட்டர்கணக்கில் துணி கிழித்துக் கொண்டு வந்துவிடுவார்..
இரண்டு புடவைகளும் வாங்கி வந்திருந்தார்...அதில் ஒரு புடவை கொஞ்சம் வேலைப்பாடுகளுடன் கண்ணைக் கவரும் வண்ணம் இருக்க..அதை என் அத்தையிடம் கொடுக்காமல் என் அம்மாவிடம் கொடுத்துவிட..அந்த விடிந்தால் தீபாவளி என்ற இரவு விடிய விடிய நடந்த சண்டையால் விடியாமலேயே புலர்ந்தது..இரவு எட்டு மணிக்கு மேல் அந்த மொத்தத் துணியை அளவெடுத்து எங்களுக்கும் என் அக்காவிற்கும் சட்டை கால் சட்டை பாவடைச் சட்டை எனத் தைக்க வேண்டும்..திருப்பறாய்த்துறையின் கோவில் வாசலில் இருக்கும் தையல் கடைக்காரர்..எப்படியும் விடிவதற்கு முன் துணியை அணிந்து கொள்ளக்கூடிய வடிவத்தில் கொடுத்துவிடுவார்...என் அண்ணனின் அளவிற்கு எல்லாருக்கும் ஒரே மாதிரி தைத்து விடுவார்...
புதுச் சட்டைக் கனவில் திடீரென விழித்த நான் என் அம்மாவின் கண்களில் தாரை தாரையாய் கண்ணீரைக் கண்டேன்..அவள் மடியில் அமர்ந்து கண்ணீரைத் துடைக்க...அம்மாவிற்காக வாங்கி வந்திருந்த புடவை தாறுமாறாய் கிழித்தெறியப்பட்டிருந்தது...அடங்கா சினம் கொண்ட என் அப்பாதான் அப்படிச் செய்திருக்க வேண்டும்..
காலையில் தைக்கப்படாத துணிகளை தையல் காரர் கொண்டு வந்து வீட்டில் கொடுத்துவிட்டு என் பாட்டியிடம் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன அந்த வார்த்தை இன்று வரை என் நினைவுகளில் இருந்து நீங்காமல் அடம் பிடிக்கிறது...
அந்தச் சூழலிலும் என் பாட்டி எங்கள் துணிகளுக்கு ஓரத்தில் மஞ்சள் கும்குமம் தடவி ஒவ்வொருவரின் தோளில் மாட்டி சுவாமி படங்களுக்கு நமஸ்காரம் செய்யச் சொன்னார்கள்...அடுத்தடுத்து வந்த அக்கம் பக்கத்து வீடுகளின் இனிப்புகளும் சிரிப்புகளும்...சூழலை மாற்ற நாங்கள் விளையாட்டில் அந்த தீபாவளியைக் கடந்துவிட்டோம்..விளையாட்டாய் கூட..
இன்று என்னிடம் இருக்கும் ஏராளமான சட்டைகளுக்கு புதிதாய் அணியும் வேளை நானே மஞ்சள் குங்குமம் வைத்துக்கொள்வேன்..ஆனாலும் என் பாட்டி மஞ்சள் குங்குமம் வைத்து தோளில் போட்ட அந்த தைக்காத மொத்த துணியின் புது வாசம் மட்டும் வைக்கும் மஞ்சளில் இத்தனை ஆண்டுகளாய் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காண ..அதன் அறிந்து கொள்ள முடியா நீட்சியின் விந்தைகளை எப்படி விவரிப்பதென அறியேன்...
இன்னும் வரும்..
ராகவபிரியன்

Saturday, October 26, 2019

செவித்துறண்டியால்
காதுகுடையும் சித்திக்கு
குழந்தையின்
பட்டாம்பூச்சியின்
பின்னான ஓட்டம்
சொன்னாலும் புரிவதில்லை..
பட்டாம்பூச்சியை
கணுக்கையில் படிமமாய்க்
கிடத்திப் பேசும்
குழந்தை மொழி
அம்மாவைத் தவிர
யாருக்காவது புரியுமா என்ன..?
பட்டாம் பூச்சிகளை
பெரும் பறவைகள்
உண்பதில்லையாம்..
அம்மா எனும் வானம் தவிர
வேறெங்கும் பாசத்தின்
வண்ணங்கள் கிடைப்பதில்லையாம்..
தீபாவளி வண்ண உடைக்கான
சேர்த்தி வலையல்கள்
பட்டாம் பூச்சியின்
படிமத்தை மறைத்தால்
குழந்தையால் பேச முடியாதாம்..
வலையல் வேண்டாமென
சொன்னக் குழந்தையை
செவித்துறண்டியால்
குத்தியபடியே சித்தி
அழும் குழந்தையின் கைவலிக்க
வலையல் அடுக்குகிறாள்..
அந்தச் சின்னக்
கையிலிருந்த படிமப்பூச்சி
ஆழ்துளை கிணற்றுக்குள்
தன் உணர்விழைகளால்
குழந்தையைத் தேடிக்கொண்டிருக்க..
வலிக்கும் கைவலையல்களை
ஒவ்வொன்றாய்த் தள்ளி
இடைவெளியில்லாமல்..
தன் தலைமைப் பட்டாம் பூச்சியிடம்
பேசிக்கொண்டிருக்கிறாள்..குழந்தை..

மத்தாப்புக் கொளுத்தினால்
கை சுட்டுவிட்டாதாம்..
வண்ணம் மங்கிப்போக
வாய்ப்பிருக்கிறதாம்...
குழந்தையின் அன்பில்
கையில் மத்தாப்பூவாய்
சிறகடிக்கிறது படிமத்தட்டான்...
ராகவபிரியன்

Friday, October 25, 2019

ஒரு பனவனின் ஆன்மீக அனுபவங்கள்...
சில நிகழ்வுகள் மானுடம் நிகழ்த்தியதாகக் கொண்டாலும் அதன் தூரத்து இயக்குக் கருவி ஆண்டவனிடம் இருப்பதை ஆன்மபலம் பொருந்திய ஞானக்கண் காட்டிக் கொடுத்துவிடும்..அத்தகைய ஞானக்கண் அன்பே சிவமாக உருவம் கொண்ட ஆதிசிவனின் முகத்தில் இருப்பதை அறிவோம்..
சிவ ஞான போதம் அதை இப்படிக் கூறுகிறது..
தொண்டர்கள் தாமும் வானோர் தொழும் திருமேனி தாமும்
அண்டரும் கண்டிலாத அண்ணலே என வணங்கி
வெண்சரளங்கள் சிந்த விழி மொழி குளற மெய்யே
கண்டுகொண்டு இருப்பர் ஞானக் கடல் அமுது அருந்தினோரே..
ஒரு பக்தியின் வெளி சிவமயமாய் மாறுகிறது...அங்கே சின்ன திடலொன்று உருவாக சிவம் சிவனென்று உறங்கத் தொடங்குகிறது..இருபுற நிழலில் திடல் குளிர சிவபக்தர்கள் சிவமென்றறியாமல் தாமும் உறங்குவதைக் காண உவகையெழும்பும் முகம்..அம்முகம் கண்டு சிவ ஞானக் கண் திறக்கும்..திடலும் உவகையும் ஆணவமும் எரிந்து சாம்பலாகிவிடும்...
இருளாது அன்றி இலது..எவையும் ஏகப் பொருளாகி நிற்கும் பொருள் என்று சித்தாந்த அட்டகம் பேசுகிறது...
உறங்கும் திடலின் சிவ நிழலென அறியாமல் மகிழுந்துவை நிறுத்த...சிவன் மனித உருவின் ஆணவமென உருவெடுத்து...இடம் தனதென்கிறான்..மகிழுந்து தனதான உவகையிடம் சென்றடைய..ஆணவம்...
ஒரு பொருளும் காட்டாது இருள்..உருவம் காட்டும்
இரு பொருளும் காட்டாது இது...
என்ற சிவ ஞான சூத்திரத்திற்கினங்க..இருள் கூட பொருளின் உருவம் தெளிவின்றி காட்டக் கூடும்..ஆணால் ஆணவம் கண்ணை மறைத்தால் இருளும்..அதனுள்ளே மறைந்திருக்கும் பொருளும்..உள்ளுறங்கும் சிவமும் தெரியாமல் செய்துவிடும்..உண்மையைக் காண...அதிசயமாய் தூரத்து இயக்கு கருவியின் சிவ விரல் நடன முத்திரையைக் கண்டு அதிர நேர்ந்தது..
வெளிக்கான வேலியின் கல்தூண்களை ரிஷபவாகனமெடுத்துச் சாய்த்தும் கூட ஆணவம் நிஜம் உணர மறுக்க...சிவ உறக்கம் கலைந்து...நிழற்சுவர் ..மணற்சுவர்..அடுக்கிக் கிடந்த மாயா கன்மங்களான கற்றூண்கள் ...தனு கரண புவன போகங்கள்..இரண்டாகப் பிளக்க...ரிஷபங்கள் திடலின் ஆணவப் புல் மேய..சிவம் தன் இருப்பைக் காட்ட...இன்னமும் விழித்தெழாத...வேலியகற்றாத சிவ உடலின் மேல்..பிளந்த கற்றூண்களை அடுக்கி கிடப்பதை என்னவென்று சொல்ல...
விடிவாம் அளவும் விளக்கனைய மாயை
வடிவாதி கன்மத்து வந்து..
எங்கே நிகழ்வின் இயக்கு கருவியைக் காணும் பேறு பெற்ற கண் இருக்கிறதோ...அங்கே சிவம் சிவமாய்க் கிடக்கும்..உடலெல்லாம் விபூதிப் பட்டைகளுடன் கன்ம மாயைகளை அடக்கும் சிவசக்தியின் ஞான விழி நெற்றியை உடலெங்கும் உடுத்தியிருக்கும்..நிஜமான ஆச்சாரியர்கள் உடலெடுத்து சிவமாய்க் கிடந்திருக்கிறார்கள்..
அருளில் பெரியது அகிலத்து வேண்டும்
பொருளில் தலையிலது போல..
எனும் சிவ ஞான வாக்கினை தியானித்து...அனைத்தையும் சிவம் ஆட்டுவிக்கும் என்பதை உணர்ந்து...அரங்கனுக்கு நன்றி சொல்வோம்..
பஞ்ச நதீஸ்வரர் திருவடிகளே சரணம்...
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...
ராகவபிரியன்

Thursday, October 24, 2019

இந்த வருட தீபாவளி இல்லாத
வெளியொன்றைத் திறக்கிறேன்..
அப்பெருவெளியின்
படிமப்படிகளின் மேல் கிடக்கும்
வீதியோரக் கடைகளின்
சதுரமற்ற செவ்வகமற்ற
மிதியடியை
மிதித்தே உள்ளேகுகிறேன்..
விடியாத இரவொன்றிலிருந்து
நீளும் மத்தாப்புச் சிதறல்கள்
மன வெளியெங்கும்
வெறுப்பேற்றிச் சுற்றுகின்றன..
முதிராத மனமகிழ்வின்
அறைகளைத் திறப்பதற்கான
சாவி தேடியலைந்த
அவ்வெளியெங்கும்
என் வெற்றுக் கால்களில்
அப்பிக்கிடக்கிறது
சோகத்தின் சேறு..
முகம் கவிழ்ந்த
கூடடையும் பறவைக்காலென
நுனிப் பாதம் பட்ட
பழைய சாக்கின்
மிதியடி ஸ்பரிசம்
எம் மண்ணின் வாசமென
மனம் நிறைக்க..
ஏதுமற்ற என் பணப்பையில்
நிரம்பித் ததும்புகிறது
வெளியிடமுடியாத
அன்பு...
ராகவபிரியன்

Sunday, October 20, 2019

என் பிரதியிலிருந்து
நான் விலகிவிட்டேன்..
ஒரு படைப்பின் அந்தம்
இன்னொரு பிரதிக்கான
ஆதியென அறிவேன்..
பிரதியிலிருக்கும்
ஆய்வுப் பார்வை எனதல்ல..
இப்போது
என் மொழியியல் கண்கள்
குருடாகிக் கிடக்கிறது..
பிரதியை நீங்கள் கிழித்துப்போடுங்கள்..
என் மொழி அதைப் பார்க்கப்போவதில்லை..
என் பிரதியிலிருக்கும்
பூணூல் உங்களால் அறுத்தெறியப்படவில்லை..
என் மார்பில் இருப்பது
நேற்று மாற்றப்பட்ட புதுப்பூணூல்..
சூழலியல்
அமைப்பியல்
கோட்டாட்டுவியல்..
மிகு நுட்பவியல்
நுண் தளவியல்
புன்னாக்குவியல்
எனச் சொல்லிவந்து
இறுதியில் என் பிரதியை
பூணூலியலில் முடிப்பீர்கள்..
பூணூலின்
பிரம்ம முடிச்சவிழ்ப்பவனின்
முடிச்சவிக்கியியல்
பிரம்மப் படைப்பாளியறிவான்..
அகம் பிரம்மாஸ்மி..
என் பிரதியிலிருந்து
அவிழ்த்தெறியப்பட்ட
பூணூலில் இருந்து
நான் விலகிவிட்டேன்..
என் மார்பின் பூணூல்
என்னை விட்டு விலகுவதுமில்லை..
நான் கைவிடப்படுவதுமில்லை..
இன்னொரு படைப்பிற்கான
ஆதி முகத்தைப் படைக்கும்
படைப்பியலின்
நுட்பங்களோடு
கையிலிருக்கும்
மணிமாலையை
உருட்டத்தொடங்குகிறான்..
பூணூல் அணிந்த
பிரம்மச் சித்தன்..
ராகவபிரியன்

Wednesday, October 16, 2019

தொன்னூறுகளில் யூகோஸ்லோவியா என்ற ஐரோப்பாவின் ஆகப்பெரிய நாடு சிதறுருகிறது..நாடு துண்டாடப்படுகையில் இனப்படுகொலைகள் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறதெனச் சொன்ன..பின்னாளில் செர்பியா மற்றும் யுகோஸ்லாவியா எனப் பிரிக்கப்பட்ட நாடுகளின் அரசுகளுக்குத் தலைமைதாங்கிய அதிபர் சொலோபோடன் மிலோசோவிக்..அகண்ட உலக நீதிமன்றத்தால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார்...பாஸ்னிய போர் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான கொடுரங்களைச் சந்தித்த யுத்தமென வரலாறு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கி அதில் குருதி எழுத்துக்களால் அதைப் பதிந்து வைத்திருக்கிறது..அவருக்கான குற்றச்சாட்டுகளை பொய்யென நிரூபிக்க அவர் தனக்கான வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளாமல் வாதாடிக்கொண்டிருக்கிறார்..அவரின் கம்யூனிஸ வளர்ப்பும் சிந்தனைகளும் அவரிடம் பாசாங்கற்ற எந்தவித பயமுமற்ற மன நிலையைத் தந்திருந்ததால்..சிறையிலிருந்தவாறே தன்மீதான வழக்குகளை துச்சமென மதித்து நேர்கொண்டிருந்த ஒரு நாளில் சிறைச் சாலையில் மரணமுறுகிறார்..அவரின் இறுதிச் சடங்கில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஹாண்ட்கி கலந்துகொண்டு இரங்கற்பா வாசிக்கிறார்..ஒரு போர்க்குற்றவாளியை ..அதுவும் கம்யூனிஸ சித்தாந்தங்களை செயல் படுத்திய நாட்களில் தன் கைகளில் மனிதக் குருதியை அள்ளிக் குடித்தவரை புகழந்து எழுதிய ஒருவருக்கு எப்படி நோபல் கொடுக்கக்கூடலாம் என்ற குரல் இன்று இலக்கிய உலகமெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது..எழுத்து என்பது நிஜங்களை உரத்தக் குரலில் பதிவு செய்வது..அது மனித மனங்களின் இருண்ட பகுதிகளை வெளிச்ச மிட்டுக் காட்டுவது..சொலோபோடன் மிலோசோவிக் குற்றவாளியாக இருந்தாலும் நிர்வாகத் திறமையுடையவர் என்றும் ..இரண்டு நாடுகளின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர் என்றும் அவரின் கருணையுள்ளம் அறிந்தவன் நான் என்றும் முழங்குகிறார்..பீட்டர் ஹாண்ட்கி...இருந்தாலும் கனடாவின் மார்க்ரெட் அட்வுட்..ஹாருகி முராகமி..கென்யாவின் நூகி வா தியாங்க் போன்றவர்களைப் புறந்தள்ளி பீட்டருக்கு ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த உலகளாவிய மிகப்பெரிய பரிசு தரப்பட்டதா என்ற கேள்விக்கு.
.நோபல் பரிசு தேர்வுக்குழு இப்படிச் சொல்லியிருக்கிறது.." மனித வாழ்வின் அனுபவங்களை ..சந்தித்த அவலங்களை..துல்லியமாக ..அதற்கான வரையறைகளுடன்..மிகவும் சக்திவாய்ந்த மதி நுட்பம் நிறைந்த வார்த்தைகளால் இலக்கியம் படைத்தவர் பீட்டர் ஹாண்ட்கி.." இது போதாதா...அவரே எதிர்பார்த்திராத பரிசை அரங்கன் அவருக்குத் தந்திருக்கிறான்..அவரின் தனிப்பட்ட விருப்பமான தலைவர் உலக மக்களால் வெறுக்கப்படுவதால் அவரும் வெறுப்பைக் காட்ட வேண்டுமா..வெறுப்பையும் மீறிய நட்பின் சக்தி ஆழ்மன உள்ளத்தில் அசாத்திய துணிச்சலைத் தரும் அல்லவா..நோபல் தேர்வுக் குழுவிற்கும்..மஹாகவி பீட்டர் ஹாண்ட்கீ அவர்களுக்கும்..அனைத்து நண்பர்களுக்கும் அரங்கனுக்கும் என் நன்றிகள்...அன்பன்..ராகவபிரியன்

Tuesday, October 15, 2019

ஒரு பின் நவீன மழைக் கவிதை...மழைக் கவிதை எழுதாதவன் கவிஞனாய் இருக்க முடியாது...என்ன நான் சொல்றது..
மேலொன்றும் கீழொன்றுமான
இரண்டு மழைத்துளிகளை
விட்டு வைத்திருக்கிறது
என் வீட்டிற்கு வந்து போன மழை..
கீழிருக்கும் மழைத்துளி
காயும் வரை
பார்த்திருக்கிறேன்..
கொஞ்சமும் பொறுமையற்ற
மேலிருக்கும் அத்துளி
அன்னாந்த என் முகத்தில்
விழுந்து தெறிக்கிறது..
கீழே அதுவரை
உருண்டுகொண்டிருந்ததுதுளியல்ல..

மேலே மழை பொறுமையற்றிருக்க..
கீழே துளியற்றதாய்
உருள்வது ..மழையல்ல..
ஒரு மாநதியின் சுருக்கம்..
பூமியின் மேல் மழை..எனில்
மழையின் கீழ் தான் பூமி..
பூமியின் வீட்டிற்குத்தான்
வந்து வந்து திரும்புகிறது மழை..
ராகவபிரியன்

Friday, October 11, 2019

எழுதும் திறனும் அதைத் தாண்டிய அனுபவமும் அதையும் வரலாறாய் மாற்றத்தக்க எழுச்சிமிகு எழுத்தாற்றலும் அபரிமிதமாய் வாய்க்கப்பெற்ற எழுத்தாளுமை 2018ற்கான நோபல் இலக்கியப் பரிசை வென்ற போலந்தின் ஓல்கா டொக்ரகொசா..
போலந்தின் மக்கள் சோவியத் ஸ்டாலினிடமும்..கம்யூனிஸ அடக்குமுறையிடமும்..பொருளாதர நிரந்தரமற்ற வாழ்வுமுறையிடமும்..அத்தகைய பொருளாதார அடக்குமுறைமையைச் செயலாக்கிய ஸ்டாலின் என்ற இரும்புக்கை மாயாவி மறையும் வரையும் பட்ட துன்பங்கள் வரலாற்றின் சிகப்புப் பக்கங்களில் காணக்கிடைக்கின்றன..கம்யூனிஸத்தின் பொருந்தாக பிற்போக்குக் கொள்கைகளால் உலகளாவிய அளவில் அதன் வீழ்ச்சியை நாம் தற்சூழலில் கண்ணுறுவது போல போலந்தும் 1953றிற்குப் பிறகு கண்ணுற்றது..ஓல்கா என்ற பிறவி எழுத்தாளுமை 1962ல் போலந்தின் ஒரு குக்கிராமத்தில் பிறக்கிறது..அது பிறந்த நாளில் தான் திடீரென போலந்தின் உணப்பண்டங்களுக்கான விலை நிர்ணயக் கோணம் வித்தியாசமாய் சோவியத் ருஷ்யாவால் பார்க்கப்பட்டு... பன்மடங்கு விலையுயர்வு திணிக்கப்பட்டது..மெல்ல நடைவண்டியைத் தள்ளியபடி வீதியில் அடியெடுத்துவைத்த சின்னஞ்சிறு ஓல்கா ரொட்டித் துண்டிற்காக தங்களது வீட்டையே விற்றுவிட்டு நடுத்தெருவில் தாயின் கைபிடித்து நடந்த அந்த நாட்களை பின்னொரு நாளில் கச்சிதமாகத் திட்டமிட்டு இலக்கிய உலகம் எதிர்பார்த்திராத உத்தியும் நடையும் கொண்டு நாவலாய்ப் படைக்கிறார்..உலகம் அதிர்வின்..எழுத்து தந்த அதிர்வின் காரணமாய் எரிமலையொன்று வெடித்துச் சிதறியதை உணர்ந்தது..
கிடைத்த உணவுகளுக்கான போராட்டங்கள் மனதிலும் வயிற்றிலும் தங்கிவிட சிக்மண்ட் ப்ராய்டையும் வில்லியம் ப்ளேக்கையும் உண்டு அவ்வப்போது பசியாறியதாய்ச் சொல்லும் ஓல்கா..இலக்கிய உலகின் அத்தனை விருதுகளையும் பரிசுகளையும் குவித்திருக்கிறார்..தனது முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட முன்வராத பதிப்பக உலகிற்குச் சாட்டையடியாய் தனது சொந்தப் பதிப்பகம் தொடங்கி அழியாத எழுத்தை அகில உலகிலும் உலவவிடுகிறார்..இரண்டாம் உலகப்போரின் விளைவாய் போலந்து நாட்டவர்கள் நாடற்று வீடற்று நாடோடிகளாய் ஐரோப்பாவெங்கும் வீதிகளில் உறங்கியதால் மன நோய்க்கு ஆட்பட்டு மரணமுறுவதைக் காணச் சகியாமல் மன நோய் ஆலோசனை மையம் ஒன்றைத் துவக்கி இன்னமும் நடத்திவருகிறார்..
அவரின் ஒரு கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்..இது மொழிபெயர்ப்போ மொழிமாற்றமோ மொழியாக்கமோ இல்லை...
சிறகுகள் பொறுத்தப்பட்ட
பசுவொன்று
வானில் மேயத்தொடங்குகிறது..
போலந்தில் புல்வெளிகளின்
மேச்சல் விலை மேலதிகம்..
வானில் கூட
புல் மேயும் பொழுதுகளில்
கொம்புகளை அசைக்க
அதற்கு உரிமையில்லை..
கீழே விரிந்திருக்கும்
புல்வெளிகள்
அதனுடையதெனினும்
அதன் சொந்த மல்ல..
அதனால் தான் வானில்
நட்சத்திரங்களுக்கிடையில்
வளர்ந்திருக்கும்
புல் நுனிப் பனித்துளிகளில்
தாகம் தீர்த்துக் கொள்கிறது..
அதன் தொழுவம்
அதனுடையதில்லை..
அது நமைச்சல் தாங்காமல்
அவ்வப்போது வீசும்
வாலில் அமர்ந்த ஈக்கள்
வசதியாய்
முகத்தில் அமரும்..
ஈக்களை விரட்டுவதற்கான
விலை போலந்தில்
ஆகமிகு அதிகம்..
வானில் ஈக்கள் மொய்க்க
அனுமதி யில்லையென்பதால்
அங்கு மேய்வதில்
சுகம் அதற்கு..
புல் மேய்வது மட்டும்
மாட்டிற்கான
ஒரே வேலையில்லை..
சில சமயங்களில்
காய்ந்த வைக்கோலுக்காகவும்
வயிற்றில்
ஈரத்துணியுடன்
அது பறந்தாக வேண்டும்..
ராகவபிரியன்

Sunday, October 6, 2019

ஒரு பனவனின் ஆன்மீக அனுபவங்கள்..
காண்டீபத்தை வீசியெறிந்து யுத்தம் செய்ய மறுத்த பார்த்தனைப் பார்த்து பகவான்..யுத்தம் செய்தாக வேண்டிய கட்டாயத்தை...அதன் நியாயங்களை..அருமையாக எடுத்துரைக்கிறார்...யுத்தம் என்பதன் காரணமே..நியாயங்களை வெற்றி கொள்ளவைப்பதற்கான செயல் என்பதை அரங்கன் கீதையில் சொல்லிக்கொண்டிருக்கும் அதே வேளையில்..பார்த்தனின் யுத்தம் செய்ய பயப்படும் தன்மையை அலித் தன்மை என்று சொல்வது ஆச்சர்யங்களைத் தருகிறது..
க்லைப்யம்மா ஸ்மகம: பார்த நைதத்த்வய்யுப்பத் யதே
க்ஷூத்ரம் ஹ்ருதயதெளர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப!
இங்கே அரங்கன் அர்ஜுனனிடம்..இழிந்த உள்ளம் என்பதை அலியின் தன்மையாகக் கூறுவது கூர்ந்து நோக்கத்தக்கது..
அல்லூருக்கு வந்த முதல் நாள் அன்றே..அரங்கனை என்னிடத்தில் தவறாகக் கூறியது..அது அரங்கன் காதில் விழும் என்பதை உணராத அறியாமை..ப்ராமணன் என்றால் ஒரு சில அடையாளங்கள் வேண்டும் என்ற..அந்த அடையாளங்களைத் தாங்காத நிஜம்மான ப்ராமணனை மறைமுகமாக மனக்காயமுறுத்தும் திமிர் நிறை செயல்கள்..அரங்க பக்தியை சந்தேகமுறுதல் போன்ற சில ஒவ்வாமைகளை அரங்கன் எனக்குக் காட்டிக் கொடுக்க..நான் அரங்கனிடம்.."அரங்கா..இதையெல்லாம்..ஏன் என்னிடத்தில் சொல்கிறாய்...திருக்கச்சி நம்பியின் வரலாறை அறிந்தவர்கள் தான் நீ உரையாடும் செய்தியை ஓரளவு நம்புவார்கள்..ஆக அது போயிற்று ஆயிரமாண்டுகள்...இன்னமும் நீ உரையாடுகிறாய்..அதுவும் என்னிடம் என்பதை யாரும் நம்ப மறுப்பது மட்டுமன்றி..என்னை ஏமாற்றுக் காரணாகவும்..எதோ ஒரு காமக் கண்ணோட்டத்தில் நான் புதுப் புது உத்திகளைக் கையாள்வதாகவும் எண்ணி..என்னை ஒதுக்கி வைப்பது மட்டுமல்ல..என்னோடு யாரும் ஆகச் சாதரண உரையாடல்களைக் கூட தவிர்த்தும் விடுகிறார்கள்..அது மட்டுமல்ல...எனது அறுபது வயதிற்குத் தரவேண்டிய நியாயமான மரியாதையைக்கூட தருவதில்லை...அரங்கா..உனக்கான மிருஷ்ட்டா பூஜைகளை நேரம் தவறாமல் நியமமாகச் செய்ய வேண்டுமெனில்..அதை உரியவர்களிடம் நேரே நீ சொல்லிவிடு" எனக் கதறினேன்..மனக் காயத்திற்கான களிம்புகள் ஆன்மீக பரிசோதனை மருத்துவ மனையில் நிறைய இருப்பதால்..கொஞ்சம் வலி குறைய..அரங்கனிடம் சரணாகதி செய்தேன்..உடனே..
அரங்கன்.." நீ என்ன கோழையா...இல்லை..அலியா..நான் இருக்க நீ ஏன் பயம் கொள்கிறாய்...போருக்குப் பயந்த அர்ஜூனனிடமும் இதையேதான் சொன்னேன்.."என்று சொல்லி..தன் வலது கையைத் திறந்து காட்ட மேற்கண்ட ஸ்லோகம் என் உப்பிலியப்பனின்..கையில்...பொறிக்கப்பட்டிருந்தது..திடுக்கிட்டுக் கண்விழித்து கீதைப் புத்தகம் எடுத்துப் பார்த்தால்..அதே வரிகள்...அதிர்விலிருந்து நான் மீள..சில நாட்கள் பிடித்தன..எனது பிரபந்த வாசிப்பின் போர் இன்னும் துல்லியமாக..அதிகச் சக்தியுடன் ..அதீத சப்தத்துடன் ..அதன் இலக்கை நோக்கி நகர..எனது சாதாரண எந்த உள் நோக்கமும் அற்ற உரையாடல்கள் ,,அதுவும் என் குடும்பத்தாருடனான..உரையாடல்கள் கூட...ஒட்டுகேட்கப்பட்டு...கீதையின் பொருளுரை போல வெவ்வேறு அர்த்தங்களுடன் சிலரின் உள்ளத்தைத் தாக்க்கியதை அறிந்து மேலதிக வருத்த முற்றேன்..
இருந்தும்...அரங்கனின் கட்டளை..என்பதால் பிரப்ந்த வாசிப்பை காலையிலிருந்து இரவு வரை என்று நீட்டித்த முதல் நாள்..அரங்கனிடம் .."அரங்கா..இந்த அவதையை முடிவிற்குக் கொண்டு வா..."என்று வேண்டியபடியே..தொலைக்காட்சியில் மனம் லயிக்காமல் இருந்த ஆன்மீகப் பொழுதில்..என் மகள்..ஜோதி தொலைகாட்சியில் கேளம்பாக்கம் பிரம்ம பெருமாளின் அபிஷேக ஆராதனைகளை காட்டும் நிகழ்வின் ஒளிபரப்பை வைத்துவிட்டு நகர்ந்து விடுகிறாள்..அரங்கனின் மூன்று முகங்களில் நரசிம்மமும்..வாராக முகமும்..மச்ச உடம்பில்..பதினாறு கைகளுடன் இருக்கும் அந்த அர்ச்சையின் வித்தியாசமான உருவம் மனதை ஈர்க்க..அதில் லயிக்கிறேன்..அபிஷேக ஆராதனை முடிந்து..அலங்காரமும் முடிந்த பின்..அரங்கனின் வலது கரத்தில்...ஒரு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பலகையில்.." நான் பார்த்துக் கொள்கிறேன்..." என்ற வாசகம் பொறிக்கப்பட்டு மாட்டப்பட...அரங்கன் இனி அனைத்தையும் தானே கவனிக்கப்போகிறான்...என்பதுணர்ந்து..மனதின் கனம் குறைய..வாசலுக்கு வருகிறேன்..எனது அருமை நண்பர்..அல்லூர் ப்ரகாஷ்..நாளை நாம் திருச்சி கலெக்டரைச் சந்தித்து.. ஜீயபுரம்..அரங்கன் கோவிலுக்குச் சொந்தமான மண்டபத்தை ..சாலை விரிவாக்கத்தால் இடிபடாமல் தவிர்க்க..விண்ணப்பம் தரச் செல்கிறோம்..என்றார்..
நானும் இது அரங்கன் செயல் என்றே..நினைத்து ஒப்புக்கொண்டு விட்டேன்..அடுத்த நாள் காலை வானம் மெல்ல தூறிக்கொண்டிருக்க..நானும் ஒன்பது மணிவரை மிருஷ்ட்டா பூஜைகள் நடைபெற வில்லை என்பதை..கவனித்தவாறு இருக்க..எங்கே நான் பிரபந்த வாசிப்புப் போரை உக்கிரமாகத் துவக்கி விடுவேனோ எனப் பயந்தவர்கள்..வித்தியாசமான ஆயுதமொன்றால் என்னைத் தாக்கத் தயாரானார்கள்..அரங்கன் அன்று எனது பிரபந்த வாசிப்பு வேண்டாம் என்பதை முன் கூட்டியே சொன்னதை உணர்ந்து...திருச்சி ஆட்சியரைக் காணச் சென்றுவிட்டேன்..பிரபந்தம் வாசித்தால்..கருத்து வேறுபாடுகளின்..கூடாத பிற்போக்குப் பார்வை கொண்டோரால் விளக்கு மாற்றால் அடிவாங்க நேரிடும் என்பதையும் உணர்ந்தேன்..அரங்கனுக்கான போர் நிகழ்ந்தால் அஸ்திரப்பிரயோகங்கள் அரங்கனையும் தாக்கும் என்பதை அறியாதவர்கள்..நான் பயந்து பின் வாங்கிவிட்டேன் எனப் புல்லரித்துப் போயிருப்பார்கள்..
கார்பண்யதோஷாபஹதஸ்வபாவ: ப்ருச்சாமி த்வாம் தர்மஸ்ம்மூடசேதா:
யச்ச் ரேய:ஸ்யா ந் நிஸ்சிதம் ப்ரூஹித ந் மே
ஸிஷ்யஸ்தேஹம் ஸாதிமாம் த்வாம் ப்ரபந்நம்..!!
அரங்கா..கோழைகளுடனும்..கோழைத்தனத்தாலும் பக்தியின்... அரங்க பக்தியின் மேன்மையறியாதவர்களிடம்..எவ்வாறு உனது கட்டளையை எடுத்துச் சொல்வது..?அரங்கா..எந்தச் செய
ல் அல்லது சாதனை உறுதியாக மேன்மை படுத்துமோ ...அதை எனக்குக் கூறு...நான் உன்னைத் தானே பற்றியிருக்கிறேன்..உன் அடிமை என்பதால்..என் மீதான விளக்குமாற்றின் அடிகள் உன் மீதும் விழும் என்பதை அறியாதவர்களின் செயல்களை மன்னித்துவிடு...எனக்கு தகுந்த அறிவுரையையும் வழி நடத்தலையும் தருவாய்....
என்பதாக என் சின்னஞ்சிறிய அறிவிற்கு எட்டியவரை பொருள் சொல்லி...இதோ இந்த பிரபந்தப் போரை முடிவிற்குக் கொண்டு வருகிறேன்...இனி அரங்கன் அனைத்தையும் தானே பார்த்துக் கொள்வான்...
பரித்ராணாய சாதூனாம் வினாசாய சதுஷ்கிருதாம்..
தர்மசம்ஸ்தாப நார்த்தாயே சம்பவாமி யுகே...யுகே...
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்...

Friday, October 4, 2019

The words are conveniently blocked out
The sentences are totally blotted out
The meanings are hidden inside miseries
As understood by the literary treasuries
Every time a writer like me writes and writes
about the souls of millions dying in poverty lurid lights
An ocean of poetry prose in pseudo neo modernism
by the popular stricken literary giants prism
simply swallowing the realism by their selfish..selfi ism
To reach the audience and the readers
To reach their attention and their radarsAn ordinary poet like me should dance
Dance and dance along the lines of chance..

O poet ..O poetry...O prose..O writer..
Do not get carried for e'er
Thou time will come will definitely come..
To the literary world a poet has come..
To the literary world a poet has come..
Ragavapriyan Thejeswi

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...