போஸ்டர் கணக்குகள்.. சிறுகதை
--------------------------------------------
கோபாலய்யருக்குக் கோபம். வாசலில் இருசக்கர பழைய வண்டியை உதைத்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது களைத்து யாழினி ரெடியாகிவிட்டாளா எனவும் பார்த்துக்கொண்டிருந்தார். யாழினியோ மடிசாரை கடந்த ஒரு மணி நேரமாக கட்டிக்கொண்டிருந்தாள்..இன்னமும் திருப்தியில்லாத குரலுடன்..தோ வந்துட்டன்.. செத்த இருங்கோ.. வண்டிய ஆப் பண்ணிடாதேங்கோ.. எனக் கத்தினாள்..
இப்படித்தான் கோபாலய்யர் 1977 ல் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ஜனதா கட்சிக்காக போஸ்டர் ஒட்ட பழைய சைக்கிளை கிளப்பினார். இரண்டு சக்கரங்களிலும் காற்றுப் போயிருந்தது. அப்போது அய்யருக்கு கல்யாணம் நடந்திருக்கவில்லை. ஒரு வழியாய் பஞ்சர் சைக்கிளில் போய் ஒரு போஸ்டரை பேரூர்ந்து நிறுத்தத்தில் ஒட்டியதும் காத்திருந்த ஒரு மாடு அதைத் தின்று விட்டது.. ஆனால் எதிர்கட்சிகள் ஜெயித்துவிட்டன..கிளம்பும் போது வண்டி மக்கர் செய்தால் நல்ல சகுணம் என்பதை இந்த வருட பஞ்சாங்கத்தில் சேர்க்கச் சொல்லி குட்டி சாஸ்திரிகளிடம் சொல்ல வேண்டுமென நினைத்தார்.. அப்போது எமர்ஜென்சியை எதிர்த்து எல்லா கட்சிகளும் ஒன்று சேர்ந்திருந்தன.. அதையும் சொல்லியாக வேண்டும்..
ஒரு வழியாய் யாழினி மாமி உறுமிக்கொண்டு புகை கிளப்பியபடி இருந்த வண்டியின் பின்பக்கதில் ஒருபக்கமாய் அமர்ந்து கொண்டாள்..
ஏன்ணா இவ்ளோ அவசரப்படுத்தறேள்.. மடிசார் கட்டறது என்ன ஈஸியா... ஒங்களுக்குப் புடிச்ச அரசியல் கட்சிக்கெல்லாம் தொகுதி பிரிக்கறாமாதிரி ஈஸின்னு நெனச்சேளா.. சொல்லிக்கொண்டே
ம்..கெளம்புங்கோ.. இப்பவே போனாதான் க்யூவுல நிக்க சரியா இருக்கும்.
ஏற்கனவே கோபமாயிருந்த கோபாலய்யருக்கு கோவில் நடை திறந்திருப்பதோ க்யூவோ பிரச்சனையே இல்லை. அவருடைய பிரச்சனையெல்லாம் தமிழக அரசியல்ல எதிக்ஸோ நியாயமோ தர்மமோ இல்லங்கறதுதான் அவரோட ஒரே வாழ்வியல் பிரச்சனை. அந்த தார்மீக கோபம் அவருக்கு அவ்வப்போது யாழினி மீதும் கோவில் வாசலில் நிற்கும் ஆட்டோக்களால் இருசக்கர வாகனம் நிறுத்தவியலா நிகழ் சமூக அவலத்தின் மீதும் வெளிப்படும்..
ஏண்டி இவ்ளோ நேரமா மடிசார் கட்டிண்டிருக்க.. கோவில் வாசல்ல வண்டிய நிறுத்தறது அவ்ளோ ஈசியா என்ன.. அப்புடியே ஒரு இடம் புடிச்சு வண்டிய நிறுத்தினா..ஆட்டோ காரன்.. சாமி.. இங்க இன்னோரு வண்டி வரும். அங்கிட்டு போங்க ன்னு கத்தறான். மொரார்ஜிக்கு ப்ரைம்மினிஸடர் குடுத்தா சரண்சிங் கத்தறா மாதிரி கத்தறான். க்யூவுல நின்னா சீப்மினிஸ்டர் பையன் சீனியர ஓவர்டேக் பண்ணி டெபுடி ஆகறாமாதிரி அவனவன் இன்புளுயன்ஸ் வச்சுண்டு க்யூ ஜெம்ப் பண்றான். அதுகூட பரவால்லடி அரசியல் காரா எக்கேடு கெட்டும் போட்டம்.. நேக்கு ரொம்ப கோவம் எதுல வரற்துனா எலெக்ஷ்னுக்காக கட்சி மாறறான் பாரு அவன் மேல வர்ற் கோபமாட்டம் இது ஆட்டோ போடற இடம் தள்ளி நிறுத்து சாமின்னு சொல்றாம் பாரு அவன் மேல அவ்ளோ கோபம் வரும்...
அய்யர் சொல்லிக்கொண்டிருக்க...மாமி மடிசாரை மார்பில் இழுத்துவிடும் அந்த விதியின் நொடிகளில் வண்டி ஆடத்தொடங்கியது..
யாழினி.. வண்டிய ஆட்டாம வா.. ஜெயபிரகாஷ் நாராயணன் குடும்ப ஆட்சிய எமர்ஜென்ஸி கொண்டு வந்த கொடுங்கோல் ஆட்சிய எதுத்து கூட்டணி அமைச்சார்... ஆனா இப்ப பாரு..குடும்ப ஆட்சிய சட்டம் ஒழுங்கு சரியில்லாத ஆட்சிய மறுபடியும் கொண்டுவர மெகா கூட்டணி அமைக்கறா.. இந்த குண்டும் குழியுமா இருக்கற ரோடுல வண்டி ஓட்டற கஷ்டம்...அதுவும் ஒன்ன பின்னாடி ஒக்கார வச்சுண்டுவர்ற கஷ்டம் இந்த அரசியல் காராலுக்கு எங்க தெரியப்போறது..ஒன்ன பின்னாடி ஒக்கார வச்சுண்டு ப்ரெண்ட் வீல் தரையில படாம ஓட்டறதும்.. கமலுக்கு ரெண்டு சீட் குடுக்கறதும் ஒன்னு தான்.. கமல் பேசறதும் இந்த வாழ்க்கையும் புரிஞ்சுக்கறதுங்கறது என்ன அவ்ளோ ஈஸியா... அதவுட கொடுமை என்னன்னா...ஒங்கப்பன் நேக்கு ஒரு கார் வாங்கிக் குடுக்க மாட்டேங்கறாம் பாரு..அதான்..
அய்யர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒங்கி அவரின் முதுகில் ஒரு அடி வைத்தாள் யாழினி.. சட் டென கீழே குதித்தாள்.. வண்டியை கண்ட்ரோல் செய்யவியலாத அய்யர் கோவில் வாசலில் நிறுத்தியிருந்த ஆட்டோவின் மேல் மோதியே விட்டார்..
வெகுண்டெழுந்த ஆட்டோ டிரைவர்.. அய்யரின் அங்க வஸ்திரத்தால் அவரின் கழுத்தை இறுக்கிப் பிடிக்க..
யாழினி விடுவிடென கோவிலுக்குள் சென்றுகொண்டே.. அண்ணா சீக்கரமா வாங்கோ.. எலெக்ஷன் டைம்ல யாரண்டையும் அரசியல் பேசாதீங்கோ..நான் க்யூவுக்குப் போறேன்.. சொல்லியபடி கோபுர வாசல் திட்டிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள்..
ஒரு வழியாய் ஆட்டோ ட்ரைவரின் பிடியிலிருந்து விடுபட்ட அய்யர் வண்டியின் பெட்டியைத் திறந்தார்.. எதிர்க்கட்சி கூட்டணியை ஆதரிக்கும் போஸ்டரை எடுத்து கோவில் சுவற்றில் ஒட்டினார்..
அசரீரி போல்..எங்கிருந்தோ வந்த யாழினி.. ஏன்ணா.. எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டேளா... ஒங்களுக்கு ஏன் இந்த வேலை.. எனச் சொல்லியபடி..அந்த போஸ்டரை கிழித்தாள்..
பஞ்சர் சைக்கிளும் மாடு தின்ற போஸ்டரும் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்த அந்த கால நினைவுகள் மனதில் வந்தன அய்யருக்கு..
இப்போதும் மக்கர் செய்த வண்டியும் யாழினி கிழித்த போஸ்டரும் கண்முன்னே மாபெரும் நம்பிக்கையைக் கொடுத்தது..
அய்யரின் கோபம் இப்போது பறந்தே போய்விட்டது.. யாழினியின் தோளில் கைபோட்டுக் கொண்டவர் வா இன்னிக்கி க்யூவுல நிக்க வேண்டாம்... நேரா தரிசணம் தான்.. எனச் சொல்லியபடி துள்ளல் நடையில் க்யூ ஜெம்ப் நடையைக் கட்டினார்..
மடிசாரை அணிச்சையாய் இழுத்துவிட்டபடியே யாழினி அய்யரை நம்பவியலாமல் பார்த்தாள்..கைவிரல்களால் அய்யரின் முகத்தைத் தடவி சடக்கென தன் நெற்றியில் சொடக்கி திருஷ்ட்டிக் கழித்தாள்..
கீழே கிடந்த கிழிந்த போஸ்டரை காராம் பசு ஒன்று தின்னத் தொடங்கியது..
ராகவபிரியன்
No comments:
Post a Comment