மானுடத்தின் வாழ்வியல் பொழுதுகள் ஒவ்வொரு நொடியும் தவறாமல் பதிவிடப்படுகிறது. இவ்வுண்மையை மானுடம் அறிந்திருக்கிறதா என்பது தான் புதிர். சித்ரகுப்தனால் இம்மையின் கணக்குகள் மறுமையில் சரிபார்க்கப்படுகிறதாம். நன்மை மிகுந்திருக்கும் கணக்கின் மானுடம் சொர்க்கம் செல்கிறான். இனியொரு பிறவி அவனுக்கில்லையென கருணீகர் புராணம் சொல்கிறது.
மானுட வாழ்வியல் கணக்குகள் துல்லியமாக சித்ரகுப்தனால் கணக்கிடப்படுகிறது. அவைகள் அழிக்ககியலா பதிவேடுகளில் பதியப்படுகிறதெனவும் அறியவருகையில் வியப்பு இமையை இறுக்கிப் பிடிக்கிறது..
தீமை மிகுந்து நிற்கும் கணக்கின் மானுடம் மீண்டும் பிறந்தே ஆகவேண்டும். முற்பிறப்பின் தீமைக்கான பலன்களைச் சுமந்தே ஆகவேண்டும். அப்படியான இன்னொரு பிறப்பில் அனுபவிக்கும் துன்பங்கள்தான் கர்மா என நம் புராணங்கள் சொல்கின்றன.
அந்த முற்பிறவி தீராதீமையின் எச்சங்களில் ஒரு கடுகளவு நன்மை செய்தவன் காஞ்சியில் பிறக்கிறான். அல்லது காஞ்சியில் இருக்கும் சித்ரகுப்தர் கோவில் வாசலையாவது கடந்து செல்லும் பாக்கியம் பெறுகிறான்.
கடந்த எட்டு மாத காஞ்சியின் வாழ்வில் சித்ரகுப்தன் கோவிலைக் காணும்போதெல்லாம் ஒரு கோபம் விருட்டென அகத்தில் உதிக்கும். எங்கோ என் முற்பிறவியில் செய்த கடுகளவு நன்மையாலோ இல்லை தீமையின் விளைவாலோ அரங்கனிடமிருந்து என்னைப் பிரித்து வரதனிடம் கொண்டு சேர்க்கும் தப்புக் கணக்கை சித்ரகுபதன் எழுதியிருப்பானோ எனும் கோபம் தான்.
இன்றும் சித்ரகுப்தன் கோவிலைக் கடக்கையில் உறங்கி க்கொண்டிருந்த கோபம் சட் டென விழித்து இவனை நிழற்படமெடுக்க வைத்துவிட்டது. இச்செய்கை இம்மையின் நன்மை பதிவேட்டில் பதியப்பட்டு இனியொரு பிறவி இல்லாமல் செய்துவிடட்டும் என உள்மனம் அரற்றத் தொடங்கியது..
விருத்தச் செய்யுள்களால் நிறைந்த கருணீக புராணத்தின் ஒரு சில அத்தியாயங்களை இவன் இன்று வாசிக்க நேர்ந்தது. அதுபோழ்து சென்னிசோழன் எனும் மன்னனைப் பற்றிய குறிப்பும் இவனின் கண்களுக்குள் பதிவாகித் தொலைத்தது.
அந்த மன்னன் செம்பொன்னாலான கிரீடம் அணிந்து காஞ்சியை ஆட்சி செய்திருக்கிறான். மன்னன் என்றாலே தீமைகள் விஞ்சி நிற்கும் கணக்குகளைத்தானே விட்டுச் சென்றிருப்பான். அவையெல்லாம் ஒன்றுவிடாமல் சித்ரகுப்தன் பதிவிட்டிருப்பான் போல. அதனால் தான் இந்தக் கோவிலின் வாசலை ஒவ்வொரு பொழுதிலும் இவனைக் கடக்கச் செய்கிறான். இப்பிறப்பிலாவது சித்ரகுப்தன் தன்பதிவேடுகளில் இத்துன்பம் தாங்கி அலையும் இவ்வெளிய மானுடத்தின் நற்செயல்களை ஒன்றுவிடாமல் பதிவிடட்டும்..
கருணீக புராணத்தின் சென்னிசோழன் பற்றிய பாடல்..
இத்தகு சீர் தொண்ட நன்னாடதன் கட் கச்சி
யெனும் பதி மாபதியு மாபதி........
---------------------------------------------------------
---------------------------------------செம்பொன்
முடிசென்னி சோழனடலரியேனொப்பன்..
சென்னிச் சோழன் செம்பொன்னாலான கிரீடமணிந்து ஆண் சிங்கத்தைப் போல் இருந்தானாம்.. மக்களுக்கு நன்மைகளையே செய்தானாம். கருணிக புராணம் சொல்கிறது. அப்படியானால் அந்த மன்னனுக்கு மறுபிறவிக்கு வாய்ப்பில்லை. ஆனால் அந்த செம்பொன் கிரீடத்தை காஞ்சியில் எங்கோ ஒளித்து வைத்துவிட்டிருக்கிறான். அந்த தீமை விரட்ட இப்பிறவியில் பிறந்திருக்க வேண்டும்...
போகட்டும்...இப்போது ஒரு சவரன் ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது.. என்ன செய்ய முற்பிறவியில் சம்பாதித்த தங்க ஆபரணங்களின் கணக்கும் அவைகள் புதைந்திருக்கும் புதையல் குறிப்புகளும் சித்ரகுப்தன் பதிவேடுகளில் இருக்கிறதா எனத் தெரியவில்லை..
எவருக்காவது தெரிந்தால் உடனே இவ்வெளிய வறியவனுக்கு வாட்ஸப்பில் அனுப்பித் தர வேண்டுகிறான்..
ராகவபிரியன்
No comments:
Post a Comment