கோபாலய்யர் கிணற்றிலிருந்து நேராக சில்லென தண்ணீர் கொட்டும் குழாயைத் திறந்தார்..
காற்றுதான் வந்தது..
யாழினி மாமிக்கு சிரிப்பு வந்தது.. ஏன்ணா.. மோட்டார் போட்டுட்டு பைப்ப ஓபன் பண்ணனும்ணா.. நீங்க அபிஷ்ட்டுன்னு அப்பப்ப ப்ரூப் பண்றேளே.. சொல்லியபடியே மோட்டார் சுவிட்ச்சை ஆன் செய்தாள்..
சட் டென அதீத சில்லிட்ட தண்ணீர் ஏந்திய கைகளில் கொட்டியதும் கோடையின் வெப்பம் மட்டுமல்ல அய்யரின் மனமும் குளிர்ந்தது.. கை கால்களை நன்றாக தண்ணீரில் கழுவிக்கொண்டார். இரண்டு கைகளாலும் தண்ணீரைப் பிடித்து முகத்தில் அடித்துக்கொண்டார்..
வேட்டியை பஞ்சகச்சமாக கட்டிக்கொண்டு முகத்திலும் உடலெங்கும் பட்டை பட்டையாய் விபூதி பூசியபடி சந்தியா வந்தனம் செய்யத் தொடங்கினார்..
யாழினி மாமிக்கு அய்யரின் மாற்றம் அதிசயமாய் பட்டது..
ஏன்ணா..என்னாச்சு.. நித்ய கர்மா பண்றதுன்னு எப்போ முடிவு பண்ணேள்..
அது ஒன்னும் இல்லடி.. எலெக்ஷன் வருதோன்னோ.. அதான். கவர்மெண்ட் மாறனுமோன்னோ.. அதான்.. மாற்றம் மட்டும் தானே மாறாததுன்னு எல்லோரும் சொல்லிண்டிருக்காளோன்னோ.. அதான்..ஏப்ரல் ஒண்ணாம் தேதி இங்கிரிமெண்ட் வரனுமோன்னோ..அதான்.. ஓம் பூர்புவஸுவ:.. என்று காயத்ரி மந்திரத்தைத் தொடர்ந்தார்..
போறும் போறும் அசடு வழியறது.. நீங்க அய்யரா மாறிட்டேள்னு இண்டேரக்டா சொல்றேளாக்கும்.. சொல்லியபடியே காப்பியை ஊஞ்சலில் வைத்தாள் யாழினி..
சந்தியா வந்தனம் முடித்த பெருமை கலந்த முகத்துடன் ஊஞ்சலில் வந்து அமர்ந்த கோபாலய்யர்.. கொஞ்சம் பக்கத்துல வந்து ஒக்காந்து காப்பிய ஆத்தி தரப்படாதாக்கும் ஆம்படையானுக்கு... எனச் சொல்லிவிட்டு கண்ணை வேறு சிமிட்டிக்காட்டினார்..
சட் டென ஊஞ்சலில் யாழினி அமர்ந்த வேகத்தில் காப்பி கீழே கொட்டியது. கோபாலய்யரின் முகம் சிவக்கத் தொடங்கியது.. மாற்றம் ஒன்றுதானே மாறாதது... என யாழினி சொல்ல உடனே அங்க வஸ்திரத்தை கழற்றி காப்பி கொட்டிய தரையைத் துடைக்கத் தொடங்கினார் அய்யர்..
இப்போது.. சிச்சுவேஷனை மாற்றியாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த யாழினி..
ஏன்ணா... நீங்க யாருக்கு ஓட்டு போடப்போறேள்..
தோ பாரு.. நான் சீரியஸ்ஸா எப்புடி தவளை புடிக்கறதுன்னு யோசிச்சுண்டிருக்கேன்..இப்ப போய் அட்டென்ஷன டைவர்ட் பண்ணாத.. டென்ஷன் ஆயிட்டேனா.. என்ன பண்ணுவேன்னு நேக்கே தெரியாது ஆமாம்..
என்ன பண்ணுவேள்.. கொட்டின காப்பிய அள்ளப் போறேளா.. இல்ல துண்டப் புழிஞ்சு காப்பிய அண்ணாந்து சொட்டு சொட்ட குடிக்கப்போறேளா.. இல்ல இனிமே காப்பியே வேண்டாம்னு போயிடுவேளா என்ன.. என்ன மாற்றம் இப்ப வரப்போறது.. எனக் கேட்டுக்கொண்டே எழுந்து மீண்டும் காப்பி தயாரிக்க சமையலறைக்குள் நுழைந்தாள்..யாழினி..
கோபாலய்யர் தவளை பிடிப்பது எப்படி என கூகுளில் தேடத் துவங்கினார்..
புதுக்காப்பியுடன் அய்யரின் பின்பக்கம் வந்த யாழினி அய்யரின் கைபேசியைப் பார்த்தாள்..
ஏன்ணா எதுக்கு தவளை புடிக்கறது எப்புடின்னு பார்த்துண்டிருக்கேள்..
எங்க லேபுக்கு வேணும்...அய்யரே நீங்க தான் புடிச்சுண்டு வரணும்..இல்லாட்டி இந்த வருஷ இண்க்ரிமெண்ட் கட்டுன்னு சொல்லிட்டான் அந்த படுபாவி ஹெட்மாஸ்டர்..அதான் கூகுள்ல பார்த்துண்டிருக்கேன்..
தவளை புடிக்கறது ரொம்ப ஈஸின்ணா.. கைல ஒரு வாளிய எடுத்துக்கோங்கோ.. நம்ம கோவில் குளத்துக்குப் போங்கோ.. படியிலேர்ந்து தவளை பாயும் போது வாளிய நீட்டினேள்னா அதுக்குள்ள பாஞ்சுடும்.. அப்புடியே ஒங்க அங்க வஸ்த்ரத்தை மூடி ஆத்துக்கு எடுத்துண்டு வந்துருங்கோ.. வாசல் திண்ணையில தான் வைக்கனும்.. உள்ள எடுத்துண்டு வரப்படாது புரியறதோன்னோ.. ஆத்துக்குள்ள தவளை வரப்படாது ஆமாம் சொல்லிட்டேன்.. மடிசாரை சரிசெய்து கொண்டே சொன்னாள் யாழினி..
யாழினி சொன்னதைத் தான் கூகுளும் சொல்கிறதென எண்ணிய அய்யர் வாளியுடன் கோவில் குளத்திற்கு செல்லத் தயாரானார்..
யாழினி..கிட்ட வாயேன்... எனக் கூப்பிட்டார். அருகில் வந்த யாழினியிடம் மெல்லிய குரலில்...நான் வர்றதுக்குள்ள இந்த பதினாறு மொழம் மடிசாருக்குப் பதிலா சுடிதார போட்டுக்கோயேன்..
ஓங்கி ஒரு குட்டு வைத்தவள்..
அசடு வழியறது.. போங்கோ போய் தவளை புடிச்சுண்டு வாங்கோ..ஒங்க சமத்த பாக்கறேன்..
கோபாலய்யர் தலையைத் தடவியபடியே குளத்திற்கு வந்தார்.
பாசிபிடித்த படிகளில் நிறைய தவளைகள் இருந்தன..
அருகில் சென்றதும் விருட்டென குளத்திற்குள் பாய்ந்தன..
ஒன்று வலப்பக்கம் குதித்தது...இன்னொன்று மேல் படியில் தாவியது.. அவர் மீது ஒன்றுபாய.. தடாலென குளத்திற்குள் விழுந்தார் அய்யர். சுதாரித்து எழுந்தவர் தண்ணிரில் மிதந்த தவளைகளை வாளியை விட்டு மொந்தி எடுத்தார்.. வாளியில் தண்ணிர் தான் வந்தது .. தவளைகளைக் காணோம்.. தவளை பிடிக்கும் கலையை கற்றாக வேண்டுமே.. களவும் கற்று மற எனச் சொன்னவன் தவளையைப் பிடித்து தண்ணீரில் விடக் கற்றுக்கொள் எனச் சொல்லவில்லையே..
மெல்ல பாசி வழுக்காமல் நிதானமாய் சாம தான பேத தண்டங்களை உபயோக்கிக்காமல் வெறும் வாளியை மட்டும் நீட்டி ஏறக்குறைய இருபதிற்கும் மேல் தவளைகளைப் பிடித்துவிட்டார் அய்யர்.
பெருமை பொங்க வீட்டுத் திண்ணையில் தவளை வாளியை வைத்துவிட்டு யாழினியைப் பார்த்து ஒரு மாற்றமான லுக் விட்டார்..
அண்ணா நீங்க ரொம்ப சமத்தாயிட்டேளே.. ஏகப்பட்ட தவளைய புடிச்சுட்டேளே.. பாருங்கோ.. ஒரு தவளை வாளி விளிம்புல நிக்கறது.. வெளியில போயிடப்போறது... என பயம் காட்டினாள் யாழினி..
அப்பாடா என்ன ஜெம்ப்..என்ன ஜெம்ப்...எனச் சொல்லிக்கொண்டே..திண்ணையில் வாளியை வைத்துவிட்டு ஊஞ்சலில் வந்து அமர்ந்தார் கோபாலய்யர். எப்போதும் ஆன்மீக சேணல் வைப்பவர் ஒரு மாற்றத்திற்காக நியூஸ் சேணல் வைத்தார்..
தவாக திமுக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டதாக சொல்லிக்கொண்டிருந்தது நியூஸ்..
அண்ணா ஒரு தவளை தாவி வெளியில போறது பாருங்கோ எனக் கத்தினாள் யாழினி..
நிம்மதியா நியூஸ் கூட பாக்க முடியல இந்தாத்துல என முணுமுணுத்தபடியே எழுந்து வேகமாக ஓடியவர் வாளியைத் திறந்து பார்த்தார்..
அந்த நொடியைப் பயன்படுத்திக்கொண்டன தவளைகள்..ஒவ்வொன்றாக வெளியில் பாய்ந்து தின்ணையெங்கும் தாவத் தொடங்கின..
படீரென வாசற்கதவை அடித்துச் சாத்திய யாழினி.. தவளை ஆத்துக்குள்ள வரப்படாது.. தவளை ஆத்துக்குள்ள வந்துடப்படாது..என்று தாவித்தாவி கத்தத் தொடங்கினாள்..
டிவியில் ஒருவர் பிஜேபி உள்ளே வந்துட போறது என உரத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்..
கோபாலய்யர் தலையில் கைவைத்தபடி திண்ணையில் அமர்ந்தே விட்டார். இருட்டிவிட்டது. இனி விடிந்தால் தான் குளத்திற்குச் செல்லமுடியும். எப்போது விடியப்போகிறதோ என்னமோ... ஆனால் யாழினி வீட்டுக்கதவைத் திறந்தால் தானே வீட்டுக்குள்ளேயே போக முடியுமென யோசித்தவர்..
மாற்றம் ஒன்றுதானே மாறாதது என தனக்குத் தானே சொல்ல வந்தவர் தவளை ஒன்றுதானே தாவாதது... என உரத்துச் சொல்ல..
என்ன சொன்னேள் எனக் கத்தியபடியே யாழினி படீரென கதவைத் திறந்தாள்..
விருட்டென ஒரு தவளை வீட்டிற்குள் தாவியது..
பிஜேபி உள்ளே வருவதை எவராலும் தடுக்கமுடியாதென டிவி சொல்லிக்கொண்டிருந்தது..
ராகவபிரியன்
No comments:
Post a Comment