கால யதார்த்தம்...தத்துவ சிறுகதை
-----------------------------------------------
பஞ்சப்பராரியாய் கோவில் வளாகங்களில் சுற்றித்திரிந்தவரை இன்று பராரி வளாகமுனி என எல்லோரும் அழைக்கிறார்கள்..
தங்களின் குழப்பங்களுக்கு மனப்பிறழ்வுகளுக்கு தீர்வு வேண்டி மக்கள் அவரைத் தேடி வரத் தொடங்கினார்கள்..
வாழ்வின் அலைச்சல் எப்போது முடியுமென்பதுதான் அனைவரின் கேள்வியாகவும் இருந்தது..
அப்படித்தான் பாணபாண்டியும் அலைந்து திரிந்து அன்று தேடிக் கண்டுபிடித்து அவர் முன் விழுந்து வணங்கினான்.. கைகட்டி வாய்பொத்தி பவ்யமாய் அவர் முன் நின்று கொண்டிருந்தான்..
ஐந்து தலை நாக பிரதிமையை குளிப்பாட்டி இல்லை இல்லை அபிஷேகங்கள் செய்து கொண்டிருந்தார் பராரிமுனி... தாமிர கிண்டியிலிருந்து ஒரு உத்தரணி தண்ணீரை நாகத்தின் மேல் ஊற்றுவார். பிறகு எழுந்து சென்றுவிடுவார். கோவிலை ஒருதரம் சுற்றி வருவார்.. மீண்டும் அபிஷேகத்தைத் தொடர்வார் பராரி வளாக முனி...
அன்று முனி இவன் பக்கம் திரும்பவே இல்லை..
பாணபாண்டி மனதளவில் குழம்பிப் போய் இருக்கிறான். வாழ்வின் யதார்த்தங்கள் பதார்த்தங்களுடன் ஒத்து வராத ஒருவித ப்ராஹ்மெண்டேஷன் மன நிலையில் இருக்கிறான். அதனால் பராரிமுனியின் சீடராக தன்னை மாற்றிக்கொள்ள இப்போது அவர் முன் நின்று கொண்டிருக்கிறான்.
வளாக முனி ஒவ்வொரு முறை வளாகத்தைச் சுற்றும் போதும் பாணபாண்டியும் அவர் பின்னால் சுற்றுவான்..
சட் டென அபிஷேகத்தை நிறுத்தினார் முனி..
தம்பி இங்கே சீடர்களுக்கான வேலை எதுவும் காலி இல்லை.. நீ முதலில் உன் சந்தேகத்தை உன்னிடமே கேட்டுக்கொள். பதில் இல்லை எனில் என்னிடம் கேள் என்றார்..
சுவாமி..வேலையற்ற பட்டதாரியான எனக்கு என் வீட்டில் சோறு போடுகிறார்கள்.. வெறும் அரிசிச் சோறும் காய்களற்ற குழம்பும் தான். அது ஏன் என்பதுதான் எனக்குள் உறுத்தும் கேள்வி...ஆனால் சம்பாதிக்கும் என் தந்தைக்கு குழம்புடன் உருளைக்கிழங்கு கார வதக்கல் வைக்கிறார்கள்.. இது நிலை நிறுத்தப்பட்ட உண்மை.. அதுமட்டுமல்ல.. இது என் தகப்பனின் அதிகாரதின் மேலான கேள்விகளற்ற குவிப்பு நிலை... எனக்குள் விடையற்றிருப்பதால் அதற்கான தீர்வு தேடி குருவே தங்களிடம் வந்திருக்கிறேன்..
பராரி வளாக முனி பாணபாண்டியின் கேள்வியில் மட்டுமல்ல பாண்டித்யத்திலும் பதறித்தான் போனார்..
மெளனமாக மீண்டும் நாகப் பிரதிமையின் மேல் உத்தரணியால் தண்ணீர் ஊற்றத் தொடங்கினார்...
எழுந்து கோவில் வளாகம் சுற்றி ஓடிவரத்தொடங்கினார்..
பாணபாண்டியும் அவர் பின்னால் ஓடத் துவங்கினான்..
சட் டென நின்றவர்...
தம்பி இப்போது நீ உன் வீட்டிற்குப் போ..நாளை மதிய உணவிற்கு நான் வருகிறேன். உன் தந்தையுடன் நாம் உணவருந்துவோம்.. அப்போது பரிமாறப்படும் பதார்த்தங்களுடனான யதார்த்தங்களின் உண்மை நிலையைப் பார்க்கிறேன்.. பிறகு உன் தகப்பனின் அதிகார குவியலை கலைத்துவிடுகிறேன்.. அங்கிருக்கும் காலங்காலமாக உலவும் ஐரணியை என் நாகத்திற்கு படைத்துவிடுகிறேன்.. இனி வாழ் நாள் முழுவதும் உனக்கு உருளை கார வத்தல் வண்டி வண்டியாய் கிடைக்கும் போய் வா.. என்றார்..
பாணபாண்டிக்கு பேரமைதி சித்தித்தது போன்ற மன நிலை..உருவானது... அவனின் மனக்குளத்தில் ஐந்து தலை நாகம் நீந்திக்கொண்டிருந்தது... ஆனால் அதன் மேல் கல்லெறியும் உந்துதல் கட்டுபட்டிருந்ததை உணர்ந்தான்..
முனிவரின் தவ ஆற்றல் இப்போது அவனுக்கு மாய யதார்த்தத்தை உணர்தியது...
அடுத்த நாள் பராரிவளாகமுனிக்கு பாண்டியின் வீட்டில் ஆன்மீக அற்புத வரவேற்பு கிட்டியது...
எல்லோரும் மெளனமாக அமர்ந்திருக்க உரையாடலற்ற தெய்வீக நிலை அங்கே நிலவத் தொடங்கியது..
முனி மெள்ள ஒரு தாம்பாளத்தில் நாக பிரதிமையை வைத்தார்... பாண்டி வேகமாக ஒடி கிண்டியில் நீர் நிரப்பி வந்தான்..
வளாக முனி அபிஷேகங்களைத் தொடங்கினார்.. அபிஷேகத்திற்குப் பின்னான நைவேத்யங்களை பிரதிமையின் முன் வைக்கக் கட்டளையிட்டார்..
அன்னம் காய்களற்ற சாம்பார் மற்றும் உருளைக்கிழங்கு கார வத்தல் ஒரு சட்டி நிறைய வைக்கப்பட்டன..
ஒரு உத்தரணி பிரதிமையின் மேல் ஊற்றுவார் முனி..பின் சாதம் ஒரு உண்டை சாம்பார் கலந்து உருட்டுவார். அப்படியே வாயில் போட்டுக்கொள்வார்.. பிறகு ஒரு தேக்கரண்டி உருளைக் கார வதக்கல் அவரின் வாயிற்குள் செல்லும்..
தம்பி நாகம் நீந்தும் குளத்திற்குள் மீன்கள் வாழ்வதில்லை.. அதனால் நாகப்பிரதிமை இருக்கும் என் நெஞ்சக் குளத்திற்குள் நைவேத்தியங்களை வீசிக்கொண்டிருக்கிறேன்.. எனச் சொல்ல எல்லோருமே சிலிர்த்துப் போனார்கள்..
இப்படியே மாலைவரை தொடர்ந்து கொண்டிருந்தார்..
இந்த தெய்வீக செயல் மூலம் பராரி வளாக முனி நைவேத்யம் அத்தனையையும் காலி செய்துவிட்டிருந்தார்.. நாகமும் குளத்தின் ஒரு மூலையில் உடல் சுருட்டி உறங்கச் சென்று விட்டிருந்தது..
பாணபாண்டியும் அவரின் தகப்பனாருக்கும் இப்போது நிலை நிறுத்தப்பட்ட ஒரு நிஜ உண்மை புரிந்தது... பராரியின் முன் வைக்கும் நைவேத்யங்கள் அதிகாரக் குவிப்பை ஒரு ஒட்டுப் பருக்கையின்றி காலிசெய்துவிடுமென புரிந்து கொண்டார்கள்..
இருவருமே இப்போது பராரி வளாக முனியின் சீடர்களாக அவரின் கோவில் வளாக மடத்தில் இணைந்து கொண்டு நைவேத்யங்களை தயார் செய்யத் தொடங்கினார்கள்..
வளாக முனியும் நாக நைவேத்யம் செய்து கொண்டே இருந்தார்..பாணபாண்டிக்கும் அவரின் தகப்பனாருக்கும் பதார்த்தங்கள் கிட்டாத பாஸ்டிச் கால யதார்த்தம் மெல்ல உருவம் காட்டத் தொடங்கியது..
பாணபாண்டியின் அன்னை நிம்மதியாய் ஏற்கனவே சமைத்தவற்றில் ஒரு சிறு பங்கை தனியாக அவளுக்கென்று எடுத்து வைத்திருந்ததால் நிம்மதியாக பசியாறி உறங்கச் சென்றாள்..
ராகவபிரியன்
No comments:
Post a Comment