Wednesday, April 1, 2026

 









மனிதரோ மிருகங்களோ 

உலவவியலாத

வனாந்தரங்களை

விழைகிறதென் மனம்..


பறவையோ விமானமோ 

செயற்கை இயற்கை கோள்களோ

வேறெந்த வானுறுப்புகளோ அற்ற

வெளியில் நடக்கச் சொல்கிறது

என் பாதங்கள்..


நதியும் கடலும் குளியலறைகளும்

நீரூற்றுகளும் மழையும் 

பொழிபனித்துளியும் அற்ற

இன்னபிற நீரெனும் எதுவுமற்ற 

இடங்களில் தான் 

குளிக்கத் துணிகிறது 

இப்பாழும் வேர்க்குமுடல்..


விடுதிகளோ வீடோ

விருந்தோம்பலோ 

வீதி உணவகங்களோ

விழாக்கால அன்ன தானங்களோ அற்ற

ஊரொன்றில் தான்

அதீதமாக பசிக்கிறதெனக்கு..


ஆனாலும் 

சுடுகாடுகளோ இடுகாடுகளோ 

அற்ற இடங்களில்

மரணிக்கவேண்டாமெனச் சொல்லும்

மனச்சொல்லின்

பொருள் மட்டும் புரியவில்லையெனக்கு..


ராகவபிரியன்







No comments:

Post a Comment

  ஆறு என்பதனுள் வைத்துத்தான் மானுட நாகரீக வரலாறு படைக்கப்பட்டிருக்க வேண்டும். சோழ நாட்டின் வாழ்வியல் காவிரி ஆறின் ஓட்டத்தைக் கொண்டே மானுட ஓட...