மனிதரோ மிருகங்களோ
உலவவியலாத
வனாந்தரங்களை
விழைகிறதென் மனம்..
பறவையோ விமானமோ
செயற்கை இயற்கை கோள்களோ
வேறெந்த வானுறுப்புகளோ அற்ற
வெளியில் நடக்கச் சொல்கிறது
என் பாதங்கள்..
நதியும் கடலும் குளியலறைகளும்
நீரூற்றுகளும் மழையும்
பொழிபனித்துளியும் அற்ற
இன்னபிற நீரெனும் எதுவுமற்ற
இடங்களில் தான்
குளிக்கத் துணிகிறது
இப்பாழும் வேர்க்குமுடல்..
விடுதிகளோ வீடோ
விருந்தோம்பலோ
வீதி உணவகங்களோ
விழாக்கால அன்ன தானங்களோ அற்ற
ஊரொன்றில் தான்
அதீதமாக பசிக்கிறதெனக்கு..
ஆனாலும்
சுடுகாடுகளோ இடுகாடுகளோ
அற்ற இடங்களில்
மரணிக்கவேண்டாமெனச் சொல்லும்
மனச்சொல்லின்
பொருள் மட்டும் புரியவில்லையெனக்கு..
ராகவபிரியன்
No comments:
Post a Comment