Tuesday, April 7, 2026

 




வெப்ப நாட்களின் கொடுமை சொற்களை மீறிச் சுடுகிறது.. 

ஆவிபறக்கும் சாலையில் ஒருவன் உடலை வதைத்து கைவண்டியையும் வாழ்வையும் இன்னமும் இழுத்துக்கொண்டிருக்கிறான்..

புங்க மரத்தடி திப்பி நிழலில் சில ஆவினங்கள் அசைபோட்டபடி இளைப்பாறுகின்றன..

அவற்றின் மேல் உதிர்கின்றன வெம்பி வதங்கிய நூற்றாண்டு கால சந்தைச் சருகுகளும் பூக்களும்..

ஆவின வெளிமூச்சு வெப்பப் புகையில் கோடை மானுட மேதைமையின் வடிவம் காட்டுவதை நுண்ணிய பார்வையில் காணவியலும் அப்போதில்

காய்ந்து வெடித்த மருத வயல்களில் முண்டாசு சுற்றியபடி                      வாழ்வாதார மந்தைகளை ஒழுங்குபடுத்தும் மேய்ப்பர் சிறுவர்கள்     கைக்கம்புடன் கோடைவெப்பத்தை ஒழுங்கு செய்ய ஓடத்துவக்கம் நடந்தேறுகிறது...

ஆங்கே வெடித்துச் சிதறும் மூங்கில் அரிசிகளை உருவியெறிந்த                எழுத்தின் காலவெப்பத்தின் முதுகில் பச்சை மூங்கிலால்  பளாரென                        விளாச நினைக்கிறான் தானணிந்த மகுடத்தை சரிசெய்யும் மானுடன்..

வன்னி மரத்திலிருந்து தொங்கும் ஈர தாவணி போர்த்திய இளநீர் குலைகள் ஒன்றிரண்டு இருசக்கர வாகனவோட்டிகளை நிறுத்தத்தான் செய்கிறது..

எனினும்

நெடுஞ்சாலை கிராம ஓர பொருளாதாரத்தின் அடித்தளத்தின் பொக்கைகளை நீர் மோரும் சர்பத் தள்ளுவண்டிகளும் கரணையால் நிரப்பிக் கொண்டிருக்கையில்..

தற்காலிகமாக மெல்ல கவிகிறது மேற்கு வான பகலவனின் கோடை....

ஒரு வெப்ப நாளின் சுடு சொல் மாலையிலோ இரவிலோ சூடிழக்காமல் கணன்றுகொண்டிருக்கிறது..

ஒற்றை விரலால் பூத்திருந்த நீறெடுத்து நெற்றியில் தடவியபடி தலைசாய்க்கிறான் மானுடம்..

இனி கோடைத் தூக்கம் ஆழ்ந்த உறக்கத்தின் அளவீடுகளை கேலிசெய்யத்தான் போகிறது..

ராகவபிரியன்



No comments:

Post a Comment

  கால யதார்த்தம்...தத்துவ சிறுகதை ----------------------------------------------- பஞ்சப்பராரியாய் கோவில் வளாகங்களில் சுற்றித்திரிந்தவரை இன்ற...