கடல் பறவையொன்று
தன் அழகையும்
ஓயாத கனவு அலைகளையும் சுமந்தபடி
பள்ளி நோக்கி சிறகடிக்கத்
தொடங்கிய தேவ வேளை அது..
ஒரு தலை காதல் முட்டாள்
மீனுக்கான வலையில்
கத்தியைச் செருகி
ஆலாவிற்கு வீசியதில்
கடல் பரப்பெங்கும்
அதன் கனவு றெக்கைகளும்
பச்சை ரத்தமும்
அலைகளோடு எல்லோரின்
இதயக் கரைகளிலும்
மோதி மோதி திரும்பிக்கொண்டிருக்கின்றன.
பள்ளிக் குழந்தையின்
பாடப் புத்தகங்களின் நடுவில்
கத்தி செருகும்
மாபெரும் மடத்தனம்
போதிக்கும் கல்வி
மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டுமென
கச்சத்தீவு வரை கூவும்
வன்முறையின் கடல்காற்று
சுழன்று சுழன்று அழுகையில்
போலி முற்போக்கு கண்களில்
ஈரப் பதம் ஒரு சதவீதம் கூட
காணப்படவில்லை..
அந்த முட்டாள்
கொலைவாளை அலைகளில்
கழுவி கஞ்சா இலைகளால்
துடைத்துக் கொண்டிருக்கிறான்..
கொலையாளிகளும்
போதை வியாபாரிகளும்
முற்போக்கு முட்டாள்களும்
சுற்றி நின்று
அந்தக் கயவனை காப்பாற்றத் துடிப்பதைத்தான்
கடலன்னையால்
பொறுத்துக் கொள்ளவே இயலவில்லை..
எந்த ராட்சச வேளையில்
தனுஷ் கோடியை
விழுங்கியது போல்
இந்தக் கயமையை சுனாமியென எழுந்து
கடலன்னை
விழுங்கப் போகிறாளோ..?
ராகவபிரியன்
No comments:
Post a Comment