Thursday, August 29, 2024

 திருவரங்க மோகனமித திவ்ய மயக்குகள்…4

அரங்கனின் மொழி அர்த்தங்கள் நிறைந்தவை…ஒரு சொல் ஆழ்கடலின் ஆழம் தொடும் அடர்வு கொண்டது…அரங்கனுடன் உரையாடுதல் என்பது அரங்கனின் சொற்களை உள்வாங்குதல் மட்டுமே…அவனின் மொழியில் பதிலுரைத்தல் என்பது மானுட சக்திக்கும் அப்பாற்பட்டது…அரங்கனுடன் முனிபுங்கவர்கள் தவசீலர்கள் பக்திமான்கள் உரையாடியிருப்பதை மானுடம் உணர்ந்தே இருக்கிறது….
இவ்வெளிய பக்தன் கடந்த சில இரவுகளில் அரங்கனின் தெய்வீகச் சொற்களை செவிமடுக்க நேர்கிறது…ஒவ்வொரு சொல்லும் கடல்பரப்பில் விழுந்து அர்த்தம் நோக்கி நீந்தத் தொடங்கும்…அச்சொற்கள் செவி வழி மனத்தரை அடையுமுன்பே அர்த்தக் கடலின் வேக ஓட்டம் சொற்சில்லை எங்கோ இழுத்துச் சென்று கரைத்துவிடும்…எஞ்சிய ஒன்றோ இல்லை இரண்டோ சொற்களுக்கும் அர்த்தம் தேடித்தான் இவ்வெளியவன் அரங்கன் முன் நின்று கொண்டிருக்கிறான்…
எதிரே திருவரங்க மோகனமித திவ்ய ரூபம் காட்டிடும் துத்தை மரத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறான்…பார்வையும் நாளும் சாயத் தொடங்க ஆதவக் கிரணவழி துத்தை மரமிடை நரசிம்ம முகம் காட்டுகிறான் அரங்கன்…உடல்மொழி நடைமொழி பாவனைமொழி முகமாற்றுமொழி என எத்தனையோ எழுத்துருக்களற்ற மொழிகளை வாசித்தறிதல் சுலபம்…ஆனால் அரங்க தெய்வம் துத்தை மர வழி காட்டிய முகமொழி புரிபடவே இல்லை…
மதுரகவி தன் ஆச்சாரியரிடம் கேட்கிறார்…எத்தைத் தின்று எங்கே கிடக்குமென…ஆச்சாரியர் அத்தைத் தின்று அங்கே கிடக்குமெனும் மறுமொழியின் அர்த்தக் கடலை ஆய்ந்தறிந்தவர் இன்றுவரை எவருமில்லையல்லவா…பிறகெப்படி துத்தைமர முகமொழியைப் புரிந்து கொள்வது…பக்தன் இரவெல்லாம் அரங்கனிடம் மொழிக்கான தெய்வீகஅகராதிப் பொருளை பவ்யமாய் யாசித்தபடி இருக்கிறான்…அரங்கன் அடுத்த நாள் குணசீலம் வரக் கட்டளையிடுகிறான்…
குணசீலத்தில் பெருமாளுக்கான தாமரை மலர் ஒன்றைச் செலுத்த பட்டர் அதை பெருமாளின் திருவடியில் சமர்ப்பிக்கிறார்…இவ்வெளியவனின் கேள்வியும் அரங்க மொழியின் புரியாமையும் தாமரையில் வைத்து குணசீலரில் திருவடியில் கிடத்தப்படுகின்றன…ஆராதனம் நிறைவுபெறுகிறது…கோவிலைச் சுற்றி வருகிறான்…நரசிம்மரையும் அவர் தாங்கி நிற்கும் விமானத்தையும் படம் பிடித்துக் கொள்கிறான்…கடல் காணுமளவு ஆழம் வரை தெளிந்திருக்கிறது…அர்த்தத்தின் அடித்தளம் கண்ணில் படவேவில்லை….கொடிமரம் முன்பு விழுந்து வணங்குகிறான்…
பாதங்கள் ஆச்சாரியர் விகனஸரின் சந்நிதி நோக்கி கிடத்தப்பட திடுக்குறுகிறான்…பின்பு சமாளித்து திசைமாற்றி நமஸ்கரித்து எழுந்து ஆச்சாரியர் விகனஸர் முன்பு மன்னிப்புக் கோரியபடி வணங்குகிறான்…விகனஸரின் உருவத்தை உற்று நோக்குகிறான்…ஆச்சாரியர் நிகம்மாந்த மஹாதேசிகர் உள்ளே சேவை சாதிக்கிறார்…திருவரங்க மோகனமித திவ்ய மயக்கின் மேகங்கள் ஒன்றுகூடி ஒளிரத்தொடங்குகின்றன…
அவர்முன் அத்தகிரி எழுகிறது…அத்தகிரி ஆலயம் தான் பெருமாள் கோவிலென அழைக்கப்பட்ட ஆதி ஆலயம் என்பது சட் டென பொட்டில் தட்டுகிறது…அரங்கனின் சொல்சில்லொன்று எதிர்த்து நீந்தி கண்முன்னே மிதந்து வருகிறது….
ஆசாதி பேஷு கிரிசேஷு சதுர்முகேஷ்வபி
அவ்யாஹதா விதி நிஷேத மயி தவாஜ்ஞா
ஹஸ்தீச நித்ய மநுபாலந லங்கநாப்யாம்
பும்ஸாம் சுபாசுப மயாநி பலாநி ஸூதே…
[ஸ்ரீ வரத ராஜ பஞ்சாசத்]
அத்தகிரி வரதனே இந்திரன் எமன் எனச் சொல்லப்படும் திக்பாலகர்கள் எட்டுபேர்…சிவம் பதினொன்று…இன்னும் நிறைய நான்முகத் தேவர்கள்… என ஒவ்வொரு உலகத்திலும் உள்ளனர்…அண்டசராசரங்களில் அரங்கனின் மொழிக் குறிப்பறிந்து சேவை சாதிக்கின்றனர்…அரங்கனின் சொல் அண்டசராசர இயக்கத்தின் சாசனம்…அரங்க கட்டளையை மீறினால் தண்டனை நிச்சயம்…அரங்கனின் மொழியை சொல்லின் பொருளாழத்தை மானுடர்களால் அறிந்து கொள்ளுதல் என்பது மேலதிக கடினமானது மட்டுமல்ல…இயலவே இயலாததெனின் அதுதான் நிஜம்…
சில சாஸ்திர விதிமுறைகளைக் கொண்டே அரங்க மொழியை ஓரளவு அறிதல் சாத்தியம்..அரங்கனின் சொல்லை மீறி நடக்கையில் விளைவுகள் கடுமை காட்டத் தவறியதில்லை…தெய்வ தண்டனையிலிருந்து தப்பித்தல் என்பது பிறகெப்போதும் முடியாதது…அரங்கனின் கோவில் காரியங்களில் சமரசம் செய்தால் அரங்கனின் கட்டளையை மீறியதாகவே கொள்ளப்படும்….கண்டிப்பாக தெய்வ ஆகம சாஸ்த்திர விதிமீறல்களுக்கான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும்… வாழ் நாளிலேயே விதிமீறிய மானுடங்கள் நரகத்தை அனுபவிப்பதை மனிதக் கண்கள் நித்ய காட்சியாய் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன…
சூரியோதயத்திற்கு முன் கோவில் நடை திறக்கப்பட்டாக வேண்டும்…ஒருக்கால பூஜையோ ஆறுகால பூஜையோ அரங்கனின் அர்ச்சையைக் குளிர்விக்கும் பக்தர்களுக்கான தரிசன நேரம் நண்பகல் வரை இருத்தல் அவசியம்…மீண்டும் மாலை அஸ்தமனத்திற்கு முன் நடை திறக்கப்பட்டு அர்த்த ஜாமம் வரை தரிசன உபயம் தரப்படவேண்டும்…இது உலகெங்கிலுமுள்ள பெருமாள் கோவிலென அழைக்கப்படும் கோவில்களில் பின்பற்றப்பட வேண்டுமென்பது அரங்கனின் ஆகம மொழிச் சொல்…இவ்வெளியவனுக்கு அதன் சாத்தியக் கூறுகள் புரிபடவில்லை…கோவிலின் நித்ய ஆராதனங்களுக்கான திரவிய பொருள் வரவுகளுக்கான ஆதாரங்கள் அரங்கன் ஏற்கனவே தந்திருக்கிறான்…
இவ்வெளியவனை அரங்கன் கடலின் பரப்பில் அழுத்துவது புரிகிறது…உயிர்க்காற்றின்றி கடலின் தரைதொட்டு எழுந்த அயர்வு இவ்வெளியவனை அழுத்தத் தொடங்குகிறது…அரங்கனின் சொல்லின் அடர்வும் ஆழமும் புரியாவிடினும்…எதுவோ ஒன்று விளங்கியது போன்ற தெளிவு பிறக்கிறது…திருவரங்க மோகனமித திவ்ய மயக்கின் சலன கடல் நீரில் நீந்திக்கொண்டிருக்கும் உடலும் இதயமும் கனக்கத் தொடங்கியதை உணர்ந்து கொள்கிறான்…
அடைந்திட்டு அமரர்கள் ஆழ்கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம் சுற்றி வாசுகி வன்கயிறாக
கடைந்திட்ட கைகளால் சப்பாணி
கார்முகில் வண்ணனே சப்பாணி
துர்வாசமுனிவரின் சாபம் தேவர்களின் செல்வ இழப்பிற்கான காரணம்…அனைத்து மரணம் வென்ற தேவர்களும் அரங்கனிடம் மண்டியிடுகின்றனர்…அரங்கன் மந்தார மலையை வாசுகி கயிறால் கட்டி கடைகிறான்…கடல் கடைந்தால் செல்வங்கள் கண்டிப்பாக சேர்ந்தே தீரும்…
பாற்கடல் கடைந்த சின்னஞ்சிறு கைகளால் சப்பாணி கொட்டு…அரங்கா… ரசிக்கிறேன்…என்று சொன்ன பெரியாழ்வாரின் பாடல் வரிகளை முணுமுணுத்தபடி முக்கொம்பு பாலத்தில் வந்து கொண்டிருக்கிறான்….அரங்கனின் சப்பாணி கொட்டும் கைத்தட்டல் ஓசை காவிரியலைகளின் கடைசல் சப்தங்களென ஒலித்துக் கொண்டே இருக்கிறது….அரங்கனின் கோவில் சப்தம் சில காதுகளில் குடைச்சல் தரவும் நேரலாம்…என்ன செய்வது… திருவரங்க மோகனமித திவ்ய மயக்குகளின் அடர்விற்குள் புகுந்து வெளிவருதல் மானுட சக்திக்கான சவால் தானே…சொல்லுங்கள்…
திருவரங்கன் திருவடிகளே சரணம்…
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்…
ராகவபிரியன்

எல்லா உணர்ச்சிகளும்:
Sridhar Nambi மற்றும் Gopal Manogar

      From time immemorial

Little Krishna comes back

to our Hindu traditional houses
during every august/september...
putting one flour childish foot in front
and another at back
from the door to Pooja room
wending on His way
playing the divine flute...
He is invisibly tall like His teachings
and dark like His magics...
His arrival marks
the stirring joyous cream of butter
from the life's suffering buttermilk...
The twisted and rounded crunchy snacks
salty and sweety
marked out the pain from pleasure...
and vice versa..
The fruits and flowers
with camphor circles
offered in front of Him ...
definitely eliminate
the rotating death from real life...
Every Janmashtami Krishna
peeped beyond His curtains
will smile and bless
the power of peace and prosperity...
He answers not only the question of His existence
but also the ambiguous human existentialism...
Ragavapriyan Thejeswi
கோவில் மற்றும் உரை படமாக இருக்கக்கூடும்

Sunday, August 25, 2024

 திருவரங்க மோகனமித திவ்ய மயக்குகள்…3


அனுதினமும் தொடக்கம் கண்டாக வேண்டும்…தொடங்க வேண்டுமெனில் அரங்கனைப் பார்த்தாக வேண்டும்…அரங்கனைப் பார்க்க கோவில் செல்வது தானே வழக்கம்…கோவிலின் முன்பே கண்விழிக்கும் வரம் அரங்கன் தந்திருந்தால் மட்டற்ற மகிழ்வுடன் எந்நாளையும் எக்காரியத்தையும் தொடங்கலாம்….


இதோ நாள் தொடங்கி நீண்ட நேரமாகிவிட்டது….இன்னமும் கோவில் கதவுகள் திறக்கப்படவில்லை…பக்தன் நிற்கிறான்…நடக்கிறான்…அமர்கிறான்…ஆழ்மனதில் அழுகிறான்…அவனின் இயக்கம் தேங்கி நிற்க…நாள் நகர்ந்துகொண்டே இருக்கிறது…


ஒரு முறை அரங்கனிடம் கேட்கிறான்…பக்தர்கள் உன்னைப் பார்க்க எவ்வளவு துன்பங்களை கடக்கிறார்கள்…இவ்வெளிய பக்தனும் கூட உன்னைக் காணவியலாமல் ஏமாந்து திரும்பிய சுற்றுக்கள் நிஜம் தானே..


அரங்கன் சொல்கிறான்…பக்தர்களை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்…என் அர்ச்சையின் முன் ஒரு நொடி பக்தன் முகம் தென்பட்டால் என் அர்ச்சை குளிரும்…அதனால் தான் தரிசனம் தேடி பக்தர்கள் கூட்டம் என்னை குளிர்விக்க கோவில்களில் குவிகிறார்கள்…உனக்கோ என் அர்ச்சை முன்பு விழிக்கும் வரம் தந்திருக்கிறேன்…எதிரே நில்…என் அர்ச்சையின் உக்கிரம் தணிய நின்று கொண்டே இரு…என் கோவில் கதவுகள் திறப்பதும் மூடுவதும் என் பார்வையின் தெய்வீக கதிர்கோடுகளை தடைசெய்வதில்லை…அதைப் பற்றிய கவலை உனக்கெதற்கு…

இவ்வெளிய பக்தன் அனுதினமும் இயன்றவரை அர்ச்சையின் முன் நிற்கிறான்…சில உதயங்களில் விஸ்வரூப அர்ச்சையின் குளிர் தரிசனம் கிடைக்கிறது…சில நேரங்களில் நாளுடன் சேர்ந்து அவனும் ஏமாற்றத்துடன் நகர்ந்தகல நேர்கிறது…


அஸ்வினா புருதஞ்சா நரா ஸவீரயா தியா

திஸ்ஸ்ந்யா வநதாம் கிராஹ்


ருக் வேதத்தின் வார்த்தைகள் சிந்திக்கத் தூண்டுபவை…மானுட மீட்பை தூண்டுபவை…சயவன முனிவரின் பார்வையின் விஸ்தீரணத்தை உள்ளடக்கியவை…கண்ணுக்குத் தெரியாத ஆழ்மன காயங்களில் களிம்பு பூசுபவை…


அரங்கனின் அர்ச்சையின் முன்னே நிற்பதால் காயம் குளிரும்…எதையும் ஆற்றுப்படுத்துதல் சாத்தியப்படும்…அர்ச்சையும் அருட்பார்வை ஒளியை தடையின்றி பாய்ச்சிக்கொண்டே இருக்கும்…


சட் டென கோவில் வீதியில் மனித மரணமொன்று நிகழ்ந்துவிடுகிறது…கோவில் கதவடைத்தல் கட்டாயமென நம்பப்படும் காலச் சூழல்…பக்தன் அரங்கன் முன் நிற்கிறான்…கண்டிப்பாக இன்று அர்ச்சை வடிவ காட்சி கிடைக்காதென்பதை அறிந்தே இருக்கிறான்…சடலம் கிடக்கையில் அரங்கனின் பார்வைப் படலம் சிதைந்து போகுமென்பது சொல்லப்பட்டதா இல்லை உணரப்பட்டதாவென அறியாத பேதை பக்தன் அவன்…


பட்டர் வருகிறார்…விடுவிடுவென கதவுகளின் தாழ்கள் அகற்றப்படுகின்றன…விளக்கேற்றுகிறார்…திரையகல…பக்தனை அர்ச்சையின் அருட்பார்வை கதிர் ஒன்று நேர்க்கோட்டில் சந்திக்கிறது…பக்தனும் அர்ச்சையும் குளிர மெல்லிய தென்றல் நாட்டியம் நிகழ்த்துகிறது…பட்டரிடம் சடலம் கிடப்பது சொல்லப்படுகிறது….


பட்டர் கோபமுறுகிறார்…உடனே நடை சாத்தப்படுகிறது…எவரும் செய்தி தரவில்லையெனும் கோபம்…அறியாமையின் முள் ஒன்று குத்தியதால் கொப்பளித்த குருதியின் உக்கிரம்…வார்த்தைகளில் வெளிவருகிறது…


பெருமாளோட தேவையில்லாமல் வெளையாடறாங்க… எனச் சொல்லியபடியே…வெளியேறுகிறார்…பக்தன் திருவரங்க திவ்ய மோனமித மயக்கின் அதிசய காட்சியை நம்பவியலாமல் திகைத்துப் போகிறான்…


ஓயாது கொட்டும் பெருமழை…நதியின் மறுபக்கம் விட்டலனின் கோவில்…ஆர்ப்பரித்து ஆங்காரமாய் ஓடிக் கொண்டிருக்கிறது அகண்ட பெருநதி..கடத்தற்கரிய அந்த நதியின் மேல் அன்றே ஆமை வடிவ பாலம் காட்டி சாந்தோபா பக்தனையும் விட்டல பக்த கூட்டத்தையும் தரிசனத்திற்கு அழைத்து காட்சி தந்த பாண்டு ரங்கன் புன்னகைக்கிறான்…


ஞானசம்பந்தக் குழந்தையின் பாடலுக்கு வேதாரண்யக் கோவில் கதவுகள் திறந்ததை வானில் காட்டித் தருகிறான்… திகைப்படங்கா பக்தன் வானையே பார்த்துக் கொண்டிருக்க…அரங்கன் ஆதிசேடன் மேல் சயனித்த காட்சி மேகமொன்றை கட்டமைக்கிறான்…பக்தன் ஓடோடிச் சென்று கைபேசியை எடுத்துவர… அதற்குள் பாதி தரிசனத்தை கலைத்துவிடுகிறான்…பாத தரிசனம் தந்தவன் பாதியாவது படம்பிடிக்க விட்டு வைத்த திவ்ய மயக்குகள் மோகனச் சுவை மிகுந்த காட்சியடுக்குகள்…தெய்வீக நிஜத்தின் இருத்தலிய நிஜங்கள்…


பெண்ணுலாம் சடையனும் பிரம்மனும் உன்னைக் காண்பான்…

எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தோர் வெள்கி நிற்ப

விண்ணுளார் வியப்ப வந்து…. 


அரிதினும் அரிய காட்சி தருபவனை


கதவடைத்தலால்…அதற்கான அதிகார கிடைத்தலால்…மறைத்துவிட நினைப்பவர்கள் தலைதாழ்ந்தே தீரவேண்டுமென்பதை உணர்த்துகிறான்…


மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின் மேல்

ஆணிப் பொன்னால் செய்த ஆய்பொன் உடை மணி

பேணிப் பவளவாய் முத்து இலங்க பண்டு

காணி கொண்ட கைகளால் சப்பாணி

கருங்குழல் குட்டனே சப்பாணி…

[பெரியாழ்வார்]


மதிப்பிடவியலா சொக்கத்தங்கத்தால் செய்த கோவையையும் சதங்கையையும் ஒலிக்கச் செய்து மானுட அறியாமையை எண்ணி நகைத்தபடி நிற்கும் மாபலியின் தலையில் கால்வைத்த அரங்கனின் கைத்தட்டல் எனும் சப்பாணிச் சப்தம் கேட்டு மெய் மறந்து போகிறார் பெரியாழ்வார்…பக்தனோ அரங்கனின் மோகனமித திவ்ய மயக்கத்தில் கட்டுண்டு கிடக்கிறான்…சப்பாணிச் சப்தத்தின் நீட்சியின் சங்க நாதம் இதோ இப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பதை நீங்களும் செவிமடுத்தல் இயலும்…


திருவரங்கன் திருவடிகளே சரணம்…

ஆச்சார்யன் திருவடிகளே சரணம்…


ராகவபிரியன்

Saturday, August 24, 2024

 பார்வை எனும் சிட்டொன்றை

கூண்டிலிருந்து விடுவிக்கிறேன்...


சுற்றியிருக்கும் எல்லாவற்றின் மேலும்

அமர்ந்து மூக்கு சொறிந்துவிட்டு

பறந்துவிடுகிறதது...


இரு மாணவர்கள் அடித்துக் கொள்கிறார்கள்...

அச் சண்டையில் அமர்ந்து சிறகடிக்கிறது...

ஒருவன் கொல்லப்படுகிறான்...

அப்பிஞ்சு சவத்தின் மீதும் கூசாமல் அலகு தேய்கிறது...


கஞ்சாப் புகையினூடே பறக்கையில்

அதன் சிறகுகள் போதை மீறுகின்றன...


சற்றே காற்றில் தடுமாற்ற நடனமிட்டு

டாஸ்மாக் கடையின் பெயர்பலகையில்

எச்சமிடுகிறது...


ஏழைக் கும்பலொன்று தீச்சட்டியும்

காவடியுமாய் ஊர்ந்து செல்ல

தேக்கப்பட்ட வாகன ஓட்டியின் தலையருகில்

தாழப்பறக்கிறது...


பணக்காரர்கள் அலகுகுத்திக்கொள்வதில்லையெனும்

நிஜத்தின் வான் நோக்கி

 தன் பறத்தலை செருகியபடி யோசிக்கிறது...


கும்பாபிஷேகங்களில் கருடனைத் தேடுபவர்களை

சிட்டுக்கள் பொருட்படுத்துவதில்லை...


திருவிழாவில் தொலைந்த குழந்தையைத் தேடும்

தாயென அங்குமிங்கும் அலையும் சிட்டு


கைபேசி கோபுரக் கதிர்களால்

பறத்தல் தொலைத்து

மரணித்துக் கிடக்கிறது....


உறைந்த கைபேசி பெட்டிகளுக்குள்தான்....


சின்னச் சின்ன சிட்டுப் பார்வைகள் 

புதைவதற்கோ புதைப்பதற்கோ அல்ல...


ராகவபிரியன்

Wednesday, August 21, 2024

 யக் ஞோபவீதம் பரமம் பவித்ரம்…

சிறுகதை
இரு சக்கரவாகனத்தை நிறுத்த இடமில்லை…காவிரியின் துறைக்கான நுழைவு மண்டபமெங்கும் குப்பைக் கூளங்களின் குவிப்பும் அது தந்த ஒருவித துர் நாற்றமும் நுழைவையும் நுகர்வையும் தடுக்கும்…உடலெல்லாம் வியர்வையுடன் விபூதிப் பட்டைகள் உடம்புடன் பலர் ஆங்காங்கே அமர்ந்திருக்கிறார்கள்..அவர்கள் முன்னால் சிறு சிறு கூட்டம் அமைதியாய் நேர்த்தியாய் சந்திரனைச் சுற்றிய நட்சத்திரங்களைப் போல வெற்றுடம்புடன் ஒளிர்வுகளை உதிர்க்கும்… ஒரு நொடி கண்கள் இமையை மூடித் திறக்கும்…
இங்க வாங்கோ என ஒரு வாத்யார் வாஞ்சையுடன் அழைக்கிறார்…அவர் முன் இருப்பவர்கள் சட்டையைச் சுழற்றி அருகில் வைத்திருக்கிறார்கள்…கூடையோ மஞ்சள் பையோ தேங்காய் வாழைப்பழம் வெற்றிலைப் பாக்குடன் மடங்கி காலோரம் பதுங்கிக் கிடக்கும்…எதிரே தாம்பாளம் பித்தளை எவர்சில்வர் ஏன் பாக்குமட்டைத் தாம்பாளம் கூட ஆனால் கோள்களைப் போன்ற வட்ட வடிவில் தான் கிடத்தப்பட்டிருக்கும்…அதன் மேல் பஞ்சபாத்திர உத்தரணி பித்தளை வெண்கலம் நன்றாக பளிச் சென்றும் பாசிபிடித்தும் விதவிதமான வண்ணங்களில் இளித்து நிற்கும்…ஒரு சிலர் முன்னால் வெள்ளி பஞ்சபாத்திர உத்தரணி பளிச் சென ஒளிர…அவர்கள் தான் வாத்யாரின் முன் வரிசையில் காதில் எந்நேரமும் கைபேசியை அணிந்தபடி மந்திர உச்சாடணம் செய்து கொண்டிருப்பார்கள்…
இதையெல்லாம் கவனித்தபின் வண்டியை நிறுத்தி வைக்காமல் வேறு துறைக்குச் செல்லலாமா எனும் யோசனை வரும்…யோசனைகள் எண்ணங்கள் மேக வடிவமுடன் சட் சட் சட் என கொதிக்கும் இதய வெளியில் தூறிவிட்டு ஓய்ந்து விடும்….பின் உஷ்ணம் உடலெங்கும் பரவி வண்டியை கிளப்பச் சொல்லும்…
சிறுவயதில் கிராம காவிரிக் கரைக்கு அப்பாவுடன் போனது வண்டியின் உறுமலாய் கூடவே வரும்…பூணூல் திருமணத்தன்று அணிவிக்கப்பட்ட தங்கப் பூணூல் வெள்ளிப் பூணூல் விற்கப்பட்ட வறுமையின் நாட்கள் ஒலிப்பானிலிருந்து எதிர்பாராமல் சப்தமெழுப்பும்…சாலையின் கூட்டமும் நினைவின் தடுப்புகளும் ஒலிப்பானுக்கு தாமதமாகத்தான் வழிவிடுவது பிரமிப்பாய் இருக்கும்…பூணூல் போட்ட அடுத்த ஆவணி அவிட்டத்தில் சமிதாதானம் பிரம்மச்சாரிகள் மாத்திரம் செய்யவேண்டுமென்பது சொல்லப்பட்ட நினைவின் வண்டியொன்றை ஒரு சிறுவன் அதிவேகத்தில் இடது புறம் ஓட்டி தடுமாறச் செய்வான்…பிரம்மச்சாரி என்ற சொல்லாடல் முழுதுமாக விளங்காத எரி நட்சத்திரம் ஒன்று ஒளி உமிழ்ந்துவிட்டு மறைந்த பொழுது நினைவில் வரும்… அடுத்த துறையும் வந்துவிடும்…
அது கன்னட நிலத்தின் துங்கபத்ரா நதியின் துறை…நடு நடுவே பாறைகள் துருத்திக்கொண்டிருக்க….சில்லென்ற காற்று கைகுலுக்கி வரவேற்கும்…யாருமற்ற அந்நதியின் சாட்சியுடன் ஒரு சில தமிழ்பேசுவோர் ஒருவருக்கொருவர் பூணூல் அணிவித்த காட்சியுடன் நதி அவ்வளவு வேகத்தில் சென்று கொண்டிருக்கும்…இப்போது நதிக்கரைகளில் பூணூல் போட்டுக்கொள்ள வரும் ஆவணி அவிட்டக் கூட்டம் பூணூல் போலவே சுருங்கி சுருண்டு மறைந்து போவது வேதனை தரும்..
என்ன பஞ்சபாத்திரம் தாம்பாளமெல்லாம் இல்லையா பரவாயில்லை எனச் சொல்லி அமரச் சொல்லும் காட்சிகள் நவீன கலாச்சார தடுமாற்றத்தை கால்களில் தருவிக்கும்…மாத்யானிஹம் முடித்து குளித்து பட்டு வஸ்திர பஞ்சகச்சம் கட்டி “யக் ஞோபவீதம் பரமம் பவித்ரம்…” என்ற மந்திரத்துடன் பூணூல் அணிவித்துக் கொண்டு கர்வத்தை மான்தோல் பிசிறென முடிந்த நாட்கள் காவிரிப் படிகளில் கரையென ஒட்டிக் கொண்டிருக்கும்…இப்போது பூணூல் அணிந்து கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து கேலியாய் சிரித்து வைக்கும் காட்சியின் நெகிழிப் போத்தல் ஒன்றை மேல்படியிலிருந்து யாரோ காலால் தட்டிவிட உருண்டு உருண்டு தண்ணீரைத் தொடும்…அதன் மேல் ஒட்டியபடி பிரிக்காத பவித்திர விசர்ஜனங்கள் உச்சிவெயிலாய் காயத்தொடங்கும்…
ஒருவழியாய் பூணூல் அணிந்து கொண்டு வாசலில் வண்டியை நிறுத்த வேண்டும்…அபூர்வமாய் சுடிதாரிலிருந்து மடிசார் கட்டியபடி மனைவி வாசலுக்கு வந்து ஆரத்தி எடுத்து கோலத்தில் கொட்டும் போது கோடி தவில்கள் நாயணத்துடன் கலந்த அற்புத மங்கள இசை கேட்கும்…
அந்த இசையுடன் எப்படியாவது தங்கப் பூணூல் அடுத்த ஆவணி அவிட்டத்திற்குள் வாங்கி அணிந்து கொண்டுவிடவேண்டுமெனும் உறுதி மந்திரமாய் மனதிற்குள் எழுந்து பின் படுத்துக் கொள்ளும்…வாத்யார்…நாளைக்கு மறக்காம காயத்ரி நூத்தியெட்டாவது எல்லாரும் பண்ணனும் என்று சொல்லியதை காதில் வாங்கிய வண்டி இறுமாப்புடன் கிளம்பும்…
வீட்டின் வாசலில் கோலம் இருக்கும்…ஆரத்தித் தட்டும் சிவப்பு நீர் தளும்பளுடன் ஒளியுமிழிந்தபடி ததும்பிக்கொண்டிருக்கும்…வண்டி நின்ற ஓசையுடன் மனைவி வெளியில் வருவாள்…அவளின் அழுக்குச் சுடிதார் வண்டியை நிறுத்தவிடாமல் செய்யும்...
வண்டியுடன் சேர்த்தே ஆரத்தியும் ஆவணியும் மடிசார் எதிர்பார்ப்பும் அவனைச் சுற்றி சுற்றி வரத் தொடங்கும்…
உபவீதம் பின்னதந்தும் எனச் சொல்லி பழைய பூணூலுடன் நினைவுகளை காவிரிக் கரையில் விட்டுவிட வேண்டும்...அதற்குள் அடுத்த ஆவணி அவிட்டமும் வந்துவிடும்...
ராகவபிரியன்







Saturday, August 10, 2024

 பள்ளிச் சதங்கைகள்..

சிறு கதை…
எவராலும் அணுக முடியாத மலையுச்சியின் ஆபத்தான மறைவிடத்திற்கு சதாம் ஹுசைனும் யாமினியும் வந்தார்கள்…
இன்னமும் அமரவோ தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவோ இருவரும் தயாராக இல்லை…
“இப்ப என்னதான் ஒன்னோட கண்டிஷன்…சொல்லு…”எனக் காட்டமாகவே கேட்டான் சதாம்..
மலையேறியதில் மூச்சு வாங்கினாலும் அவனின் பேச்சில் வீச்சமெதுவுமில்லை…
“அதான் நாம சந்திச்ச மொத நாள்ளேர்ந்து இதோ இப்ப வரைக்கும் சொல்லிண்டிருக்கேனே…பள்ளி வாசல்ல என்னோட பரத நாட்டியத்தை அரங்கேற்றனும்…அரங்கேற்றம் முடிஞ்ச அடுத்த நொடி நீ என்னோட கழுத்துல தாலி கட்டிடலாம்…” யாமினி சதாமை விட வேகமாகவே மலையேறியிருந்தாலும் அவளுக்கு மூச்சு வாங்கவில்லை…ஆனால் பேச்சின் வீச்சு கொஞ்சமும் குறையவில்லை…
“தாலி கட்டற வழக்கமெல்லாம் எங்க மதத்துல கெடையாது…யாமி…புரிஞ்சுக்கோ…வேணும்னா மொதல்ல ஒங்க கோவிலுக்குப் போவோம்…அங்க ஒனக்கு தாலி கட்டறேன்…எங்க மத வழக்கப்படி கருகமணி மாலையில பிறை வச்ச டாலர் தான் தங்க கம்பியில கட்டி போட்ருப்பாங்க…எல்லா கல்யாணமான லேடீஸும் போட்ருப்பாங்களா தெரியாது…அது ஒரு பிரச்சனையில்ல யாமினி…பள்ளி வாசல்ல மட்டுமில்ல…ஒரு முஸ்லீம் தெருவுல கூட மேடை போட்டு பரத நாட்டியம் அரங்கேற்றம் பண்ண முடியாது…புரிஞ்சுக்கோ…
சொல்லிக்கொண்டே சதாம் பிய்த்தெறிந்த செடியொன்றின் இலைகள் காற்றால் தூக்கப்பட்டு மலையுச்சிவரை வேகமாக உயர்ந்து பின் ஆடி அசைந்தபடி மெல்ல பள்ளத்தாக்கு நோக்கி இறங்கிக் கொண்டிருந்தன…ஒவ்வொரு இலையும் யாமினியின் நிறைவேற்றவியலாத நிபந்தனையை சுமக்கவியலாமல் பள்ளத்தாக்கில் கொட்டிவிட்டு மறைந்து கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டேயிருந்தான்…
“நாம இந்தியாவுல அதுவும் தமிழ் நாட்டுலதானே இருக்கோம்…பாக்கிஸ்தான் பள்ளி வாசல்லயா பரத நாட்டியம் ஆடப்போறேன்…நீ என்ன பேசறேன்னே புரியலடா சதாம்…ஒன்னு செய்வோம்… ஒரு அஞ்சு நிமிஷம் டைம் குடு…பரத நாட்டிய அடவும் முத்திரையும் இங்க ஒன் முன்னாடி கடைசீயா பண்ணிட்டு இங்கேருந்து குதிச்சுடறேன்…அதுக்கப்பறம் நீ லவ் ஜிஹாத்ன்னு சொல்றாங்களே…அதுமாதிரி வேற ஒரு அய்யர் பொண்ணையோ இல்ல பாவப்பட்ட எந்த ஜென்மத்தையாவது கல்யாணம் பண்ணிண்டு முஸ்லீமாவே இரு….என்னை இப்புடி ஏமாத்துவேன்னு தெரிஞ்சிருந்தா…ஒன்ன லவ் பண்ணியிருக்கவே மாட்டேனே…என ஓங்கிக் குரலெடுத்து அழுதபடியே தனது கைப்பையில் எடுத்து வந்திருந்த சலங்கைகளை கால்களில் கட்டத் தொடங்கினாள்…யாமினி…
கலாச்சாரங்களின் எல்லைகள் சிக்கலானவை…ஒரு கலாச்சார எல்லையின் முடிவில் இன்னொன்று தொடங்குவதில்லை… மாறாக இருவேறு கலாச்சாரங்களின் எல்லைகள் தண்டவாளங்களைப் போல சீரான இணைந்த இடைவெளியில் நீண்டு நில்லாமல் போய்க்கொண்டே இருக்கின்றன…ஒரு ஆச்சாரம் மிகுந்த பாராம்பரிய மிக்க ப்ராமண பரத நாட்டிய கலைக்குடும்பத்துப் பெண்ணின் ஒவ்வொரு அணுவிலும் பரத நாட்டியம் ஆடப்பட்டுக்கொண்டே இருக்கிறதென்பதை எப்படி சதாமிற்கு புரியவைப்பதென யாமினிக்கு புரியவில்லை…
ஏற்கனவே தங்கள் குடும்பத்திலும் ஜமாத்திலும் யாமினியைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் வாங்கியிருந்தான் சதாம் ஹுசைன்…அவள் பரத நாட்டிய அரங்கேற்றம் பள்ளி வாசலில் செய்த பின் தான் திருமணம் எனும் நிபந்தனையை மட்டும் நாசுக்காக மறைத்துவிட்டிருந்தான்…
ஒரு நாள் அவனது ஆப்த நண்பன் ஒருவன்…”அப்படிப்பட்ட பொண்ணு வேண்டாம்டா…பெரிய சிக்கலாயிடும்…வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்க…நான் வேணா வாப்பாவண்ட பேசட்டுமா…” எனச் சொன்ன நிமிடங்களில் யாமினியின் காட்டாற்று வெள்ளமென சீறிப் பாயும் அழகு அவனை எந்தச் சிந்தனைப்பாறையையும் பற்றிக்கொள்ள முடியாமல் அதிவேகத்தில் இழுத்துக் கொண்டு போவதை உணர்ந்திருக்கிறான்…
ஒரு நாள்…சதாமிற்கு துணிச்சல் வந்துவிட்டது….யாமினியின் அழகு அவனுக்கு மட்டுமே சொந்தமாக வேண்டுமென்றால் பள்ளிவாசலில் அவள் பரத நாட்டியம் ஆட அனுமதி பெற்றே ஆக வேண்டுமென தீர்மானித்தான்…மெவ்லாவைச் சந்தித்தான்…அவனின் நிலைமையை எடுத்துச் சொன்னான்…அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மெவ்லா…
“ தம்பி சதாம்…ஸூரா அன் 162 ல நபிகள் நாயகம் சொல்றாரு…எவன் நமது இறைவனைச் சந்திக்க நல்லமல்கள் செய்யறானோ அவன் வேறு எவரையும் இணையாக்காது இருக்கட்டும்னு … புரியுதா…பெரிய கலவரமாயிடும்ப்பா…ஏற்கனவே என்ஐஏ வேற நம்ம ஆளுங்கள வேவு பாத்துக்கிட்டிருக்கறாங்க…நாம இப்ப நிம்மதியா இந்தியாவுல வாழறோம்னு சொல்ல முடியாது….பயந்துதான் வாழ்ந்துக்கிட்டிருக்கறோம்….நம்ம ஆளுங்களுலயே சில சாத்தான்கள்…இருக்காங்க…பாருங்க…அவங்களால தான் நாம பாபர் மசூதிய இழந்துட்டோம்…” சொல்லிக்கொண்டே சுற்று முற்றும் பார்க்கத் தொடங்கினார்…மெவ்லா…
சதாம் ஹூசைனுக்கு மெவ்லா சொல்லுவதெல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை…நிஜம்மாகவே நமது மசூதியை யாராவது இடிக்க வந்தால் அல்பீல் பறவைகள் வந்து காப்பாற்றும்னும் தான் நபி சொல்லியிருக்காரு….வரல்லையே…என நினைத்தவன் அதை மெவ்லாவிடம் சொல்லவில்லை…
“ என்ன பிரச்சனை வரப்போவுது மெவ்லா… ஏன் என்னென்னமோ சொல்லி என்னைய பயப்படுத்தறிக…ஒரு அஞ்சு நிமிஷம் பரத நாட்டியம் ஆடினா என்ன…குர்ஆன் ல ஆடக்கூடாதுன்னு சொல்லலேன்னு நெனைக்கேன்…” என இழுத்தபடி பேச… திடீரென எங்கிருந்தோ சிலர் சதாமை சுற்றிக் கொண்டு முறைக்கத் தொடங்கினார்கள்…
விருட்டென வெளியில் வந்து இருசக்கர வாகனத்தைக் கிளப்பி சிறிது தூரம் செல்வதற்குள்…அவன் வழி மறிக்கப்பட்டான்…” ஏண்டா…மார்கத்துரோகி என யாரோ கத்துவது தான் காதில் விழுந்தது…கண்விழித்துப் பார்த்தபோது ஆஸ்பத்திரியில் இருந்தான்…அவன் அருகில் அவனின் அம்மா ஹிஜாப்புக்குள் முகம் மறைத்து அழுது கொண்டிருந்தாள்…
“பள்ளிவாசலில் கலீகி நடனம் கூட அனுமதிக்கமாட்டார்கள் யாமினி…என ஒரு முறை அவளிடம் சொன்ன வார்த்தைகள் நினைவிற்கு வந்தன…அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டான்…
எல்லா மார்கங்களிலும் அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டால் கிடைக்கும் நம்பிக்கையை இறை நம்பிக்கைகூட தருவதில்லை என நினைத்தான்…
உடலெல்லாம் வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது…யாமினியை இவர்கள் ஒன்றும் செய்துவிடாதிருக்கவேண்டுமே என நினைத்தவன் அவளை எச்சரிக்கை செய்ய வேண்டுமெனவும் முடிவு செய்து கொண்டான்….இப்போது அம்மாவின் விரல்கள் இவனின் தலையைக் கோதிக்கொண்டிருந்தன…
மெல்ல எழுந்து அமர்ந்தவன்…”ஏம்மா பள்ளி வாசல்ல மியூசிக் இல்ல டான்ஸ் ப்ரொக்ராமெல்லாம் வைக்கறதில்ல…என அப்பாவியாய்க் கேட்டான்…”
அம்மாவின் விசும்பல்கள் நிற்கவே இல்லை....”மார்கத்துல ஹராம் செய்யப்பட்ட எதையும் செய்ய வேண்டாண்டா…வாப்பா ஒப்புத்துக்க மாட்டார்டா…”என உடைந்த வார்த்தைகளில் சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டாள்…
“ஷேக் சின்னமெளலானா ஜாஹீர் ஹுசைன் போன்றவர்கள் பள்ளி வாசல்களில் வாசிச்சதே இல்லையா…” என சன்னமான குரலில் கேட்டான்…
அம்மா எழுந்து ஜன்னலோரம் சென்று நின்றுவிட்டாள்…
உடல் நிலை தேறி யாமினியை மீண்டும் சந்தித்த நாள் அன்றுதான் நடந்தவைகளைச் சொல்லி அவளை ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமெனச் சொல்லியவன்…சில நாட்களுக்குப் பின் இதோ இப்போது தான் இந்த ரகசிய மலையுச்சி வாடிக்கை சந்திப்பிடத்திற்கு வந்திருக்கிறான்…
தனது இரண்டு கால்களிலும் சதங்கைகளை கட்டி முடித்துவிட்டு தனது கைபேசியில் நட்டுவாங்க இசையை உசுப்பினாள்…யாமினி
தா தை என அபினயம் பிடிக்கத் தொடங்கியதும் சதாமிற்கு பைத்தியம் பிடிக்கத் தொடங்கியது…கண்டிப்பாக குதித்துவிடப்போகிறாள் என நினைத்தவன் சட்டென தரையில் படுத்து அவளின் கால்களை இறுகப் பற்றிக் கொண்டான்…
ஆனால்… சதங்கைகளின் உயிர்சப்தத்தை சதாம் ஹுசைனால் நிறுத்தவே இயலவில்லை…
ராகவபிரியன்








  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...