Tuesday, June 13, 2023

 பின் நவீன பிற்போக்கு சிறப்புச் சிறுகதைகள்…

3.நரம்பியல்
-----------------------
ராம்பாபு அவனின் அண்ணன் மற்றும் அண்ணன் மகன் மூவரும் மஹாத்மா காந்தி மெடிக்கல் காலேஜில் அண்ணன் மகனுக்கு எம்பிபிஎஸ் சீட் டிற்காக அதன் டீனை சந்திக்கக் காத்திருக்கிறார்கள்…அப்போதெல்லாம் நீட் தேர்வு கிடையாது…ப்ளஸ் டூ மார்க் மட்டும் தான்…இருந்தாலும் அண்ணன் மகனுக்கு போதிய கட் ஆப் இல்லை…அவர்கள் முற்படுத்தப்பட்ட ஜாதி என்பதால் ஒப்பன் காம்பெடிஷன் சீட் கண்டிப்பாக கிடைக்காது…மேனேஜ்மெண்ட கோட்டாவில் ஒரு சீட் கேட்டுப் பார்க்கத்தான் இப்போது காத்திருக்கிறார்கள்…
அருகிருந்த நரம்பிலை மரத்தின் சிகப்பு இலைகள் உதிர்ந்து ஒன்றிரண்டு அவர்கள் அமர்ந்திருக்கும் வராண்டாவில் மெல்ல காற்றில் ஊர்ந்து காலின் பின்பக்கம் சேர்ந்து கொண்டது…ராம்பாபு ஒரு இலையை எடுத்து அதன் சிவந்த நரம்புகளை மெல்ல பிய்க்கத் தொடங்கினான்…ஊரிலிருந்து காலையில் புறப்பட்டு இதோ இலை பிய்க்கும் இந்த நொடிவரை அண்ணன் மெளனமாகவே தலை குனிந்து அமர்ந்திருக்கிறான்…
அண்ணனின் மனைவி அதாவது அண்ணி நல்ல வேலையில் இருக்கிறார்கள்…கை நிறைய சம்பளம்…அண்ணன் குடும்பத்தின் மூத்தவன் என்பதால் தனது கடமைகளை நிறைவேற்ற வேலை பார்க்கும் பெண் தான் மனைவியாய் வரவேண்டுமென அண்ணியை மணம் செய்து கொண்டான்…அண்ணன் வேலைக்குப் போவதற்கு முன்பெல்லாம் பள்ளி வயதுகளில் ராம்பாபுவும் அண்ணனும் வீட்டில் சமைக்க அரிசி இல்லாத நாட்களில் ஒருகிலோ அரிசி கடனாக கேட்டு பாண்டி சண்முகம் எனும் மீசை வைத்த வட்டி மஸ்தான் வீட்டு வாசலில் நின்றிருக்கிறார்கள்…
எங்கடா வந்தீங்க…மஸ்தானின் குரல் பயமுறுத்தும்…
அரிசி வாங்கிட்டு வரச் சொன்னாங்க…ராம்பாபுவின் குரல் சன்னமாய் ஒலிக்கும்…ஏண்டா போக்கத்தவங்களா…ஒங்க ஒதவாக்கரை அப்பனை வரச் சொல்லுங்க…போனமாசம் பத்து கிலோ வாங்கித் தின்னுருக்கீங்க…இன்னும் பணம் வரல…போங்கடா போய் பணம் வாங்கிட்டு வாங்க…என எத்தனையோ நாட்கள் விரட்டபட்ட ஆறாக் காயத்தால் ஒரு ரூபாய்கூட அண்ணன் அனாவசியமாய் செலவு செய்ய மாட்டான்…
ராம்பாபுவும் வேலைக்குப் போக தொடங்கியதிலிருந்து அண்ணியின் சம்பளத்தின் பெரும்பகுதியும் அண்ணனின் சேமிப்பில் சேர்ந்து வளரத் தொடங்கியது…ராம்பாபுவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த போது அண்ணன் வேலை பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள் எனச் சொல்ல…
வேண்டாண்டா…குடும்பத்தையும் கொழந்தைகளையும் பார்க்கறதே கஷ்டம்…இதுல வேலைக்கும் போய்ட்டு வந்தா…அந்தப் பெண்பாவம் நம்மள சும்மா விடாதுடா…தோ அண்ணிய பாரு…காலையில அஞ்சு மணி வாக்குல எழுந்து துணி துவைச்சு சமைச்சு அவசர அவசரமா சாப்டாம கூட ஆபீஸ் போய் …அங்க மாடா ஒழைச்சு…சாயங்காலம் வந்தா அப்புடியே அக்கடா ன்னு ஒன்னையும் என்னையும் மாதிரி ஒக்கார முடியுதா…காப்பி ராத்திரி சாப்பாடு எல்லாம் முடிஞ்சு அடுப்ப தொடைச்சுட்டு படுக்கும் போது எத்தனையோ நாள் நான் பார்த்திருக்கேன்…மணி பதினொன்னாயிருக்கு…ஒன்னோட பையனுக்கு வேற டெய்லி பாடம் சொல்லிவேற தராங்க…பாவம்டா அவங்க…நீ பண்ணுன தப்ப நான் பண்ணமாட்டேன்…
ராம்பாபு சொல்லி முடிக்கும் முன்பே தொடங்கிய விவாத சப்தம் மெல்ல பெரிதாகி அடிதடி அளவில் போய் நின்றது…ஏறக்குறைய ஒரு நாள் விட்டு ஒரு நாள் இது போல் விவாத அரங்குகள் களைகட்ட ராம்பாபுவிற்கும் அண்ணனுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே சென்றது…
ராம்பாபு வேலைக்குப் போய் சம்பாதிக்காத பெண்ணை திருமணம் செய்தவுடன் அண்ணனின் முகம் இந்த சிகப்பு இலைபோல நிரந்தர கோபத்தில் காட்சியளிக்கத் தொடங்கியது…
ராம்பாபு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது…ராம்பாபுவின் குழந்தைகள் ஏறக்குறைய அனாதையாக வளரத் தொடங்க ஏழ்மையில் விழுந்த ராம்பாபுவை தனது தம்பியாகவே அண்ணனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை…ஒரு முறை ராம்பாபு அவனது மகளை பொறியியல் படிப்பில் சேர்க்க போதிய பணம் இல்லாத போது அண்ணனிடம் வருகிறான்…
எவ்ளோடா பீஸ்…அண்ணன் அலட்சியமாய் கேட்கிறான்…
அம்பதாயிரத்துச் சொச்சம்னு சொல்றாங்க…ராம்பாபுவின் குரல் கொஞ்சம் நடுங்குகிறது…
ஒங்கிட்ட எவ்ளோ இருக்கு….
பத்து ரூபா வரைக்கும் ஏற்பாடு பண்ணலாம்டா…
ஏண்டா …பர்ஸ்ட் கிராஜுவேட்னு சொன்னா கவர்ன்மெண்ட் இருவதஞ்சாயிரம் தர்றாங்களாமே…அத க்ளெய்ம் பண்ணு…அப்பறம் இருபதாயிரம் எஜுகேஷன் லோன் போடு…என்ன….
என்னடா பேசற நீ…நீயும் நானும் ஏற்கனவே க்ராஜூவேட்ஸ்…அப்பறம் எப்படி அவள பர்ஸ்ட் க்ராஜூவேட்னு சொல்லி சேர்க்கறது…நாளைக்கு மாட்டிக் கிட்டோம்னா…ராம்பாபுவின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் விருட்டென்று எழுந்து சென்றுவிட்டான் அண்ணன்…
மரியாதைக்கு உள்ளே வா என்றோ காப்பி சாப்பிடுகிறாயா என்று கூட அங்கிருந்த அவனின் சொந்தங்கள் கேட்காதது பெருத்த அவமானமாக இருந்தது…
நேற்று திடீரென வீட்டிற்கு வந்தவன் எப்படியாவது அவனின் மகனை எம்பிபிஎஸ் சேர்த்தாக வேண்டும் என்று சொல்ல…ராம்பாபு அவனுடன் கல்லூரியில் படித்து தற்போது மஹாத்மா காந்தி மெடிக்கல் காலேஜ் பிடி வாத்தியாராய் இருக்கும் நண்பனை பிடித்து டீனுடன் பேசி இதோ இப்போது கல்லூரி வராண்டா வரை வந்திருக்கிறார்கள்…இது வரை மூவருமே தூங்கவில்லை…
சட் டென கதவு திறந்து ப்யூன் உள்ளே போங்கள் என்று சொல்கிறார்…உள்ளே டீன் கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார்…
பிடி சாரோடா ப்ரெண்டா நீங்க…என பேச்சைத் தொடங்க…
சார் இவன் என்னோட தம்பி…பிடி சாரோட ப்ரெண்ட்…இது என்னோட பையன்…இவன எம்பிபிஎஸ் படிக்க வைச்சு டாக்டராக்கனும்கறது தான் எங்களோட லட்சியம்… அண்ணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…
பையனின் மார்க் ஷீட்டை பார்த்தவர் பைலை அப்படியே மூடி டேபிளில் வைத்தார்…
சார் கோவிச்சுக்காதீங்க…மேனேஜ்மெண்ட் சீட் ரெண்டு தான் மிச்சமிருக்கு… நேரடியாவே சொல்லிடறேனே…பிடி சார் கூட சொல்லிருப்பார்னு நெனைக்கிறேன்…ரெண்டு கோடி குடுத்துடுங்க…ஒன்னு இப்போ அட்வான்ஸ்…மீதிய அடுத்த நாலுவருஷம் பீஸ் கட்டும் போது இருவதஞ்சு இருவதஞ்சா குடுத்துடுங்க…ஓக்கேன்னா…ஆபீஸ்ல போய் காலேஜ் அட்மிஷன் பார்ம் வாங்கி பில் அப் பண்ணி கொண்டாங்க… என்று சொல்லிவிட்டு பதிலெதுவும் சொல்லாமல்…எழுந்து சென்றுவிட…
மூவரும் வெளியில் வந்தார்கள்…
பிய்த்துப் போட்ட நரம்பிலை பெஞ்சினடியில் சில முடிக் கற்றைகளைச் சுற்றிக் கொண்டு காற்றில் அவதையுடன் அலைந்து கொண்டிருந்தது…
அண்ணனால் இரண்டு கோடி கொடுக்க முடியும்…
பையனைப் பார்த்தான்…
சித்தப்பா…எம்பிபிஎஸ்ல்லாம் வேண்டாம் சித்தப்பா…நான் டிகிரியே படிக்கறேன்…என்று பரிதாபமாய் சொன்னதும்…அண்ணனுக்கு கடும் கோபம் வந்திருக்க வேண்டும்…
கீழே கிடந்த நரம்பிலைச் சருகை எடுத்து பிய்க்கத் தொடங்கினான்…
என்னடா ஆபீஸ் போய் அட்மிஷன் பார்ம் வாங்குவோமா…
என ராம்பாபு கேட்க…
இல்லடா இவன இனிமே நான் எந்த காலேஜ்லயும் சேர்க்கறதா இல்ல…ஒரு படி அரிசிக்காக மானத்த வித்து நான் பாண்டி சண்முகத்துக்கிட்ட கத்துக்கிட்ட பாடம்…எதை வேணாலும் யார வேணாலும் இழக்கலாம்...ஆனா...பணத்தை மட்டும் இழந்துடக் கூடாதுங்கறதுதான்…ரெண்டு கோடி என்ன சும்மா வருதுன்னு நெனைச்சானா…என அண்ணன் சொல்லிவிட்டு மீண்டும் மெளனமானான்…
மூவரும் கேண்டீனுக்கு வந்தார்கள்…
டீ சாப்டுவோமா…ராம்பாபு கேட்க…
அதுக்குத்தானே வந்துருக்கோம்…போய் மூனு டோக்கன் வாங்கிட்டு வா…என்ற அண்ணனிடம் தன்னிடம் டீ வாங்கக்கூட பணம் இல்லை என்பதை எப்படிச் சொல்வதென தெரியாமல் தயங்கினான் ராம்பாபு…
கேண்டீன் சுவற்றில்…
பகைவனுக்கருள்வாய் தின்ன வரும் புலி தன்னையும் சிந்தையில் போற்றிடுவாய்…பாரதியார்…
என்று எழுதியிருந்ததைப் படித்தபடி நின்றிருந்த அந்த நேரத்தில் நரம்பிலை ஒன்று காற்றில் ஆடி ஆடி ராம்பாபுவின் மேல் விழுந்தது…
ராகவபிரியன்
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...