Wednesday, May 1, 2019

ஒரு நகர்வின் அதிர்வுகளை கவிதையாய் அதுவும் அழிக்கமுடியாத கவிதையாய் யாராவது புனைந்திருக்கிறார்களா என்ற சிந்தனை ஒரு சில நாட்களாய் என் மனதில் நகரமறுக்கிறது...இந்தச் செய்தி ஒரு பகடிக்கான காரணியாய் கூட உங்களுக்குத் தோன்றலாம்..நகர்தலில் நேர் நகர்தல் பக்க வாட்டுகளில் பின் பக்கம் மேல் கீழ் நகர்தல்கள் உண்டென்பது நிஜம்..பூமியின் நகர்தலை முரணெனக் காட்டும் நிஜ நகர்வுகள்...இவைகள் நகை முரண் அல்ல..நகர் முரண்..ஒரு சில சொற் சட்டகங்களுக்குள் வலிந்து ஆச்சர்யமூட்டவேண்டிய வாசிப்பனுவத்தைத் திணித்து எழுதப்பட்ட கவிதைகள் வாசகனை நோக்கி நகரமுடியாமல் தவிப்பதைக் காணலாம்...ஒரு நகர்விற்கு விசை மட்டுமல்ல கனமும் கணமும் கூட காரணங்கள் என்பதை ஒரு மானுஷ்ய அமானுஷ்ய கவிஞனால் உணர்த்தமுடியும்..அப்படியான ஒரு கவிஞன் தான் ஜான் ரைலி...
ஆங்கில பின் நவீனத்தின் ஆகச்சிறந்த படைப்புகளை.. தேர்ந்தெடுத்துத் தரப்பட்டவைகளைத்தான்... படித்துக்கொண்டிருந்தேன்..காலையிலிருந்து ஒரு கோப்பை இரண்டாவது காப்பிக்குக்கூட என்னால் நகர முடியவில்லையென்பதை கூர்ந்து நோக்கினால் உங்களுக்குள் விரியும் ஒரு கலிடியாஸ்கோப்...மிகையல்ல...நிஜம்...என் ஆழ்ந்த வாசிப்பின் கணங்களை சட் டென்று நிறுத்தியது ஒரு கவிதை..
அதை எழுதியவர் யார் என்று பார்வைகளில் படிந்திருந்த ஒட்டடைகளை நீக்கிவிட்டுப் பார்த்தேன்..எதிரே தங்க நாற்கரச் சாலையில்லை..கோபுரங்கள் தெரியவில்லை...நதியோ கடலோ கண்ணெதிரே இல்லை...காவிரியின் கரைகள் மேல் காய்ந்து கிடக்கும் மலங்கள் தெரியவில்லை...அவ்வளவு ஏன்...மே 23 வரை எதுவுமே நகராமல் பார்த்துக்கொள்ளுபவர்களைப் பற்றிய கோபம் கூட இல்லை...
அந்தக் கவிதையை எழுதியவர் தான்..ஜான் ரெய்லி...உடனே நகர்ந்து இணையம் தொட்டேன்..எத்தனை ஜான் ரெய்லிகள்..ஒரு ராணுவ வீரர்...அமெரிக்க ஏகாதிபத்தியத்தையே கலங்கடித்திருக்கிறார்...தன் முகத்தின் காயங்களை மறைக்க முடிவளர்த்திருக்கிறார்...ஒரு ஜான் ரெய்லி என்ற ஓவியர்..என் பார்வையின் பக்கவாட்டு மேல் கீழ் நகர்வுகள் சோர்வடையும் போதில் தான் நாற்பத்தோரு வயதேயான நம் ஆதர்ச கவிஞனை...ஜான் ரெய்லியை இணையத்தில் கண்டடைய முடிந்தது...பறவைக்கூட்டமொன்று கூடடைவதற்கான பொழுதுகளை நோக்கி நகரத்தொடங்குகையில்..இக் கணத்தின் அதிர்வில்... அந்தக் கவிதையை உங்களுக்கு என்னளவில் தமிழில் தருகிறேன்..இது மொழியாக்கமோ மொழிமாற்றமோ இல்லை...
சூரியனும் சந்திரனும்
நகர்ந்து வருவதாகச் சொல்லும்
சோதிடனால்
நம் இயலாமைகளை
நகர்த்த முடியாது..
கண்ணை மூடிப்பார்...
உன் வீடு
அடமானம் நோக்கி
நகர்வதையுணர்வாய்..
உன் தோட்டத்தின்
மலர்கள்
சந்தையை நோக்கி
நகரமுடியாமல்
தவிப்பதையுணர்வாய்..
உன் இதயத் துடிப்பு
நகராமல்
அதேயிடத்தில் இருப்பதால்
உன் பூமி
காலடியிலிருந்து
நகர்ந்துகொண்டேயிருக்கிறது..
இப்போது சொல்
சூரியனும் சந்திரனும்
நகர்கிறதா...
இல்லை இயலாமையை நகர்த்த
நீ நகரவேண்டுமா...?
உன் சோதிடன்
தன் அலுவலகத்தை
நகர்த்திப்போய்
நாட்களாகிவிட்டன...
நகரு...இடத்தைக் காலிசெய்..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  கால யதார்த்தம்...தத்துவ சிறுகதை ----------------------------------------------- பஞ்சப்பராரியாய் கோவில் வளாகங்களில் சுற்றித்திரிந்தவரை இன்ற...