Thursday, May 25, 2023

 கஸ்தூரி ரெங்கன் வீசும் கல்யாண வ்யஜ்னம்...1

அதிகாரம் நோக்கிய நகர்வில் காலில் தட்டுப்படும் எதையும் உதைக்க அல்லது அப்புறப்படுத்த எவரும் தவறுவதில்லை...அறம் உட்பட...தர்மம் நியாயங்கள், நீதி, நேர்மை என அனைத்தையும் அப்புறப்படுத்திவிட்டுத்தான் அதிகாரத்தை அனுபவிக்க முடிகிறது...
அதிகாரத்தை அடைந்தவன் தனக்கான உலகம் ஒன்றை உருவாக்கிக் கொள்கிறான்...அவனின் ஆழ்மனம் அதிகாரத் துய்ப்பினால் கிடைத்தை அல்லது கிடைக்கப்போகும் இன்பத்தை நோக்கியே அவனை நகர்த்துகிறது...அவ்வாறான நகர்வில் அவன் அதை தனது உள ஆற்றலாக நம்பத்தொடங்குகிறான்...இங்கே நம்பிக்கை என்பதும் நிஜம் என்பதும் வேறுபடுவதை அதிகார போதை ஆட்டத்தில் இருப்பவனால் உணர்ந்து கொள்ள இயலாமல் போகிறது...
குடும்ப அதிகாரத்தைக் கைப்பற்றும் இலக்கு நோக்கிய ஒருவனின் நகர்வு அவனின் ஆழ்மனதில் மூன்று எண்ணங்களை உருவாக்குகிறது...அவனின் தீய எண்ணங்களுடன் செயலும் இயைந்து போவதென்பது காலத்தின் மாபெரும் துயரம்...முதலாவதாக அவன் தான் மூத்தவன் என்பதால் அதிகாரம் அவனிடம் கொடுக்கப்படவேண்டுமென்பது கட்டாயமாகிறதென நம்புகிறான்...அப்படியான அவனின் எண்ணம் அவனுள் அகங்காரத்தை விதைக்கிறது...அகங்காரம் வளர்ந்து தன் கிளைகளாலும் இலைகளாலும் பார்வையை மறைத்துவிடும் என்பது வாழ்வியலில் நாம் காணும் அவலம்...மூன்றாவதாக அகங்காரம் தவறான செயல்களை கட்டுப்படுத்தும் ஆழ்மன கட்டளைகளை மீறச் செய்யும் இதய இயல்பை உருவாக்கும் கீழ்ப்படியாமையை தனது உரிமையென நம்பத் தொடங்கும்...
அதிகாரம் நோக்கி நகரும் மூத்தவன் முதலில் பெற்றோர்களிடம் மற்ற பிள்ளைகளுக்கு இருக்கும் உரிமையை கைப்பற்றுகிறான்... மற்ற உடன் பிறப்புகள் பெற்றோர்களிடமிருந்து பெறும் எதுவாயினும் அது தன் மூலமே அவர்களைச் சென்றடைய வேண்டுமெனும் குடும்ப அமைப்பியலை உருவாக்குகிறான்...அது அன்பாகவோ பாசமாகவோ இருந்தாலும் கூட...
இவ்வாறான சிறையமைப்பியலில் சிக்குண்டு செயலற்றுப் போகிறார்கள் பெற்றவ்ர்களும்...இன்ன பிறரும்...தகப்பன் தனது பெண்பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டிய கடமையை மூத்தவனிடம் விட்டுவிடுவதைத் தவிர வேறு வழியற்றுப் போவது தான் சுடும் கொடுமை... இங்கே திருமணம் செய்து வைக்கப்படப்போகும் உடன்பிறந்த பெண்பிள்ளைகள் அண்ணனால் திணிக்கப்பட்ட மீள வழியற்ற திருமண வாழ்வியல் அழுத்தங்களில் இருந்து விடுபட முடியாமல் வளைய வருவார்கள்.. அவர்களின் காலில் கட்டப்பட்ட கொலுசொலிகளில் இருந்து ஒருவித சோக நாதத்தின் தொடர் ஓசைகள் குடும்பக் காற்றில் கண்ணீரைக் கலந்து சுற்றிக் கொண்டே இருக்கும்...
மற்றவர்களின் சொந்த தனிப்பட்ட வாழ்வில் தனக்கு எந்தவித உரிமையும் இல்லையெனும் உண்மையை தூர வீசிவிட்டு உடன்பிறந்தவர்களின் எதிர்காலத்தை மூத்தவன் முடிவு செய்கிறான்... மூத்தவன் தனது சொந்த வாழ்வின் வாசலெங்கும் வண்ணக் கோலங்களை வரைந்து கொள்வான்...ஆனால் உடன் பிறப்புகளின் வாசல்களில் குப்பைகளை வலிந்து கொட்டுவது நியாயமென எண்ணத் தொடங்குவான்...அது தனது கடமையும் கூட எனும் நினைவில் அவன் அடையும் ஒருவித நிம்மதி தான் அதிகாரத்தின் கோர நகங்களை அவனின் இரும்புக் கரத்தின் விரல்களில் வளரச் செய்கிறது...
அவன் தான் தன் உடன் பிறந்தவர்களுக்கு திருமணம் எனும் ஒன்றின் மூலம் செய்யும் தீங்கை உணரமுடியாத உளத் தூக்கத்தில் ஆழ்ந்துவிடுகிறான்...தெரிந்து செய்யப்படும் செயல்கள் ஞானத்தின் விளைவாகக் கொள்ளப்படும்..அவர்களை சாங்க்ய யோகிகளாக கருதலாம்... அவ்வாறானவர்களின் அரிதான தூக்கம் ஞானயோகிகளின் தூக்கம்...தீய செயல்களை அதிகார அபகரிப்பினால் தான் செய்தே ஆக வேண்டும் என நினைப்பவனின் செயல் கர்மாவின் விளைவுகளாகக் காணப்படும்... அவர்கள் கர்மயோகிகளாகவும் தன்னை காட்டிக் கொள்வார்கள்...இவர்கள் முக்கியமான முடிவுகளில் வேண்டுமென்றே தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவார்கள்...இது போன்ற தூக்கம் கர்ம யோகிகளின் பொய் தூக்கமென அறியத் தரலாம்...இந்த கர்ம யோகி தனது தூக்கத்திலிருந்து விழித்துப் பார்க்கையில் ஒரு உடன்பிறப்பாவது திருமணத்தால் விளைந்த துக்கத்தில் இருந்தால் அவ்வளவு மகிழ்வை அடைவான்...
லோகேஸ்மிந்த் விவிதா நிஷ்டா ப்ரா ப்ரோக்தா மயா நக
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யா நாம் கர்ம யோகேந யோகி நாம்...
என்பது கஸ்தூரி ரெங்கனின் வார்த்தைகள்...திருமணம் என்பது ஒருவரின் மீது திணிக்கப்பட்டால் அரங்கன் திணித்தவனின் மேல் தனது வ்யஜ்னத்தால் விசிறுவான்...அவனின் வாழ்வில் அப்போது பலத்த சூறைக் காற்று வீசத் தொடங்குகிறது...
ராகவபிரியன்
தொடரும்...
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.



Ragavapriyan s books could be viewed by clicking the following address



 https://www.amazon.com/author/ragavapriyanthejeswi

Tuesday, May 23, 2023

 அறுபத்து நான்கு வயது கன்னிசாமியின் சபரி அனுபவம்…14

பகவதி அம்மன் ஆகச் சாதாரண கேரளத்தின் ஜரிகை வேய்ந்த வெள்ளைப் பட்டுப் புடவை உடுத்தியிருக்க வேண்டும்…அம்மனைச் சுற்றி அவ்வளவு பிரகாசம்…அதையும் மீறிய அம்மனின் முகத்தின் புன்னகை அ அ யை மெல்ல எழ வைத்தது…இப்போது அம்மன் சைகை செய்கிறாள்…அப்படியே இருக்கும் படி…அ அ பதில் சொல்ல உதடுகளை அசைக்க முயற்சிக்கிறான்…சுற்றி இருப்பவைகளை நகர்பனவற்றை கவனிக்க நினைத்து கண் விழியை சுழற்ற முயற்சிக்கிறான்…பார்வை அப்படியே அம்மன் மேல் அசையாமல் பதிந்து கிடக்கிறது…அம்மனின் புன்னகை மெல்ல உயர்ந்து சிரிப்பாக வெடித்து உச்சம் தொடுகிறது…அம்மன் அப்படிச் சிரிக்கிறாள்…மிகுந்த சிரமப்பட்டு உதடு குவித்து அம்மனிடம் பேச முயற்சிக்கிறான்…
குருசாமி அ அ யை அசைத்து எழுப்ப…திடுக்கென எழுந்து பேந்தப் பேந்த முழிக்க…ஏன் சாமி என்னவோ கத்தினீங்க…என்று அவர் கேட்டவுடன்…அ அ க்கு வெட்கமாகப் போயிற்று…இதை…ஆற்றுக்கால் பகவதி அம்மன் தரிசனம் தந்ததை… சொன்னால் இவர் நம்புவாரா…என சில நொடிகள் யோசித்தவன்…சொல்லிவிடுவோம்…என முடிவெடுத்தான்…
சாமி இந்தக் கோவிலோட பகவதி அம்மன் இப்ப கனவுல வந்தாங்க…பயந்து போயிட்டேன்…அதான் கத்தியிருக்கனும்…ரொம்ப சத்தமா கத்திட்டேனா..
சத்தமாதான் கத்துனீங்க…உங்க கத்தல் வார்த்தை ஒன்னும் புரியல…அப்படியே திரும்பி பாருங்க…எல்லாருமே எழுந்து உட்கார்ந்துட்டாங்க…சொல்லியபடியே ஒரு கொட்டாவி விட்டவர்…மீண்டும் படுத்துக் கொண்டார்…
அ அ யும் மீண்டும் துண்டில் சாய்ந்தான்…குருசாமி…இவன் பக்கம் திரும்பி…சாமி அம்மன் என்னோட கனவுலயும் வந்துச்சு…என்றாரே பார்க்கலாம்…
அ அ க்கு குருசாமி தன்னை கிண்டல் செய்கிறார் என நினைக்கத் தோன்றியது…பகவதி அம்மனின் தரிசனம் என்பது அ அ யின் தனிப்பட்ட தெய்வீகச் செல்வம்…அதை இறுதி மூச்சுவரை மனதளவில் பாதுகாத்திருக்க வேண்டும்…அதைவிடுத்து குருசாமியிடம் மட்டும் இல்லை…வேறு யாரிடம் சொல்லியிருந்தாலும் எவரும் நம்பப்போவதில்லை…மாறாக ஆன்மீக விளம்பரமாக அவனின் சுய தம்பட்டம் அமைந்து விட்டதில் மனதளவில் சோர்ந்து போனான்…அம்மா என்னை மன்னித்துவிடு என ஆழ்மனதில் வேண்டிக்கொண்டவனுக்குத் தூக்கம் வெகுதூரம் போய் விட்டிருந்தது…
கையில் பற்பசை பீய்ச்சிய டூத் ப்ரஷுடன் சோப் பாக்ஸும் எடுத்துக் கொண்டு கட்டன குளியலறை நோக்கி நடந்தான்… குருசாமியும் சட் டென எழுந்து இவனுடன் குளிப்பதற்காக வந்தார்…ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலை ஒட்டிய கட்டன குளியலறை மிகவும் அருமையாக சுத்தமாக…தண்ணீர் குளிர்ந்து கொட்டும் அருவியென ஷவர்களில் கொட்டிக் கொண்டிருந்தது…நிறைய சாமிகள் குளித்துக் கொண்டிருக்க…அ அ ஆனந்தமாய் ஒரு ஷவரின் கீழ் நின்று கொண்டான்…தூக்கமற்ற கண்கள் புத்துணர்வு பெற்றதை உணர்ந்தான்…
அ அயும் குருசாமியும் இப்போது கோவில் வாசலுக்கு வந்தார்கள்…கோவில் திறந்திருக்க கர்ப்பக் கிரஹம் மூடியிருந்தது…உள்ளூர் வாசிகள் ஒரு சிலரும் பக்தியை வெளிப்படுத்தும் தோற்றத்தில் வரிசையாய் நின்றிருந்தார்கள்…சற்று நேரத்தில் தலைமை தந்திரி உள்ளே வந்தார்…
அமைதியாக இருந்த அவ்விடத்தில் சட் டென முரசின் ஒலி ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது….கோவிலிசை முன் செல்ல கோவிலின் பணியாள் ஒருவர் கையில் விளக்குடன் முன் செல்ல…தந்திரி ஒவ்வொரு சந்நிதியையும் திறந்து நைவேத்யம் செய்து தீபம் காட்டுகிறார்…அனைவரும் இப்போது கர்பக் கிரஹ வாசலுக்கு வர….முரசை தொடர்ந்து முழக்குகிறார் முரசறைபவர்…தலைமைத் தந்திரி கர்பக் கிரஹத்தின் முன் விழுந்து வணங்குகிறார்…சில அபிநயங்கள் செய்கிறார்…ஆற்றுக் கால் பகவதி அம்மனிடம் கதவை திறப்பதற்கான அனுமதி கோருவதாக அ அ உணர்ந்தான்…
அம்மன் கோவிலின் கர்பக்கிரஹத்திற்கான நுழைவு வாயிலின் கதவுகள் அமைக்கப்பட்டிருக்கும் இரு பக்கமும் கங்கையும் யமுனையும் கைகூப்பி நின்று கொண்டிருப்பார்கள் என ஆகமம் சொல்வது நினைவிற்கு வந்தது…
எதையும் புனிதப் படுத்தும் சக்தி ஆறுகளுக்கு உண்டு…நதி புனிதமானது…கதவுகள் திறந்து வாசல் வழி கர்பக்கிரஹத்திற்குள் நுழைகையில் அதற்கான தகுதி பெற்றவர் இன்னொரு முறை தன்னைப் புனிதப்படுத்திக் கொள்கிறார்…இங்கே அகக் கண்களால் கங்கையையும் யமுனையையும் காணும் சக்தி பெற்றவர் சாதாரண பொய் மானுடத்திலிருந்து நிஜமான தெய்வீக சக்தி பெற்ற நிஜ மானுடராகிறார்…தெய்வத்தின் மேல் மட்டும் அகம் குவிந்திருந்தால் கதவின் பக்கம் பரிவாரங்களோடு அம்மனை வணங்கி நிற்கும் ஆறுகளைக் கண்களால் காண முடியும்..இதைத்தான் வள்ளுவர் அகத்தூய்மை வாய்மையால் காணப்படும் என்று சொல்லியிருக்க வேண்டும்…தெய்வம் உண்மை என அகத்தில் நம்பும் ஒருவர் தான் கர்பக் கிரஹத்திற்குள் நுழையும் சக்தியும் உரிமையும் பெற்றவராகிறார்…
தெய்வீக இருத்தலை கர்பக்கிரஹத்தில் அவரால் மட்டுமே அருகிருந்து காணமுடியும்…தலைமைத் தந்திரி அவர் கையால் கதவை மெல்ல திறக்கிறார்…மூல விக்ரஹத்தை திரை மூடியிருக்கிறது…இரண்டு பக்க கதவுகளிலும் மஞ்சள் தடவுகிறார்…முரசு ஒலித்துக் கொண்டே இருக்கிறது…நைவேத்யங்களுடன் இன்னொரு தந்திரி உள்வர…முரசொலி நின்று கொள்கிறது…தந்திரியின் கையிலிருக்கும் வெண்கல மணியோசை தெய்வீகத்தை கோவிலெங்கும் நிரப்புகிறது…சட் டென திரை விலக ஆற்றுக்கால் பகவதி அம்மனின் முன் அலங்கார வரிசையில் ஏற்றப்பட்ட தீபங்கள் வலமிருந்து இடமாக சுற்றப் படுகிறது…ஒரு நொடிதான் இரவில் அ அ கண்ட அம்மனின் முகப் புன்னகை மூல விக்ரஹத்திலும் தெரிய ஓங்கிக் குரலெடுத்து அம்மா என்று கத்துகிறான்…
அவனைச் சுற்றி நின்று கொண்டிருந்த உள்ளூர் பெண்கள் அம்மே அம்மே என அரற்றியபடி அ அ யை வித்தியாசமாகப் பார்த்தபடி கர்பக்கிரஹம் நோக்கி வரிசையில் செல்லத் தொடங்குகிறார்கள்…எல்லோருக்கும் வாழையிலைத் துண்டில் கொஞ்சம் சந்தணம் வைத்து தந்திரி தருகிறார்…அ அ யின் முறை வரை அம்மனை நன்றாகப் பார்க்கிறான்…ஓங்கிக் குரலெடுத்து அம்மன் அப்படிச் சிரிக்கிறாள்…மெய் மறந்தவன் கைகூப்பி நிற்க…அவனின் கூப்பிய கையை பிரித்து இழுத்து வாழையிலை சந்தணத்தை கையில் திணித்து…ம் அக்கணு போய்க்கோ…எனத் தள்ளப்பட கோவிலை சுற்றி வருகிறான்…குருசாமி ஒவ்வொரு சந்நிதியாக நின்று மெதுவாக வரும் வரை கோவில் வாசலில் நின்று சுயமி எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான் அ அ…ஆனால் கோவில் கொடிமரம் தாண்டி உள்ளிருக்கும் அம்மனின் முகம் நிழற்படத்தில் பிடிக்க முடியாதது அ அ க்கு தொழில் நுட்ப சவாலாகவோ அவனின் திறன் இன்மையாகவோ புரிந்து கொள்ள முடியவில்லை…அவனுள்…அம்மன் என்ன அவ்வளவு சுளுவாக படம்பிடிக்கப்பட முடிந்தவளா என்ன எனும் ஆச்சரிய எண்ணம் ஓடத்துவங்கியது…
இருவரும் வெளியில் வந்து தங்களின் வாகனங்கள் இருக்குமிடம் நோக்கி நடந்தார்கள்…அதற்குள் எல்லா சாமிகளும் குளித்து தயாராய் வாகனங்களில் அமர்ந்திருக்க…ஆர்கனைசர் கீழே ஓட்டுனர்களுடன் பேசிக்கொண்டே இவர்கள் இருவரையும் என்ன லேட் என்பது போல் பார்த்தார்…அ அ அவரிடம் சென்று சார் பத்மநாப சாமி கோவிலையும் பார்த்துட்டு வரலாமா எனக் கேட்க…அங்கதாங்க இப்ப போகப் போறோம்…என்றார்…
பத்மநாப சாமி கோவிலின் அருகில் வாகனங்களை நிறுத்துவது இப்போதெல்லாம் ஆகப்பெரிய சவாலாகிவிட்டது…சாமிகள் அனைவரையும் இறக்கிவிட்டுவிட்டு…பஸ் நிறுத்தமருகில் இருக்கும் வாகன நிறுத்ததிற்கு வந்துவிடுங்கள் எனச் சொல்லியபடியே ஓட்டுனர்கள் வாகனங்களை எடுத்துச் சென்றுவிட்டார்கள்…ஒரு சில சாமிகள் வாகனங்களை விட்டு இறங்கவில்லை…பத்மநாப அரங்கனைப் பார்க்கும் அரிய சந்தர்ப்பத்தைத் தவற விட மனம் வரவில்லை அ அ க்கு…குருசாமியுடன் ஓட்டமும் நடையுமாய் கோவிலை நோக்கி ஓடினார்கள்…அதற்குள் செல்போன் பாதுகாப்பிடத்தில் பக்தர்கள் தங்கள் செல்போன்களை ஒப்படைப்பதைப் பார்த்தவர்கள்…இவர்களின் செல்போன் களையும் ஒப்படைத்தார்கள்…வேகமாகச் செல்லுங்கள்…கதவடைக்கப்போகிறார்கள்..என்று செல்போன் பாதுகாவலர் சொல்ல அ அ யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் ஓடத் துவங்கினான்…குருசாமியும் அ அ யின் பின்னால் ஓடி வர கடுமையான சோதனைகளுக்குப் பிறகு கோவில் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்…
கோவிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்க அ அ யும் குருசாமியும் அதனுடன் சேர்ந்து கொண்டார்கள்…உள்ளே ஏதேதோ பூஜைகள் நடைபெறுவதான சப்தங்கள் கேட்டுக் கொண்டிருக்க அ அ அருகிருந்த பழமைவாய்ந்த அனந்த பத்மநாபனின் கோவில் தூணையும் அதிலிருந்த சிற்பத்தையும் பார்க்கத் தொடங்கினான்….எதோ ஒரு முனிவரின் சிற்பம் நுணுக்கமாய் செதுக்கப்பட்டிருக்க…அந்த முனிவரின் நீண்ட உடற்பாகத்தில் சந்தனப் பொட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தது அ அ க்கு பேராச்சர்யமாயும் பேரதிசயமாயும் இருந்தது…
வரிசை துளித்துளியாய் நகர நிறைய அய்யப்ப சாமிகள் பொறுமையிழந்து பத்மநாபரை தரிசிக்காமலேயே வெளியேறிக் கொண்டிருந்தார்கள்…அ அ மெளனமாய் அவனுக்குத் தெரிந்த திவ்ய பிரபந்தப் பாடல்களை மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தான்…கோவில் சிப்பந்திகள் இருவர் எங்கிருந்தோ முளைத்து வரிசையில் சரியாக நிற்கும் படி எல்லோரையும் எல்லா மொழிகளிலும் விரட்டத் தொடங்கினார்கள்…ஒரு சில கேரள போலீஸ் காவலர்களும் அவர்களுடன் வர…அங்கும் இங்குமாய் இருந்தவர்கள் வரிசையில் நின்று கொண்டார்கள்…மீண்டும் கோவிலோசையின் முரசமிடும் இசைக் கருவியை அடித்தபடி ஒருவர் முன் செல்ல…கையில் இருக்கும் கமண்டலத்திலிருந்து சொட்டுச் சொட்டாய் புனித நீர் தெளித்தபடி அடுத்த தந்திரி ஒருவர் தொடர…கையில் ராஜ அலங்காரத்தில் அனந்த பத்ம நாபனின் உற்சவ மூர்த்தியை சுமந்து சிலர் வர…ரெங்கா ரெங்கா என ஓங்கிக் குரலெடுத்து சப்தமிடத் தொடங்கினான் அ அ…
தொடரும்…

Thursday, May 18, 2023

 யானை வண்டி

--------------------

வாழ்வின் வண்டிப் பயணத்திற்கான

பாதைகள் தூர்ந்து கிடக்கின்றன...


வறுமையானையுடனான

என் நடையின் 

ஓசை நிறுத்தமொன்றில்

பிச்சைக் காரனொருவன்

உறங்கிக் கொண்டிருக்கிறான்...


குறுக்கிட்ட

வண்டிகளிலெல்லாம் கூட்டம் வழிய

விளிம்பில் தொங்கிய

மனிதக் காலின் உதைபட்டு

யானை உருண்டு கிடக்கிறது...


ஆதியின் குளிர்ந்த 

வளமைமிகு பனிமலையில்

எஸ்கிமோ

வண்டிகளை இழுத்த

பனி நாய்கள்

சுற்றி நின்று குரைக்க

என் யானை ஓடத்துவங்குகிறது...


கைவிடப்பட்ட

மாட்டு வண்டிகளின்

நுகத்தடியும்

சக்கரங்களும்

யானை வண்டிக்குப்

பொருந்திப் போவதில்லை...


ஏழு குதிரை பூட்டிய

சூரிய வண்டி

என் யானையைக் கண்டு

பண மலையின்

பின் பக்கம் ஒளியத் துவங்குகிறது...


 என் வறுமையானையுடனான

தேசிய நெடுஞ்சாலைப் பயணத்தில்

சாலையோர

உணவகங்கள் மூடிக் கிடக்கின்றன...


சாலையின்

மையத்தடுப்பில்

அபூர்வமாய் பூத்திருந்த

ஒற்றை ரோஜாவையும்

யாரோ பறித்துச் சென்றுவிட்டார்கள்...


வறுமை யானையைப் பூட்டி

காலத்தை வெல்லும் வேகத்தில்

என்னை ஏற்றிச் செல்லும்

வண்டியைச் செய்ய முடிந்த

தச்சனைத் தெரிந்தவர்கள்

முகவரி தாருங்கள்...


பயப்படாதீர்கள்

யானை ஒன்றும் செய்யாது...

ராகவபிரியன்

Monday, May 15, 2023

 யானைப் பார்வை

-----------------------
வறுமையானை
இன்னும் காண்பதற்கான
அரிய செல்வங்களுக்காக
அவ்வப்போது
இமை சுருக்கிக் கொள்ளும்...
தொலைக் காட்சிகளில்
காட்டப்படும்
சத்து உணவின்
பிரும்மாண்ட உருண்டைகளுக்கான
அதன் நிஜ தும்பிக்கைத் துழாவல்
வாழ்வு வானத்தில் சுற்றும்
ஒவ்வொரு கோள்களையும்
தொட்டுத் திரும்பும்....
தங்கச் சங்கிலியில்
தான் கட்டப்பட்டிருப்பதான
பிரமை போதையில்
நான்கு கால்களும்
தரையில் பாவாமல்
அப்படிக் குதித்துப் பார்க்கும்...
செழிப்புக் கரும்பைச்
சுமந்து செல்லும்
வாகனங்களை
மறிக்கும் போராட்டங்களுக்கான
அதன் மன ஒத்திகையின்
மத நீர் காய்ந்துவிட்டதாவென
தும்பிக்கைத் தூக்கி
ஒருமுறை
தடவிப் பார்க்கும்...
யானை கைவீசி
நீர் அடித்து
உருண்டும் புரண்டும்
குளிப்பதற்கான
ஆர்பரித்தோடும் நதியொன்றையும்
அது இது நாள் வரை
பார்த்ததேயில்லை...
அது கட்டிக் கிடக்கும்
கொட்டாரம் வரை
வந்து செல்லும்
பணச் சிங்கங்களின்
வளம் கொழிக்கும்
காடு காட்டுவதான
பொய்கள்
அதன் இமைகளில் விழுந்து
பார்வையை மறைப்பதுதான்
இந்த யுகத்தின்
மாபெரும் யானைச்சோக அவலம்...
வளமை தேடியலையும்
என் யானைக்கு
கிட்டப் பார்வைதான்...
அதன் பார்வை கிடக்கட்டும்..
வறுமை யானையைப் பார்ப்பது
மனிதனின்
பணக் கண்களுக்கு
எப்போதும்
அலுப்பதேயில்லை...
வாருங்கள்
பயப்படாமல் பாருங்கள்...
உங்களை நோக்கி நீளும்
அதன் கையில்
பணம் வைத்தால் ஆசீர்வதிக்கும்...
இல்லையேல்...
யானை ஒன்றும் செய்யாது...
ராகவபிரியன்
படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
புள்ளிவிவரங்களையும் விளம்பரங்களையும் காட்டு
விரும்புக
கருத்துத் தெரிவி
பகிர்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...