Thursday, July 26, 2018

Neo modernist Tamil poetry

வரலாறுகளை அழகாக கவிதைகளில் செதுக்கிச் சென்றவர்கள்..நம் முன்னோர்கள்...அலெக்சாண்டரின் படையெடுப்பால் பயந்த நம் அரசர்கள் சேமித்தச் செல்வங்களை பெட்டிகளில் அடைத்து ஆறுகளின் நடுவில் அறையமைத்து அதனுள் பாதுகாத்தவர்கள்...அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை அருமையான கலிப்பா வாய் அமைத்துவிட்டு அந்த ஓலைச் சுவடியை அரும்பெரும் செல்வமாய் விட்டுச் சென்ற பூட்டன்....அந்தப் பாடல் இத்தனையாண்டுகள் உயிர்த்திருக்குமென கனவு கூடக் கண்டிருக்கமாட்டான்...புதைக்கப்பட்ட செல்வங்கள் புகழ் அனைத்தும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்க...கவிதையொன்று காலம் கடந்து வாழ்ந்துகொண்டிருக்கிறது...இன்னும் வாழும்...
அது போன்ற நீண்ட மரபுடைய நம் கவிதை இப்போது பின் நவீன யுகம் நோக்கிய உலகளாவிய வீச்சை தமிழ் மண்ணில் பாய்ச்சத் தொடங்கிவிட்டது...அந்தப் பாய்ச்சலின் பாதிப்பால் ஒரு சின்ன பின் நவீன முயற்சி...
வாடுபு வருத்திடும்
பாலை நிலமென புகுந்தோம்..
பாலையின் நெடுந்தொலைவென
அரிதினும் அரிது நம் பிணைப்பு..
மணல் குன்றுகளில்
நம் நினைவுக் காற்று
மோதிச் செதுக்கிய சிற்பங்கள்
துணிக்கடை பொம்மைகளென
உணர்வின்றிச் சிரிக்கும்..
காற்றின் சிறகெங்கும்
மணல் கலந்த நம்மெளனம்
அலறும்..
ஒட்டகக் கூட்டத்தின்
குளம்படிகள்
மணற்கடலில் மிதக்கும்..
அதை நோக்கி நகர்த்தும்
சிற்பங்களை..
நம் நினைவின் ஈச்சமரத்தொலி..
மணற்பொம்மைகளை
ஒடிவையின்றி வண்ணம் தீட்ட..
பேரீட்சையின் கருப்பில்
இனிப்பைத் திணிப்போம்..
அப்பொழுதின் மணற்துகள்
நம் தலையெங்கும்
பாலையென அரிக்கும்..
எண்ணச் செல்வத்தின்
பெட்டிகளை சுமந்து நடக்கையில்
கருட பட்சியென
மேலே பறந்து வரும் நம் இதயம்..
விரல் நுனிகள்
கன்னம் தீண்ட..
மணற்காடெங்கும்
நம் யானைகள் கூடும்..
உன் ஆடூச் சென்னி
அப்படியொரு அழகெனச் சொல்லும்..
மேலணை மூடும் முன்
நம் கலப்பைகளை
நினைவின் எருதில் பிணைத்துக்கொண்டு
மணலெங்கும்
வயலாடப் புறப்படுவோம்..
ராகவபிரியன்

Tuesday, July 24, 2018

வெளிச்சம் மட்டுமே மிச்சம்

எனக்கு ஒரு கார் தயாராக வேண்டும்..
அதில் பூ வேலைப்பாடுகள் செய்திருக்க வேண்டும்..
செயற்கைப் பூக்கள் நிறம் மங்கிப்போகலாம்...
இயற்கைப்பூக்களை மெல்லிய உணர்வுகளால்
ஒரு மயிலிறகு கோர்த்த அரைவட்டமாய்
வண்ணமாய் அலங்கரித்திருக்க வேண்டும்...
எதிரே வாத்தியக் காரர்கள் இலக்கியம் வாசிக்கவேண்டும்..
அந்தச் சப்தத்தில் சர்ப்பங்கள்
பூக்களிலிருந்து வெளிவரவேண்டும்...
யாரோ ஒருவர் எனக்கு ஒரு மலர் கிரீடம் சூட்டுகிறார்...
பதட்டத்துடன் கழற்றினால் அது ஒரு கவிதை...
அருகிலிருந்த பூவேலைப்பாட்டுக் கைவினைஞர்
அதை வாங்கி அணிந்துகொண்டார்...
மிகவும் பொருத்தமாக இருந்தது அவருக்கு...
எனக்குச் சூட்டிய மாலைகளின் ரோஜாக்கள்
என் எதிர்க்கவிதைக்காரர்களின்
வாசல்களில் உதிர்ந்தன...
பூ நாகங்கள் என் காரில் என் இருத்தலைச் சுற்றிப் பின்னிக்கொண்டன
இப்போது நான் காரில் ஏறி அமர்ந்தாக வேண்டும்...
யார்யாரோ கைபேசிகளில் என்னைப் படம் பிடிக்க
பின்னால் இருந்த அரைவட்ட மயில்தோகை
வெட்கமுடன் தலைகவிழ்ந்திருந்தது..
என் மீதும் கார்மீதும் வெளிச்சம் பாய்ச்சியபடியிருந்தனர் என் ஆசான் கவிகள்..
அவர்கள் ஏந்தி வரும் விளக்குக் கம்பத்தைச் சுற்றி
மல்லிகைக் கொடி படர்வதும்
பூப்பதுமாய் இருக்க...
நான் அமரமுடியாமல் நெளிந்தேன்...
என்னைப் படம்பிடித்தவர்களின் கைபேசித் திரைகளில்
பாம்புகள் பதிவாகியிருந்தன...
கார் மெல்ல நகர்ந்தது...
உடன் வந்தவர்கள் ஏதேதோ உரைத்தபடி நடக்க...
உரை நடை மெல்ல கவிதைப்பூக்களை
மிதித்தபடியே மிதந்து கொண்டிருந்தது..
வாத்தியக்காரர்களின் இலக்கிய வாசிப்பில்
வெளிச்சம் காட்டிய விளக்குகளில்
தவில் சத்தம் ஒளிர்ந்தபடியே இருந்தது...
எல்லோரும்
காரையும் என்னையும் வேலைப்பாடுகளையும்
விட்டுவிட்டு கலைந்துவிட
தெருவெங்கும் வெளிச்சம் மட்டுமே மிச்சமிருந்தது...
ராகவபிரியன்

Thursday, July 12, 2018

பாரதி கவிதா வேள்வி...டிசம்பர் 1982

அது சூலை 1982..சிக்கல்கள் நிறைந்த ஒரு அனாதையான இருபத்து மூன்று வயது வேலையற்ற பட்டதாரி இளைஞனின் பட்டினி இழையை தொட்டுப்பார்க்கும் ஆவல் நிறைந்த காலை..தான் யாரெனும் கேள்வி வலையொன்றை எப்போதோ அவன் தனக்குள்ளும் வெளியுலகிலும் பின்னிக்கொண்டிருந்த விடிந்து வெகு நேரமாகியும் காலைபசியின்னும் தீர்ந்திராத வறுமையின் உக்கிர நிமிடங்களில் மிகவும் அழகான வசீகரமான கையெழுத்தில் ஒரு அஞ்சல் அட்டை..அவனை பாரதி நூற்றாண்டு விழாவில் ..அங்கு கவியோகி சுத்தானந்த பாரதி தலைமையேற்கும் கவியரங்கில் கலந்து கொள்ள அழைத்துக்கொண்டிருந்தது..அந்த அட்டை அன்று அவனுள் ஏற்படுத்தியிருந்த அதிர்வுகள் இன்றும் கூட அவனால் வார்த்தைகளில் சொல்லமுடியாதவை..அன்று அவனால் நம்பமுடியாமல் தான் இருந்தது...அந்த வசீகரக் கையெழுத்திற்கு சொந்தக் காரர்..கவிஞர் இளசை அருணா....
ஒன்றிரண்டு படைப்புகள் மட்டுமே சில நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளியாகியிருந்த அப்பெயரறியாச் சிறுவனின் இலக்கியப் பயணத்தைத் துவக்கப் போகுமிடம் எட்டயபுரத்தின் பாரதி ஓடிவிளையாடிய வீட்டின் வாசல் படிகள் என்றால் அது காலம் நிச்சயத்த கடவு என்பதைத் தவிர வேறென்ன...? அதை நினைத்து நினைத்து இப்போதும் கூட அவனின் இதயக்கூட்டிற்குள் ஒருமுறையாவது முண்டாசொன்றை கட்டிப்பார்த்து பிறகு அவிழ்த்து வைக்கும் காட்சியைக் கண்டு அடிக்கடி ரசித்துக்கொண்டிருக்கிறான்..
அதீத ஆனந்தம் கொண்டு ஆடியும் பாடியும் பள்ளுப் பண்களை பின்னிக்கொண்டும் அந்த அஞ்சல் அட்டையை அவனின் குடும்பத்தாரிடமும் நண்பர்களிடமும் நகர்திப்பார்க்கிறான்..நகர்வார்களா...திருவாரூரிலிருந்து எட்டயபுரம் வரைக்கான பயணச்செலவென்பது பத்து நபர்களுடைய அவன் குடும்பத்தின் மூன்று வேளைச் சாப்பாடு...
அம்பி நாகராஜன் மற்றும் அவனுடைய நண்பர்கள் உண்டியல் ஏந்தி ஊர்வலம் வருகிறார்கள்..அதற்குள் இளசை அருணா தளர்வற்ற தொனியில் கவியரங்கில் வேட்டிச் சட்டை மட்டுமே அணிந்து கவிபாடவேண்டுமெனும் ஒலையை அவனுக்கு அனுப்பித் தருகிறார்..அவனிடம் ஒரு கிழிந்த லுங்கியும் ஒரே ஒரு நல்ல சட்டையும் இருக்கிறது...முறையான இலக்கிய அறிவோ போதிய வாசிப்பறிவோ நல்ல கவிதைகளோ இல்லாமல் டிசம்பர் 10ல் தன்னந்தனியனாய் கோவில்பட்டிவரை பயணச்சீட்டு வாங்கி பொதுப்பெட்டியில் பயணிக்கிறான்...நிறுத்தங்கள் தோறும் உரத்துக் கேட்கும் தேனீர் சிற்றுண்டிச் சப்தங்களால் அவன் வயிற்றை நிரப்பிக் கொள்கிறான்...
இலக்கியமென்பது நடைமேடைகளில் உறங்குவதும் அதைப் பாடிவைப்பதும் பட்டினியைத் தந்த படைத்தவனை நன்றி கூறி படைப்புகளை ஆக்குவதும் தான் என்பதையறியாமல் கோவில்பட்டி தொடர்வண்டி நிலைய நடைமேடையில் உறங்குகிறான்...
காலையில் அந்தச் சிறுவன் அரை நிர்வானமாய் கூனிக் குருகி ஒருகுழாயடியில் குளிக்கும் போதுதான் அவன் கொண்டுவந்திருந்த மஞ்சள் பை காணாமல் போய்விடுகிறது...இயலாமையும் வெம்மையும் அவனை அரை நிர்வானமாய் விரட்ட நிலைய அதிகாரியிடம் தன் நிலையைச் சொல்கிறான்..இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பாரதி..நிலைய அதிகாரியிடம் எப்படிச் சொன்னாரோ...புதிர்கள் புரிந்துகொள்ளவும் புறக்கணித்துவிடவும் முடியாதவை... அந்த நிலையத்தில் தொலைந்த பாரதியின்முண்டாசு வேட்டியொன்றையும் ஒரு புத்தம் புதிய சட்டையையும் பத்து வெள்ளைத் தாள்களையும் புதுப்பேணா ஒன்றையும் ஒரு ஒருரூபாய்த் தாளொன்றையும் தருகிறார்..கடையேழு வள்ளல்களின் புதுப்பிறவியாய் உருவெடுத்து வந்திருந்த அந்த எட்டாவது வள்ளல் நிலைய அதிகாரி...எக்காரணம் கொண்டும் எந்த இடத்திலும் எக்காலத்தும் தன் பெயரைச் சொல்லிவிடக்கூடாதென்று சத்தியம் வாங்கிக்கொள்கிறார்..
அந்தச் சிறுவன் எவ்வளவு வற்புறுத்தியும் தேனீர்கூட அருந்த மறுத்து ஒரு இருபது முப்பது வரிகள் எழுதிக் காண்பிக்கிறான்...அவரும் மனம் கனிந்து அவனை வாழ்த்தி ஆசி வழங்கி எட்டயபுரத்திற்கான பாதையையும் பேருந்துத் தடத்தையும் அறிவுறுத்துகிறார்...வறுமையின் பிணக்குகளால் வாழ்வின் கணக்குகள் விடையற்று நிர்கதியாய் இறங்குவது போல் எட்டயபுரத்தில் கால் பதிக்கும் அச்சிறுவன் தன்னை பாரதி ஓடிவந்து ஆலிங்கனம் செய்துகொள்வதாய் கற்பனை செய்கிறான்..கால்களும் மனமும் உடலும் புதுவண்ணம் பெற பாரதியின் வீட்டின் வாசல் படியில் உணர்வுகள் மேலிட வீழ்ந்து வணங்குகிறான்..தள்ளி நின்று கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து அவனைத் தூக்குகிறார்கள்...தம்பி நீங்கள்..என்று கேட்டுவிட்டு...நான் தான் இளசை அருணா என்ற கம்பீரக் குரல்கேட்டு...தேம்பித்தேம்பி அழுதவனுக்கு முதலில் ஒரு கோப்பைத் தேனீரை நீட்டிய கரங்கள் பாரதியின் பால்ய நண்பர் கவியோகி சுத்தானந்த பாரதியினுடையவை...அந்தப் பெரியவரை விழுந்து வணங்குகிறான் மீண்டுமொருமுறை..
வரிசையாய்க் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்...அச்சிறுவனை மேடைக்கு அழைக்கிறார்கள்...எல்லோரும் மேடையையே பார்க்கிறார்கள்..
மேடையில் ஒரு ஓவியமாய் வரையப்பட்டிருந்த அந்த மஹாகவி..அன்று அதீத ஆனந்தமாய்க் காணப்பட்டார்...
தொடர்வண்டிச் சித்தன்
விரும்புமேலும் உணர்ச்சிகளைக் காட்டு
கருத்து

Saturday, July 7, 2018

துரோகங்களை இடுப்பில் சுற்றியிருக்கும் கவிதை

துரோகங்களை இடுப்பில் சுற்றியிருக்கும் கவிதை...
என் முப்பாட்டனின் கவிக்காடுகள்
அவனின் இடுப்பில் ..
மானம் மறைத்த
இலக்கிய இலையுடையாய்
மாபெரும் சங்கக் கொடிவார் கட்டி
இறுக்கியிருக்கும்..
தலை நிமிர்ந்து
காட்டின் தெருவெங்கும் அலைவான்..
திடீர் தரைக்காற்றொன்று
வார் அறுத்து வீசியெறியும்
அப்பொழுதொன்றில்
அவன் மானம்... அவமானம்..
அதன் பிறகே
அவன் நவீன
கவிதையை உடையென உடுத்தினான்..
இலைக் கவிதைகள்
சருகென சுற்றிக் காய்கையில்
காலாதீதத்தின் துரோகங்களில்
அவ்வப்போது
தன்மானமுடன்
உதிரமென உதிர்வான்..
பருத்திக் காடுகளில்
பட்டுப் பூச்சிகளில்
மிருகத் தோல்களில்
பன்னாட்டு வர்த்தக் கூடங்களில்
விவாத அரங்கங்களில்
பின் நவீன
மானம் மறைக்க
கவி நெய்தவன்
அடைய முடியா
இலக்கிய தேனீரில் நனைத்தெடுத்த
வாரின் முனையில்
கொக்கியை இணைக்க..
மானம் இனி வெளியேறும்
வாசல் கதவுகளை
இறுக்கிப் பிணைத்தான்..
தன் இடுப்பு வாரில்
சீனத் தடுப்புச் சுவரமைத்து
வெளியெங்கும்
பளபளக்கும் வண்ணக் களிம்புதடவி
தொடர்ந்து தேய்த்தான்..
அவன் கவிதைகள்
மின்னத் தொடங்கின..
இனி இருட்டு மானம்
வெளிச்சம் கண்டு
வெட்கப்படாதென
வீரம் பேசினான்..
ஒரு விவாத அரங்கில்
அவனின் இடுப்பு வாரவிழ்த்து
ஒரு கவிதைக்காக
பெயரறியா துரோகங்களால்
துடிதுடிக்க தொடர்ந்து தாக்கப்பட்டான்..
அவன் மானம்

இடுப்பெங்கும்
இப்போது துரோக கவிதையிலைகளால்
செதுக்கப்பட்ட ஒரு
முப்பாட்டன் சிலையென
முக நூல் தூண் ஒன்றில்
கைகூப்பி நின்று கொண்டிருக்க
அதன் மேல் தான்
இளைஞர்கள் தங்கள்
தூமையையும் விந்துவையும்
தடவிப் போகிறார்கள்...
ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...