Tuesday, December 19, 2017

a challenge

எனக்குள் ஒரு பதப்படுத்தப்பட்ட குதிரை இருந்தது..
அதைப் பார்க்க வருபவர்களை
நான் நுழைவுச் சீட்டு எடுக்கச் சொல்கிறேன்..
சிலர் சத்தமின்றி எடுக்கிறார்கள்
சிலர் கட்டணம் அதிகமென கூச்சலிடுகிறார்கள்..
சிலர் அதீத ஆவலில்
குதிரை போலவே தலையைத் திருப்புகிறார்கள்..
அந்தக் குதிரை
முன்னொரு காலத்தில்
ஊட்டியிலும் கிண்டியிலும்
முதல் பரிசுகளைக் குவித்திருக்கிறது..
அதன் மீதான
பந்தயபணத்திற்காக
தன் மனைவியை அடகு வைத்திருக்கிறார்கள்..
சிலர் அம்மணமாயும் அலைந்திருக்கிறார்கள்..
அப்போது
அதைப்பற்றி பேசாதவர்களின்
பெயர்களைச் சொல்லிவிடலாம்..
அதை ஒரு நாள்
கொட்டிலில் தடவிக் கொடுக்க
துடித்த பெண்களை உலகம் அறியும்..
அதற்கு கொம்பும் உண்டு
குளம்பும் உண்டு
கடிவாளங்கள் மட்டும் இல்லை..
அதைத்தான் இப்போது
விஷம் வைத்துக் கொன்று விட்டார்கள்..
அதைத்தான்
எனக்குள் வைத்திருக்கிறேன்..
இப்போது
அது உனக்குள் ஓடுவதைப் பார்...
ராகவபிரியன்

No comments:

Post a Comment

  கால யதார்த்தம்...தத்துவ சிறுகதை ----------------------------------------------- பஞ்சப்பராரியாய் கோவில் வளாகங்களில் சுற்றித்திரிந்தவரை இன்ற...