Thursday, September 26, 2019

புனிதத்தின் வாசம் அடைக்கப்பட்ட
பொடியொன்றை
ஆன்ம மனதின்
கூம்புவடிவ சிறு கூண்டில்
அடைக்கிறேன்..
தூபக் காலில் கவிழ்க்கப்பட்ட
கூம்பின் முனையில்
பிரபந்தச் சப்தமெழுப்ப
முனை பற்றி
வாசப் புகை நடனமிடத் தொடங்கியது..
புகையின் கோட்டோவியங்களில்
உச்சிரவஸை
சுட்டு வீழ்த்தினான்
ஒரு கடவுள் மறுப்பாளன்..
அவன் கவிஞனாம் வேறு..
கடவுள் படங்களென
மாட்டப்பட்டிருந்த
குதிரை லாயமொன்றின்
வாசலில்
தூபப் புகை சூழும்
இடமற்ற
செயற்கை அடர்வில்
மனமகிழுந்துவை
நிறுத்த முடியாமல்
இங்கும் அங்குமாய்
திருப்புகிறேன்..
பாதையில் நிறுத்தப்பட்ட
மகிழுந்துவின் ஓட்டுனராய்
பொடி அடைக்கப்படும்
கூண்டுக்குள்
சுருங்கிக் கொண்டுஒரு [ச்]சு வாசமற்ற
வாசனாய்த் தவிக்கிறேன்..

படங்களில் மாட்டப்பட்ட
குதிரைகளை
அவிழ்த்துவிடுங்கள்..
மகிழுந்துவைக்
கொஞ்சம் அவ்விடத்தில்
நிறுத்திக் கொள்கிறேன்...
ராகவபிரியன்

Friday, September 20, 2019

ஒரு பனவனின் பால்ய நினைவுகள்...
குடும்பம் சமூகம் வெளிவட்டாரம் வாழ்வின் அயராத உழைப்பால் பெற்ற வெற்றியின் மீதான பொறாமை..அதனால் அருகிலிருப்போர் மறைமுகமாக நற்பெயருக்கு விளைவிக்கும் களங்கம்.. இவையெல்லாம் உள்மனதில் தோற்றுவிக்கும் நெருக்கடி நிலையின் தாக்குதல்களால் சில பால்ய நினைவுகளைப் பதிவுசெய்ய வேண்டியதாகிறது..
திருப்பறாய்த்துறையில் ஒரு மார்கழி மாதத்தில் மொட்டை மாடியில் அமர்ந்து திருப்பாவையை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறேன்...விடிந்தால் அதை ஒப்புவிக்கும் போட்டியில் வென்றால் ஒரு வெள்ளிக்காசும் ஒரு டம்ளர் ராகிமால்ட்டும் கிடைக்கும்..ஆழ்ந்து புத்தகத்தில் மூழ்கி பின் கண்மூடி வரிகளை மீளுருக்கொணரும் வேளை உஸ் எனும் சத்தம் கேட்க.. கண் திறந்தால் ஒரு நல்ல பாம்பு படமெடுத்து இங்கும் அங்கும் தலையைத் திருப்பியபடியிருக்கிறது..நொடியில் ஓட்டமாய்க்கீழிறங்கி சப்தமிட யாராரோ மாடியேறித் தேடுகிறார்கள்..பாம்பு கண்ணில் படவேயில்லை..
நிசப்தங்களுடனான ஒரு நள்ளிரவின் ஆழ்ந்த உறக்கம்...திருவாரூரின் தொடர்வண்டித் தொழிலாளர் குடியிருப்பில் ஆடிமாதக் காற்று கொணர்ந்து வீசிய குப்பைகள் குவிந்து கிடந்து...வினோத சப்தமெழுப்பிய தருணம் கண் திறக்க...அந்தச் சுவரோத்திலிருந்து புறப்பட்ட ராஜ நாகத்தின் மிக நீண்ட மெல்லிய ஊர்தலை மெளனமாய் பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்..பதற்றங்களும் அதன் துளிகளும் விடமென வேர்வைக்கால்களெங்கும் துளிர்க்க விழித்தே இருந்த இரவும் காலையில் அதைப் பிடிக்க நடந்த முயற்சிகளும்..இன்னமும் மனமெங்கும் ஊர்ந்திருப்பதை அரங்கன் அறிவான்..
திருச்சியில் அன்றைய செஞ்சோஸப் பள்ளியின்..சர்ச்சின் அருகில் ஒரு மலைப்பாம்பு சிறைப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்..
ஆறாமிடத்தில் ராகு இருந்தால் விஷ ஜந்துக்கள் அந்த ஜாதகன் இருக்கும் வரை கண்ணில் படாதென ஜோதிட சாஸ்திரங்கள் சொல்லியிருக்கின்றன..நாங்கள் உத்தியோகம் பார்த்த நிலையங்களில் நிறைய பாம்புகள் குடியிருந்தன...ஒரு உயரதிகாரி...பாம்பைக் கண்டால் நீங்கள் விரும்பிய ஊருக்கு மாற்றல் உத்தரவு வருமென்று கூறியதைக் கேட்டிருக்கிறேன்...எனது வாழ்வின் அனுபவ அறைகளில் பாம்பொன்று கண்ணில் பட்டால் விபரீதங்கள் நிகழ்ந்த வரலாற்றுப் படங்கள் மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்..
திருப்பாவை மனனம் செய்த மறு நாள் தான் அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி விஷம் வைத்து ருஷ்யாவில் கொல்லப்பட்ட செய்தி வர...திருப்பாவை போட்டி ரத்தாகி எனக்கான அன்றைய ராகிமால்ட் கிடைக்காமல் போனது உச்சகட்ட துரதிருஷ்ட்டத்தின் இறுதிக்காட்சியாகிப்போனது..
அரங்கனின் உக்கிரம் பற்றிய எனது எச்சரிக்கைகளைத் தவறாகவே சில தன்னல போலி தகுதியற்றவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்..அரங்கன் அறிவான்..இன்றும் கூட காலையில் அரங்கன் மாலைகள் அடங்கிய பையுடன் தன் கோவிலுக்கு வந்து நடை திறக்கப்படாத அதிர்வில் ஏமாற்றத்துடன் திரும்பியதை ஊர் அறியும்..காலை ஏழு மணி தாண்டியும் அரங்கன் சந்நிதி திறக்கப்படாமல் இருப்பதாலும்...அதனால் பக்தன் உருவில் வந்து சோதித்த அரங்கன் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாலும்..அர்ச்சையின் உக்கிரம் பலமடங்கு அதிகரித்திருப்பதை உணர்ந்தால்...மிருஷ்ட்டா பூஜைகளை செய்ய வேண்டும் நியமங்களுடன் என்ற அரங்கனின் நேரடியான ஆணையிடல் நிகழ்வாகவே ஆன்மீக புத்தகத்தில் அது...பதிவாகியிருக்கிறது..தங்களின் தவறுகளை மறைக்க பிரச்சனையை திசை திருப்பும் முயற்சியும் அரங்கன் சந்நிதி முன்பாகவே வலிந்து நடத்தப்படுகிறது...
போற்றுவோர் போற்றட்டும் ..புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும்..அரங்கன் கீதையில் சொன்ன உண்மைகளை உணர்ந்தவர்கள் அரங்கனின் உண்மையையும் உணர்வார்கள்...ஒரு சிலர் என்னை அரங்கன் என்று அழைத்து அரங்கனை அவமானப்படுத்துகிறார்கள்..நான் அரங்கனில்லை...ஒரு சாமான்ய ஆசாபாசங்கள் நிறைந்த சாதாரண பக்தன் அவ்வளவே..
ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் ஹ்ருதி ஸ்ர்வஸ்ய விஷ்டிதம்..
ஒளிகளுக்கெல்லாம் ஒளியான பரப்பிரம்மம் மாயைக்கு அப்பாற்பட்டது.. ஞானவடிவமானது அறியபடவேண்டிய அது தத்வ ஞானத்தினால் மட்டுமே புரியப்படும்..குறுகிய பார்வையும் தவறான கண்ணோட்டமும் பரப்பிரம்மம் எதிரில் இருந்தாலும் கண்ணை மறைத்துவிடும்...வயதும் அறிவும் அனுபவமும் உள்ள மஹா ஞானவான்களால் கூட புரிந்து கொள்ள முடியாத பரப்பிரம்மம் நிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட நிஜமான உயரமுடையது..அது எல்லோர் இதயத்திலும் மனதிலும் இருந்து மனசாட்சியென்ற பெயரிலும் போற்றப்படக்கூடியது...[என்னளவிலான பொருள்]
திருவரங்கன் திருவடிகளே சரணம்..
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்..
ராகவபிரியன்

Tuesday, September 17, 2019

ஒரு கோவிலின்
கோபுர பொம்மைகளில்
வாக்கு வானம்
கவிந்திருக்கிறது..
அவ்வப்போது
காணாமல் போய்
மீண்டும் குதித்துக் கொத்தும்
கருப்பு இறகு
ஊர்க் குருவிகள் இரண்டு
தொடமுடியாத
வானத்தில் பறந்து
பார்க்கிறது...
பொம்மைப் பழங்களை
மூக்கால் உடைக்க
முடியாமல்
அருகில் பிய்ந்து பறக்கும்
கருப்பும் சிவப்புமான
கொடிக்கம்பத்தில்
அமர்ந்து
இங்கும் அங்கும் பார்த்து
செம்மாந்து போகும்..
இதோ
கோவிலின் கீழே
காய்ந்த வாழைப்பழத்தின்
எச்சங்கள் மேலே
சுற்றிக்கிடக்கும்
பூணூலின் மிச்சங்கள்..
வாக்குப் பசி
வெட்கமறியாதது...
வசிப்பது கோபுரவானமெனினும்
பூணூலைக் கொத்துவதெனின்
புல்லரிக்கும்
குருவிகளுக்கு..
கொத்தும் நொடிகளில்
இலக்கியம் பற்றி
கத்தவும் செய்யும்..
பூணூலைக் கொத்தி
விசிறும் மூக்கின்
வீச்சுக்களில்
கோபுர வானம்
சுருங்கிப் போனதாய்..
உடைந்து விட்டதாய்..
இறுமாப்புடன்
இறகு கோதும்..
பூணூல் அணிந்த
அதிகாரத்திடம்
பொட்டுக் கடலைகளுக்காக
சிறுகு சுருக்கி
சின்னதாய் தத்தி
வேடிக்கை காட்டி
விட்டத்தில்
எதையோ தேடியலைந்ததை மறந்து..
அதிகார வாக்கு வானத்திற்காக
இப்போது
கோவில்களில்
கடவுள் இருக்கிறாரென
கூச்சல் போடுகின்றன..
கோபுர பொம்மைகள் மேல்
வீசப்பட்டு
சிக்கிக் கிடக்கும்
செருப்புகளை
கருப்பு இறகு
குருவிகளிடம்
கீழே தள்ளிவிடும்
விசைகளில்லை..
புறாக்களுக்கான
கோபுர வீடுகளை
குருவிகளுக்கு
யாரும் ஒதுக்குவதில்லை..
அவர்களிடமே
அதிகாரம்
இருந்தாலும் கூட..
நெற்றியில்
பூசப்பட்ட சாம்பலையும்
சீச்சுவர்ணத்தையும்
மூக்கால் துடைத்து
மூச்சு விடும் குருவிகள்
உயர உயரப் பறந்தாலும்
வாக்கு வான
நூல் சுற்றிய கலசங்களில்
செளகர்யமாய் அமர்ந்து
குளிர் காயமுடியாது...
ராகவபிரியன்

Sunday, September 15, 2019

ஒரு குமுட்டி அடுப்பின்
குழிக்குள் நிரப்பப்படும்
கரித்துண்டுகளென
வார்த்தைகள் கருத்து
உள்ளங்கைகளில் ஒட்டிக்கொள்கின்றன..
பற்ற வைத்த நெருப்பை
விசிறிரும்
போதை விசிறிகளின்
தடுமாற்ற நடனம்
வார்த்தைத் துண்டுகளில்
ஒட்டாமல்
புகையாகி சன்னதாய்
புறப்படுகின்றன...
விசிறியை விட்டெறிந்துவிட்டு
ஊத முயல்கையில்
முயலோடும் வரப்புகளில்
கரித்துண்டுகள்
நீண்டு முளைத்து விடுகின்றன..
பற்றிவிடாத
நெருப்பொன்றை
குமுட்டிக்குள்ளிருந்து
கிளப்பமுடியாத
நிஜம் உணர்ந்து
மண்ணெண்ணைப் போத்தலை
பிரபஞ்சமெங்கும்
தேடித்தேயும்
பார்வைக் கால்கள்..
செந்தணல் முளைத்த
இதயப் பரப்பெங்கும்
நான் ரொட்டி சுட்டு
மீந்த வார்த்தைகளில் தான்
அப்பளம் ஒன்றை
பின் நவீனமென
கத்திக்கொண்டிருக்கும்
கழுதையொன்று
சுட்டுப்பார்க்கிறது..
ராகவபிரியன்

Saturday, September 7, 2019

இறைமை என்பது உணரப்படவேண்டும்..அவ்வாறான இறையுணர்வு ஒவ்வொருவரிலும் இருக்கிறதென அறிவோம்..இறைமையை இறையுணர்வை சோதிப்பதும் சோதனைக்குள்ளாக்குவதும் அதன் நிஜத்தன்மையை சந்தேகிக்கும் செயல்பாடுகளும் தவிர்க்கவொன்னா இழப்புகளை ஏற்படுத்திவிடுமென திருமூலர் சொல்கிறார்..
தூய்மை .(1). அருளூண் சுருக்கம் பொறை செவ்வை வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமங் களவு கொலையெனக் காண்பவை நேமியீ ரைந்து நியமத்தனாமே .
அதுபோன்ற இறையுணர்வை அரங்கன் அருளியிருப்பது நம்பமுடியாத ஒன்றாகவே எப்போழ்தும் இருக்கிறது..அதுபோழ்து இந்தச் சிறுவன் ஆறாம் வகுப்புப் படிக்கிறான்..திருப்பறாய்த்துறை விவேகானந்த உயர் நிலைப்பள்ளியில்..அவனின் வகுப்பில் காலாண்டுத் தேர்வு முடிவுகளை ஆசிரியர் வெளியிட இந்தச் சிறுவன் எல்லாப்பாடங்களிலும் முதலாக வருகிறான்..அது மட்டுமல்ல..அதுவரையிலான அப்பள்ளியின் ஆறாம் வகுப்பு வரலாற்றில் கணிதத்தில் அவன் நூறுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கியதை அறிவித்த ஆசான் அச்சிறுவனை அவனின் இருப்பிட உட்காரும் பலகையின் மீதேறி நிற்கவும்..சக மாணவர்களைக்கொண்டு கைத்தட்டவும் பணிக்கிறார்..
மாலையில் அவன் வகுப்புத் தோழன் ஒருவன் அவனுடன் சண்டையிடுகிறான்..ஏற்கனவே இருந்த ஒரே ஒரு வெள்ளைச் சீருடைச் சட்டை கிழிக்கப்பட அச்சிறுவன் அவமானத்தில் அழத்தொடங்குகிறான்..அவனின் வேறு சில நண்பர்கள் அந்த பொறாமையாற்பட்ட சிறுவனை மீண்டும் வேறு போட்டியில் வெற்றி கொள் என போதிக்க..உடனே..அந்தத் தோழன் இச் சிறுவனை மிதிவண்டிப் போட்டிக்கு அழைக்கிறான்...
தோழனும் அக்ரஹாரத்தைச் சேர்ந்த சிறுவனெனினும் பணக்காரன்..அப்போது அவனிடம் மிதிவண்டியொன்று இருந்தது..ராலே மிதிவண்டிகள் அப்போதைய பண்பாட்டுத் தளத்தின் பொறாமைக்கான காரணி..இச்சிறுவனிடம் மிதிவண்டி இல்லை..கூனிக் குறுகிப்போகிறான்..அவனுடைய தமிழாசிரியர்..அவரின் இடது கை மணிக்கட்டிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும்..செயலற்று..வலது கையால் தான் அவரால் இயக்கங்களை நிகழ்த்த முடியும்..அவரின் பெயர் இப்போழ்தில் நினைவு வர மறுக்கிறது...அவர்..தீவிர சைவப்பற்றாளர்..இச்சிறுவனிடம் ஒருமுறை மாணிக்க வாசகரின் பாடல் ஒன்றைத் தந்து மனனம் செய்யச் சொல்ல..இச்சிறுவனும் அடுத்த நாளே ஒப்பிக்க அவர் பரிசாகத் தந்த காலணா..நாணயத்தை புத்தகப்பையில் வைத்திருந்தான்..அதைக் கொடுத்து ஒரு வாடகை மிதிவண்டி எடுத்து வந்து போட்டிக்குத் தயாரானான்..அக்ரஹாரமே திரண்டு நின்று வேடிக்கைப் பார்த்தது..மேலக்கோடியில் இருக்கும் இச்சிறுவனின் வீட்டிலிருந்து கீழக்கோடி பள்ளி மைதானத்தை ஒரு சுற்று வந்து பெருமாள் கோவிலில் முடிக்கவேண்டும்..
ஏழையாயும் நோஞ்சானாயும் பட்டினியுடனும் இருக்கும் இச்சிறுவனும் பழைய மிதிவண்டியும் கண்டிப்பாக தோற்றுவிடும்..பணக்கார ஆறாம் வகுப்பிலேயே ஆஜானுபாகுவான சிறுவனும் புத்தம் புதிய ராலே மிதிவண்டியும் கண்டிப்பாக வென்று விடுமென நினைத்து..அவன் பக்கம் அத்தனை பேரும் நின்றிருக்க..இச்சிறுவன் பக்கம் அப்போதைய அடுத்த வீட்டு அண்ணன் ராமநாதன் நம்பிக்கையோடு நின்றிருக்க..அரங்கனும் உடனிருக்க..போட்டி துவங்கியது..
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்மையும் பொய்மையும் ஆயினார்க்கு
சோதியுமாய் இருள் ஆயினார்க்கு
துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்கு
பாதியுமாய் முற்றும் ஆயினார்க்குப்
பந்தமுமாய் வீடும் ஆயினார்க்கு
ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு
ஆடப் பொற் சுண்ணம் இடித்தது நாமே..
[மாணிக்க வாசகர்..]
காலணா பெற்றுத் தந்த அந்தப் பாடலை உரக்கச் சொல்லியபடியே இச்சிறுவன் மிதிவண்டியை மிதித்து பெருமாள் கோவில் வாசல் வருகிறான்..பலத்த கரகோஷம்..அந்த ஆறாம் வகுப்புத் தோழன் இச்சிறுவனை வெற்றி கொள்ள முடியாத நிஜத்தையுணர்ந்து..ராலே மிதிவண்டியை வீதியில் போட்டு விட்டு வீட்டிற்குள்ளே ஓடி விட்டதாய் எல்லோரும் பேசிக்கொண்டார்கள்..இச் சிறுவனும் வீடு வந்து முகம் கழுவி திரு நீறு பூசி..பெருமாள் கோவிலில் ஆயிர நாமம் சொல்லத் தொடங்கினான்..
ராகவபிரியன்

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...