Friday, July 23, 2021

 தனி மனித மனம் தனக்கிழைக்கப்பட்ட அல்லது தான் அனுபவித்த துன்ப நிகழ்வுகளை மறப்பதற்கே முயல்கிறது...சமுதாய பொதுமன எண்ண ஓட்டங்களிலும் அதை ஒற்றியே துன்ப நிகழ்வுகளோ அல்லது வெறுக்கத்தக்க நிகழ்வுகளோ வரலாற்றில் பதியப்பட்டிருந்தால்... அதை மறக்கவோ அல்லது சிந்தனையிலிருந்து வலிந்து அகற்றவோ

நிகழ் சமுதாய அதிகார அரசியலமைப்புகளால் நுட்பமாகக் கற்றுத்தரப்படுகின்றன...
மதம் சார்ந்த தாக்குதல்கள் இந்திய துணைக் கண்டமெங்கும் அழிக்க முடியாத வரலாற்று துன்ப எச்சங்களை விட்டுச் சென்றிருக்கின்றன...எனினும் துன்பம் தந்த நிகழ்வைக் கொண்டாட்டமாய் அல்லது வணங்கத்தக்க நிகழ்வாய் மாற்றியமைத்துவிட்டால் ஒரு சில நூற்றாண்டுகள் கடந்த சமுதாய மாந்தர்கள் ...தங்கள் வாழ்வின் நெடும் பயண எண்ணங்களில் அந்நிகழ்வைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்களாகவோ அல்லது நசுக்கப்பட்டவர்களாகவோ வாழ்ந்து முடிந்துவிடுவார்கள்... இது அரசியலின் அதிகாரத்திற்கான அவசிய கருவியாக பயன்பட்டதை மறுப்பதற்கு இடமில்லை...வரலாற்றின் கணக்குப் புத்தகத்தில் இஸ்லாமிய அரசர்களால் சிதைக்கப்பட்ட கோவில்கள் கணக்கில் அடங்காதவை...ஏன் கோவில்கள் அழிக்கப்படவேண்டுமென்ற சிந்தனையை இன்றைய சமுதாயத்தின் பொது எண்ண ஓட்டங்களில் இருந்து நீக்குவதற்கான வடிகட்டிய நுட்பமான எண்ண அரசியல் தாக்குதல்களை சமுதாயம் புரிந்து கொள்வதென்பது சாதாரணர்களின் எண்ண வீச்சின் விஸ்தீரணத்திற்கு அப்பாற்பட்டது..
ஏன் கோவில்கள் கட்டப்பட்டன என்ற கேள்வியே எந்த தனிமனித சிந்தனையிலும் துளிர்விடமுடியாதபடியான வாழ்வியல் திணிக்கப்பட்டிருக்கும் அவலம் நிகழும் காலகட்டம்...இப்போது மட்டுமல்ல...தொடர்ந்து வரலாற்றில் பதிவாகியுள்ள நிஜம்...இந்த உண்மை விவேகானந்தரை புரட்டிப் போடுகிறது...
ஆங்கிலேய ஆட்சியாளர்களால் சென்னையிலிருந்து வெளிவந்த பிரபுத்த பாரதா...அதாவது விழிப்புணர்வு பெற்ற இந்தியா என்ற மாத இதழ் இமாச்சலபிரதேசத்திலிருக்கும் அல்மோரா என்ற இடத்திற்கு மாற்றப்படுகிறது...இது இந்துக்கள் தங்கள் ஆன்மீக எண்ணங்களுக்கான கலாச்சார பாதுகாப்பிற்கான விளை நிலைமாய் கருதிய ஒரு இதழ்...அங்கே மதம் சார்ந்த இலக்கிய தாக்குதலை அதிகார கைகளில் கொடிய ஆயுதம் ஏந்தி நிகழ்த்துகிறார்கள்... வரலாற்று நிகழ்வு மறைக்கப்பட்டது மட்டுமல்ல இன்றைய சமுதாய பொது எண்ண அறைகளில் இருந்து அதிகார ஆற்றலால் அகற்றப்பட்டதும் கூட....வரலாற்றின் கருப்பு பக்கங்களில் பதிவாகியுள்ள இலக்கிய துன்பியல் நிகழ்வு ...இதைப் பற்றி விவேகானந்தர்....
Once more awake என்ற தலைப்பில் ஒரு ஆங்கில கவிதையை எழுதி அனுப்புகிறார்..அந்த இதழ் அதை அட்டையில் ஆகப்பெரிய எழுத்தில் பிரசுரிக்கிறது...நெடிய நீள் கவிதையின் முதல் பத்தியை மட்டும் அப்படியே தருகிறேன்....
For sleep, it was not death to bring thee life
Anew and rest to lotus eys for visions
Daring yet The world in need awaits O Truth
No Death for Thee...
நாம் அனைத்தையும் மறந்து விட்டோம்...நம் கோவில்களை நம் கலாச்சாரத்தை நமது கலாச்சாரத்தின் மீது தொன்று தொட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களை...இருந்தும் இன்னமும் புயலினின்று மீண்டு எப்போதும் துளிர்விடும் புல்லின் நிரந்தர சுவாசமாய் காப்பாற்றப்பட்ட தொன்ம நிகழ்வுகளை...மற்றும் எல்லாவற்றையும்...மறந்துவிட்டோம்....நமது இலக்கியங்கள் பேசிய உண்மையை திரித்து பொருள் கூறவும் கற்றுக் கொண்டோம்...நமது மதமும் வாழ்வியலும் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன...அதை கடந்த சில நூற்றாண்டுகளில் அன்னியர் ஆட்சியில் திரித்துப் பொருள் கூறி கலாச்சார தாக்குதல் நிகழ்த்தவும் நாம் தயங்கவில்லை...உதாரணத்திற்கு ஒரு குறுந்தொகை பாடல் ....உறையூர் சல்லியன் குமாரனார் என்ற அருமையான கவி....
கைவினை மாக்கள் தன் செய்வினை முடிமார்
சுரும்புண மலர்ந்த வாசம் கீழ்ப்பட
நீடிய வரம்பின் வாடிய விடினும்
கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவோம் என்னாது
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்
நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும..
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்

நின் இன்றமைதல் வல்லாமாறே....
வரப்பில் உழவர் கவனிக்காமல் வாடிய நெய்தல் பூ மீண்டும் பூக்கும்...அது போல் தனக்கு துன்பம் இழைத்தவர்களை அவர்களின் துன்பச் செயலை பொருட் படுத்தாமல் அல்லது மறந்துவிட்டு ஏற்றுக்கொள்ளும் வழமை அன்றைய தமிழ் மண்ணின் உலகம் போற்றிய கலாச்சார மேன்மை...ஆனால் இதை இன்றைய உரையாசிரியர்கள் திரித்து பொருள் கூறுவது தான் கொடுமை....
இது போன்ற பொது மன எண்ணங்களில் செலுத்தாற்றல் மூலம் திணிக்கப்படும் அல்லது மறக்கடிக்கப்படும் வரலாற்று நிகழ்வுகளை ப்ராய்ட் சைக்கலாஜிகள் ரெப்ரசன் என்று சொல்கிறார்...உண்மை உறங்காதது மட்டுமல்ல...உரத்தும் பேசும்...
ராகவபிரியன்




Saturday, July 10, 2021

 வேகமெனும் பூச்சி

உன்னுள்
எப்படி
திடீரென உருக்கொள்கிறது?
விரிக்க முடியாத
வாழ்வின் சாலையில்
ஏன்
அதிவேகம் கூட்டி
அப்படிச் செல்கிறது?
சாலையை அகலப்படுத்துதல்
சரளைகளை கொட்டி சமனித்தல்
தார் உருக்கி ஊற்றி
சக்கர நகர்விற்காக
தயார் செய்தல்
உன் ஆன்மா பார்த்திராதா
குருட்டுச் செயல்களா...?
உன் சக்கரங்களை
சுழலச் செய்வதில்
குழப்பமற்றிருக்கிறாயா...
உன் ஆணவமோ அறிவோ
கட்டுப்பாட்டிற்குள்
வைக்கப்பட்டிருக்கிறதா...?
உன் அனுபவமும் தியாகமும்
வேகமாணியில்
படிப்படியாய் மேலெழும்பி
உச்சம் தொட்டிருக்கிறதா?
இதெதுவும்
இல்லாத ஒரு பூச்சியை
நீயாக உருவாக்கி
சாலையில்
பறக்க விட்டிருக்கிறாய்?
பார்

இப்போது
சாலையில் பயனிப்போரின்
பார்வையில்
ஆகச் சிறிய பூச்சியாய்....நீ
ராகவபிரியன்


Wednesday, July 7, 2021

 காலத்தின் ஆற்றங்கரையில் நிற்கிறேன்-

குதித்தோடும் நினைவு வெள்ளெமென பெருகி

நுரைத்து நகர்ந்தபடியிருக்கிறது-

துணி துவைக்கும் சப்தங்களை

சதா எழுப்பும் சங்கீதா...

மெளனமான மீனொன்றாக காலைக் கவ்வுகிறாள்...

கொரோணாவின்

அலைகளில் அவள் மரணம்

என் சப்தங்களை

துவைத்தெடுக்கிறது....

சப்தமின்றி அந்த மீன் நகர்ந்து செல்ல...

நதி விரைந்து கொண்டேயிருக்கிறது...


சந்தியா வந்தனம் செய்யும்

சடகோபனின்

அர்க்கியங்கள் மேலேறி மிதக்கின்றன...

விண்ணை நோக்கி 

துளித்துளியாய் புறப்பட்டு

என் கண்ணின் வழியே 

பெருமழையாய் நதியில் இறங்குகிறது...

மழை ஆற்றில் விழும் சப்தம்

கோவிந்தம் தர்பயாமி....

என ஒரு துவக்காய்

என்னைத் தள்ளிக் கொண்டே செல்கிறது...


காலைக் கவ்விய அந்த சடகோபமீனின்

உடலெங்கும்

நாமங்கள் வழுக்கு கின்றன...

கொரோணாவின் இரண்டாம் அலையின்

நுரை ஆற்றுப் படிகளில்

அப்பிக்கிடக்கிறது....


கால நதியின் சுழித்தோடும்

மரணங்கள் மிதந்து கொண்டிருக்கும்

மேற்பரப்பிலிருந்து

திடீரென ஒரு மீன்

துள்ளி வெளிவந்து  கரைந்து  நீந்தத்தொடங்க....


படியில் கிடத்திய துண்டை

மீண்டும் தோளில் போர்த்தி

குளிக்காமல் திரும்புகிறேன்...

அணிச்சையாய் துண்டிலிருந்து

ஒரு குழந்தையின் கை

என் கன்னங்களைத் துடைக்கத் தொடங்குகிறது....


ஆறு அதன் போக்கில் போய்க்கொண்டே இருக்கிறது.....

ராகவபிரியன்



  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...